Skip to main content

சாதியை கடந்தவர்கள் இருக்கிறார்களா?


ஆணவக்கொலைகளை சாடுவது எளிது, ஆனால் சாதியை கடப்பது அது போல் சுலபம் அல்ல என கார்டூனிஸ்ட் பாலாவின் பதிவு ஒன்று பார்த்தேன். எனக்கு இது பற்றி இரண்டு விசயங்கள் தோன்றுகின்றன.

1)   எதையும் துண்டு போட்டு தாண்டும் மனநிலையில் இருக்க வேண்டியதில்லை. ஒருவர் சாதியை ஆதரித்தபடி இன்னொரு நிலையில் அதை எதிர்க்கலாம். உதாரணமா, சாதி வன்முறையை எதிர்க்கிறவர் ஒரு அடையாளமாய், பண்பாடாய், சௌகர்யமாய் அதை ஏற்கலாம். அதில் எந்த பாசாங்கும் இல்லை.
2)   சாதியை ஏன் தவிர்க்க முடிவதில்லை? கிராமத்தில் அது நிலம் சார்ந்த கட்டமைப்பை உருவாக்குகிறது. இன்னொரு புறம் உறவுகளின் அருகாமைக்கு சாதி தான் ஒரே மார்க்கம். சின்ன சின்ன உதவிகள், பிரச்சனைகளின் போது ஆசுவாசம் எல்லாமே உறவுகளிடம் இருந்து சுலபத்தில் கிடைக்கின்றன (சிலநேரம் அவர்களே தலைவலியாக இருந்தாலும் கூட). உறவுக்காரர்கள் தாம் நீங்கள் சமூகத்தில் எங்கு இருக்கிறீர்கள் என உறுதிப்படுத்துகிறார்கள். அவர்கள் உங்களுக்கு தரும் மரியாதை சமூகம் தரும் மரியாதையாக நீள்கிறது. உறவுகள் எனும் வலைப்பின்னல் சாதியை நம்பி உள்ளது. அதை விட முக்கியமாய் உங்கள் பிள்ளைகளுக்கு சாதி சார்ந்த சம்பிரதாயங்கள், கதைகள், முன்னோர் வரலாறு, செண்டிமெண்டுகளை ஊட்டுவதும் உறவுக்காரர்கள் தாம்.
சுட்டிக்காட்ட ஒரு உறவுக்காரர் இல்லாத ஒருவரை கற்பனை பண்ணிப் பாருங்கள். அவர் தனக்கென ஒரு ஊரே இல்லாதவராக இருப்பார். ஆக சாதி உறவுகளைத் தருகிறது, உறவுகள் ஊரைத் தருகின்றன. சாதி இல்லாதவன் உறவுகளோ ஊரோ இல்லாத ஒரு நாடோடியாக இருக்க வேண்டும். அப்படியானவர்களை எனக்குத் தெரியும். அது ஒரு தனி மனநிலை. பெரும்பாலானோருக்கு அது முடியாது.

பிள்ளைகளுக்கு “சாதிகள் இல்லையடி பாப்பா” என சொல்லி வளர்ப்பதிலோ சாதியற்றவன் என சான்றிதழ் வாங்குவதிலோ பயனில்லை. அவர்களை தம் உறவுகளில் இருந்தும் ஊரில் இருந்து முழுக்க துண்டிக்க வேண்டும். வேரோடு பிடுங்கி வேறு மண்ணில் நட வேண்டும். அது எவ்வளவு வறட்சியாய் கொடூரமாய் இருக்கும் யோசியுங்கள்.

இறுதியாய், சங்கரின் ஆணவக்கொலையை கண்டிப்பவர்கள் தம் பெண்களை வேறு சாதியில் மணம் புரிந்து கொடுப்பார்களா என்றும் சில அறிவுக்கொடுக்குகள் கேட்கிறார்கள். என்ன ஒரு முட்டாள்தனமான லாஜிக். ஆணவக்கொலையை தான் கண்டிப்பவர்கள் ஆணவக்கொலை செய்ய மாட்டார்கள். அவ்வளவு தான். அவர்கள் ஏன் மாற்றுசாதி மணத்தை ஆதரிக்கவில்லை என கேட்கக் கூடாது.


அப்படியே மாற்றுசாதி மணத்தை ஆதரிப்பவர்களும் ஒன்றும் முற்போக்கோ சாதி மறுப்பாளர்களோ அல்ல. என் பிராமணத் தோழி ஒருவர் தன் உறவுகளில் இத்தலைமுறையில் வெவ்வேறு சாதியில் மணம் புரிந்த நான்கைந்து பேர்களை குறிப்பிட்டார். பிறகு அவர் சொன்னார் “எங்க உறவுகளில் சொந்த சாதியில் மணம் புரிந்தவர்கள் ஒரு சில பேர் கூட கிடையாது”. இதன் பொருள் அவரின் உறவுக்காரர்கள் சாதியை விட்டு விட்டார்கள் என்றல்ல. அவர்கள் இன்னும் சாதியுடன் பிணைப்பாய் தான் இருக்கிறார்கள். ஆனால் கொஞ்சம் விட்டுக் கொடுக்க, சமரசம் செய்ய தயாராக இருக்கிறார்கள். சிலரிடம் இந்த நெகிழ்வு இருக்காது. இதை சுலபத்தில் விளக்க இயலாது. மனிதர்கள் இப்படித் தான் கலவைசாதம் போல் இருப்பார்கள். அவர்களை சாதி வெறியர்கள், சாதியற்றவர்கள் என தனித்தனியாக பார்சல் கட்ட முடியாது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...