Skip to main content

விருதுக்கு அங்கீகாரம் இல்லை

 விருதுகளைப் பற்றின என் கருத்து எப்போதுமே இதுதான் - நாம் ஒருவரைக் காதலிக்கிறோம், அதனால் நாம் அவருக்கு அடிமையாகி விடுவதில்லை.முத்தம் ஒரு பரிசு. விருதும் ஒரு பரிசு. நீ எனக்கு அடிமையாக மாட்டாயா எனும் கோரிக்கை அது. நல்ல எழுத்தாளர்கள் தம் தோளில் விழுந்த அழகிய கரங்களை புன்னகையுடன் விலக்கி விட்டு முத்தத்துக்கு நன்றி என்று கடந்துவிடுவார்கள். அவர்கள் எப்போதுமே முத்தமிட்டவர்களை எதிர்ப்பார்கள். மறுப்பார்கள். தம் பாதையில் தொடர்ந்தபடியே இருப்பார்கள். சில எழுத்தாளர்கள் எப்போதுமே மனைவியின் மடியில் பூனையாக இருக்கும் மனநிலை கொண்டவர்கள். அவர்கள் இன்னும் முத்தம் கொடு என்று பின்னாலே திரிவார்கள்.

ஆகையால் நாம் விருதை எதிர்க்கத் தேவையில்லை. அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அது நம்மைப் பயன்படுத்த அனுமதிக்கலாகாது. விருதை அச்சத்துடன் எதிர்கொள்ளத் தேவையில்லை. அரசு, தேசம், தேசியம் ஆபத்தானவை எனும் தாராளமய முற்போக்குச் சிந்த்னையின் விளைவே அவ்வச்சம். ஆனால் தேசமும் நம்மை உள்ளடக்கியதுதான். அது நம்மில் இருந்து விளைவதே. நாமே தேசத்தையும் தேசியத்தையும் அதிகார வர்க்கத்தையும் நம் மனத்திலும் உடலிலும் இருந்து உற்பத்தி செய்கிறோம். அதனாலே அது காதலுக்கும் காமத்துக்கும் நெருக்கமாக வரும் செயல்பாடு என்கிறேன். தேசியத்தின் எழில்மிகு அதரங்களிலே விருது மலர்கிறது. சுகந்தமாக, இனிமையாக இருக்கும். அதன்பின்னுள்ள கூர்மையான பற்களைக் கண்டு நாம் அஞ்சுவதால் பயனில்லை. நாம் அதை விளையாட்டாகக் கையாண்டாலே அது அடங்கிவிடும்.
சாகித்ய அகாடெமியோ பொற்கிழியோ கொடுத்தால் வாங்கிப் பையில் போட்டுக் கொள்வோம். வீடு, செல்வாக்கு, பயணம் என முடிந்த போதெல்லாம் அதைப் பயன்படுத்திக் கொள்வோம். ஆனால் ஒரு முத்தத்துக்காக வாழ்நாள் அடிமையாக முடியாது, தாலி கட்டி குடும்பம் எல்லாம் நடத்த முடியாது என தேசத்தை நோக்கிச் சொல்லி விடுவோம்.
விருது நம்மை அங்கீகரிக்கலாம், நாம் அதை வைத்து விளையாடிவிட்டு விட்டுவிடலாம்.
பின்குறிப்பு: எல்லாவற்றையும் நேரடி அரசியலாகப் பார்ப்போருக்கு நான் சொல்வது புரியாது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...