Skip to main content

கொமாலாவில் தமிழ் எழுத்தாளன்


 

சென்னைக்கு வந்து புத்தகக் கண்காட்சியில் கலந்துகொள்ள ஆசைதான். மைசூரில் இருந்து கிளம்பி சென்னையை அடைந்து ஒருநாள் சுற்றித் திரிந்து அடுத்த நாள் கிளம்பி வந்து சேர வேண்டும். அதற்கு மூன்று நாட்கள் வேண்டும். ஆனால் கர்நாடகாவில் பொங்கலுக்கு ஒருநாள்தான் விடுப்பு. நடுவே ஒரு சனிக்கிழமை வந்தாலும் அன்று அலுவல்ரீதியான பணியுள்ளது. அதற்கும் அனுமதி பெற்று விடுப்பெடுக்கலாம் என்றாலும்கூட என் இரண்டு புத்தகங்களும் இன்னும் அச்சாகி வரவில்லை.

வரவர வாழ்க்கையில் நிராசையும் அவநம்பிக்கையும் பெருகுகிறது. எதுவும் உருப்படவில்லை, எதிர்காலம் இருட்டாகத் தெரிகிறது. மைசூர் அழகாக இருந்தாலும் "பெட்ரோ பரோமாவில்" வரும் கொமாலாவைப் போல ஒரு இறந்த நகரமாக உள்ளது. எப்போதுமே சிறு உறக்கக் கலக்கத்துடன் பாதி விழிப்புடன் இருக்கும் மக்கள். மூச்சுவிடும் தொனியும் பேசுகிறவர்கள். ஏதோ ரகசிய நடவடிக்கைகளைப் போல சிறிய அளவில் வணிகம், வேலை, உரையாடல் என இருக்கிறார்கள். புத்தாண்டு கூட இங்கு ஏதோ பக்கத்து நாட்டு சுதந்திர தினம் போலத்தான் பார்க்கப்படுகிறது. தசரா அன்று மட்டுமே விழித்துக் கொள்ளும் இந்நகரம் "எங்களை இன்னும் 100 ஆண்டுகள் தூங்க விடுங்கடா" எனும் கணக்கில் உள்ளது. இந்த ஊரில் எதாவது ஊர்வலம் நடந்தால்கூட சாமியார்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகளை அழைத்துக் கொண்டு அமைதியாகத் தான் போகிறார்கள். மாலையானால் ஸ்னேக் சாப்பிடுவோம் என்று கடைக்குப் போய் ஒரு தட்டில் சிறிய வெடிகுண்டுகளைப் போல ஐந்து போண்டாக்கள், ஐந்து பஜ்ஜிகளை வைத்து கண்ணைப் பிதுக்கிக் கொன்டு தனியாளாகச் சாப்பிடுகிறார்கள். அப்போ இரவுணவுக்கு என்னதாண்டா சாப்பிடுவீங்க எனக் கேட்கலாம் என்றால் போண்டா தொண்டையில் சிக்கிக்கொண்டு விபரீதமாகி விடுமோ என்று பயமாக இருக்கிறது. பெங்களூரிலாவது நான் வேலை செய்த இடத்தில் தமிழர்களும் மலையாளிகளும் அதிகம். நான் வாழ்ந்த பகுதிகளிலும் கூடத்தான். பெங்களூர் ஒரு குட்டிக் கேரளாதான். ஆனால் மைசூர் ஒரு அசல் அந்நிய நகரம். பெருங்கூட்டத்தையும் ஜன நெரிசடியையும் இடையறா உரையாடல்களையும் விரும்பும் எனக்கு ஏதோ இடுகாட்டில் சமாதிகள் மத்தியில் அமர்ந்திருப்பதைப் போல இருக்கிறது. என் தலையெழுத்து வேலைக்காக இப்படி கொமாலா கொமாலாவாகப் போய்க் கொண்டிருக்கிறேன். எங்கு போனாலும் பல நூற்றாண்டுகள் பழைய ஆவிகள் உட்கார்ந்து கொண்டிருக்கின்றன. எதாவது ஒசூரில் வேலை கிடைத்திருந்தாலும் தப்பித்திருத்திருக்கலாம். ம்ஹும். கடந்த ஜென்மத்தில் கடாமுடா மீசை வைத்துக் கொண்டு அபலைகளைக் கடத்திப் போய் கொன்று தூக்கில் போட்டு பத்து பதினைந்து குழந்தைகளை நான் கிணற்றில் தூக்கிப் போட்டிருக்க வேண்டும். இப்படியெல்லாம் இடைவிடாமல் துன்பப்படுகிறேன்.
அதனால்தான் என்ன வாய்ப்பு கிடைத்தாலும் இந்த கொமாலாவில் இருந்து பைக்கை எடுத்துக்கொண்டு ஓடித் தப்பிப்பதற்காகத் தவிக்கிறேன். திரும்ப வரும்போது கூட கர்நாடக எல்லையில் வைத்து "உள்ளே போகக் கூடாது" என்னைத் தடுத்து திரும்ப அனுப்பிவிட மாட்டார்களா என்று ஒவ்வொரு முறையும் ஆசையாக இருக்கும். ஆனால் படுபாவிகள் அதை மட்டும் பண்ண மாட்டார்கள். இம்முறை தப்பித்து மூன்று நாட்களாவது இருக்கலாம் என்றால் முகாந்திரம் இல்லை.
தமிழ் எழுத்தாளர்கள் யாரும் கர்நாடகாவில் இருக்கக் கூடாது என்று கர்நாடக அரசு எதாவது சட்டம் போட்டால் ஜாலியாக இருக்கும்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...