செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே"
எனும் கட்டுரையில் இருந்து:
வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை.
இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளாகப் பரிணமிக்கின்றன. வனப்பகுதிகளில் வசிக்கின்றன (feral dogs). கைவிடப்பட்ட நகரங்களை இவைத் தமதாக்குகின்றன. மனிதனும் நாயும் சேர்ந்தே உருவானவர்கள் என்பதே வரலாறு. நம்மால் நாய்களும் நாய்களாலும் நாமும் உயிரியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் மாறுதலுக்குள்ளாகிறோம் என்கிறார் ஸ்டீபன் புதியான்ஸ்கி தனது “நாய்களைப் பற்றிய உண்மை” எனும் நூலில் (The Truth About Dogs (2000)). இன்று தில்லியிலும் பிற நகரங்களிலும் நாய்களுக்காகப் போராடும், காவல்துறையிடம் மிதிபட்டுக் கூச்சலிடும் மக்கள் விலங்கு ஆர்வலர்கள் மட்டுமல்ல. அவர்களையும் அவர்களைப் போன்றோரின் நடத்தையை இந்த வீட்டு நாய்கள் உளவியல்ரீதியாகவும் குடலில் செயல்படும் நுண்ணுயிர்களைக் கொண்டு கட்டுப்படுத்துகின்றன என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். நீங்கள் ஒரு நாயை வளர்க்கும்போது அந்த நாயும் உங்களை மறைமுகமாக ‘வளர்க்கிறது’, தனக்குச் சாதகமாக இருக்கும்படி, தன்னைப் போலச் செய்யும்படி மறைமுகமாகப் பயிற்சியளிக்கிறது என்கிறார் புதியான்ஸ்கி. உதாரணமாக, உங்கள் வீட்டில் ஒரு நாய் இருக்கிறது என்று வையுங்கள். அது அடிக்கடி வாசலுக்குப் போய் எட்டிப் பார்த்துவிட்டு அந்நியர்களால் பாதிப்பில்லை என்று உறுதிபண்ணுகிறது. அதைக் கவனிக்கும் உங்களுக்கு ஏற்படும் உணர்வு என்ன? அந்த உணர்வே உங்கள் பிரக்ஞையைச் சற்று நேரத்துக்குச் செலுத்தி அதுவே அந்த வீட்டில் வசிப்பவராக உங்களை வடிவமைக்கிறது. இப்படி எத்தனையோ விசயங்களை நாய்கள் பண்ணுகின்றன.