Skip to main content

சாருவின் வாசகர்கள்

நமக்கு முட்டாள்தனமாகவும் அபத்தமாகவும் சுரண்டலாகவும் தோன்றுகிற விசயங்களை ரொம்ப நேர்மையாக உண்மையாக செய்கிறவர்கள் இருக்கிறார்கள். உதாரணமாய், எழுத்தாளர்களுக்கு ரசிகர் மன்றம் அமைப்பவர்களை நான் என்றும் எதிர்க்கிறவன். எழுத்தாளனின் பிம்பம் அவன் எழுத்தை ஆக்கிரமிப்பது தவறு என நினைக்கிறேன். எழுத்தாளனை முழுக்க அகற்றிய பின்பு தான் வாசிக்க துவங்க வேண்டும். ஆனால் அதேநேரம் இந்த ரசிகர்களின் அன்பும் தூய்மையானது தான். அதை நான் இத்தனைக் காலமும் புரியாமல் இருந்து விட்டேன். நான் அவர்களை ஒருவித உளவியல் அடிமைகள் என புரிந்திருந்தேன். அது தவறான புரிதல்.

 நேற்று சாரு வாசகர் வட்டத்தின் இரண்டு பெரிய தலைகள் உரையாடிக் கொண்டிருந்ததை கவனித்த போது எனக்கு இப்படி பட்டது: “இவர்கள் அவரது குறைகளையும் பிரச்சனைகளையும் தெரிந்தே அவரை நேசிக்கிறார்கள். இதற்குள் சந்தர்ப்பவாதமும் சுரண்டலும் இருக்கிறது. அதேநேரம் ஆத்மார்த்தமான பிரியமும் இருக்கிறது. அவர் ஒரு father figure ஆகவும் நண்பராகவும் இவர்களுக்கு இருக்கிறார்.”
 சு.ரா வாசகர்களை சமமான நண்பனாக நடத்துவார். அந்த உறவு சீராக நிதானமாக அக்கறை சார்ந்ததாக இருக்கும். சாருவை போன்றவர்கள் வேறு வகை. வாசகர்களை கோழி தன் குஞ்சுகளை கொண்டு திரிவது போல் அழைத்து போவார். கொத்தி விரட்டுவார். பாதுகாக்கவும் செய்வார். இதை அவர்கள் தெரிந்தே கூட இருக்கிறார்கள்.
சாருவின் வாசக நண்பர்களில் ஒ.பி.எஸ், சசிகலா, நத்தம் போல் ஒரு உள் அதிகார வட்டம் உள்ளது. அவர்களை சமாதானப்படுத்த அடிக்கடி சாரு யாரையாவது போட்டு மிதிப்பார். மிதிபடுகிறவர்களுக்கு சாரு ஏன் இப்படி பண்ணுகிறார் என தெரியும். அவர்கள் அவரது கோபம் ஆறும் வரை, அரசியல் வானம் தெளியும் வரை பொறுமையாக இருக்கிறார்கள். நேற்று நான் இவர்கள் இதையெல்லாம் தெரிந்தும் அவரோடு இணக்கமாக இருக்கிறார்கள் என அறிந்து வியந்தேன். இது சமத்துவமான உறவு அல்ல. எழுத்தாள-வாசக உறவு இப்படி இருக்கக் கூடாது என நான் நம்புகிறேன். ஆனால் வாழ்க்கையில் சிலநேரம் பிழைகளில் நிறைய உண்மை இருக்கும். இந்த பிழையான உறவில் பூரணமான கனிந்த அன்பு உள்ளது. சமத்துவமாகவோ சமத்துவமற்றோ எப்படியும் நேசிக்கலாம் என்பது தானே சுதந்திரம்.

மற்றவர் பார்வையில் இருந்து உலகைப் பார்க்கும் போது மனம் சட்டென விரிகிறது. 

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...