நான் முன்னர் வேலை பார்த்த நிறுவனத்தில் எனக்கு அருண் என ஒரு நண்பர் இருந்தார். அவருக்கு கணினியில் ஆர்வம் அதிகம். கணினியை கழற்றி பொருத்தும் அளவுக்கு சுயமாக கற்றுக் கொண்டவர். நான் அவருடன் கணினி, இணையம், மென்பொருள் பற்றி பேசிக் கொண்டிருப்பேன். ஒருநாள் எந்த இணைய சேவை வேகமானது என நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அவர் சொன்னார் “என் வீட்டு கணினியில் ஒரு இணையதளத்தை திறப்பதற்கே அரைநிமிடம் எடுக்கும். இணைப்பை சொடுக்கி விட்டு நடுவில் வேறு வேலை பார்ப்பேன். திறந்ததும் அதை கவனிப்பேன்”. நான் கேட்டேன் “வேகமான இணையம் இருந்தால் நன்றாய் இருக்குமல்லவா? காத்திருக்க வேண்டியதில்லையே?”. அவர் சொன்னார் “வேகத்தில் என்ன இருக்கிறது? வாழ்க்கையில் எவ்வளவோ விசயங்களுக்காய் காத்திருக்க தயாராய் இருக்கிறோம். டிராபிக்கில், அரசு அலுவலகங்களில், காண்டீனில் சாப்பாட்டுக்கு, இடத்துக்கு காத்திருக்கையில் தாமதமாகும் போது நாம் எரிச்சலாவதில்லையே. அப்படி இருக்க ஏன் ஒரு இணையதளம் நொடியில் திறக்க வேண்டும் என எதிர்பார்க்க வேண்டும்? அரைநொடியில் என்ன இழந்து விடப் போகிறோம். அந்த இடைவெளியில் வேறெதையாவது கணினியில் செய்யலாமே?”.