Skip to main content

டொமனிக் ஆன் தெ லேடீஸ் பர்ஸ்



மிகப்பெரிய தர்க்க ஓட்டை கொண்ட கதை இது. ஆனால் இதை எப்படி இதன் திரைக்கதை எழுத்தாளர்கள் கௌதம் மேனனை நம்ப வைத்து, அவரும் எப்படி மம்முட்டியை நம்ப வைத்து படமாக எடுத்தார்கள் என ஆச்சரியமாக இருக்கிறது. இயல்பாகவே என்னதான் முயன்றாலும் இப்படம் பல்லிளித்தே ஆக வேண்டியிருக்கும் என்பதால் சொதப்பி விடுகிறது.

அதேநேரத்தில் பெரிய வசதியோ ஆரோக்கியமோ இல்லாத ஒரு சாதாரண தனியார் துப்பறிவாளரின் அன்றாட உலகை, அவரது முயற்சிகளின் சாதாரணத்துவத்தை நன்றாகக் காட்டியுள்ளதை, அதிலுள்ள பகடியை ரசித்தேன். நாயகனான டொமனிக் (மம்முட்டி) தொடர்ந்து பொய் சொல்பவர். ஒரு காட்சியில் சொல்லும் காரணத்தை இன்னொன்றில் மாற்றிச் சொல்வார். அப்போது நாம் அவர் மீது இரக்கம் கொள்ளத்தக்க வகையில் அவரது பாத்திர அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். கௌதம் மேனனுக்கு தன் பாத்திரங்கள் ரத்த சக்கரை நோய் உள்ளோராக காட்டப் பிடிக்கும். இதில் மம்முட்டி long acting இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளும் காட்சி வருகிறது. தன்பாலின ஈர்ப்பு அவர் படங்களில் எப்போதுமே எட்டிப் பார்க்கும், எதிர்பாலின உறவு கசப்பிலோ இழப்பிலோ முடியும். இப்படத்திலும் இவ்விசயங்கள் உள்ளன.
இப்படத்திற்கு முக்கியத்துவம் அற்ற ஒரு காட்சிதான் படத்தைப் பார்த்தபின்னரும் என் மனத்தில் தங்கி நிற்கிறது. அதன் பொருந்தாத்தன்மைதான் காரணம் - புலன்விசாரணை தீவிரமாகிக் கொண்டிருக்கும்போது டொமொனிக்கும் அவரது உதவியாளரும் பேசிக் கொள்கிறார்கள். டொமொனிக் கேட்கிறார்: நாம் ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடலாமா? உதவியாளர்: எனக்கும் வேண்டும் சார்.
நான் யோசித்தேன்: ஆண்கள் இப்படி மனம் சலித்தால், பதற்றம் மிகுந்தால் ஐஸ்கிரீம் சாப்பிடுவார்களா? இல்லை. தேநீர், காபி, பியர், சிகரெட்தான். நான் என்றுமே என் நண்பர்களிடம் ஸ்வீட் சாப்பிடுவோமா, ஐஸ்கிரீம் பார்லர் போவோமா என்றெல்லாம் கேட்டதோ அப்படிச் சாப்பிட்டதோ இல்லை. நான் ஆண்களுடன் சாக்லேட் பகிர்ந்துகொண்டதும் இல்லை. பெண்கள்தாம் ஐஸ்கிரீம், சாக்லேட் வெறியர்கள். அதற்காக இப்படி ஐஸ்கிரீம் அடிமையான ஆண்கள் இல்லையென்றில்லை. என் கல்லூரிக்கு வெளியே நான் இப்படி கோன் ஐஸ்கிரீமை சப்பிக் கொண்டு நடக்கும் இளைஞர்களைப் பார்த்திருக்கிறேன்.
இந்த சிகரெட், தேநீர், ஐஸ்கிரீம், சாக்லேட் எல்லாம் பண்பாட்டு உருவகங்கள். நாம் அவற்றைப் பாவிக்கும்போது ஒரு குறிப்பிட்ட விதமாக நம்மை அப்போது மாற்றிக் கொள்கிறோம். இப்படத்தில் மம்முட்டி ஐஸ்கிரீமை கரண்டியில் எடுத்து நக்கும் இடங்களில் அவர் மற்றொரு விதமாக மாறிப் போகிறார். அது படத்தின் தொனியை மாற்றுகிறது. படத்தின் இறுதிக் காட்சியில் அவர் தான் அதுவரை நேசித்தது பெண் வேடமிட்ட ஆணென்று தெரிந்துகொண்டு சில வினாடிகள் சங்கடப்படுகிறார். சேலையில் அழகான பெண்ணாகத் தெரியும் அவனுடன் சண்டை போடுகிறார். அப்போதும் கூட அவன் முகத்தில் முஷ்டியால் குத்தாமல் பார்த்துக் கொள்கிறார். இதையெல்லாம் எதற்குப் பார்க்கிறோம் என்று நம்மையும் யோசிக்க வைக்கிறார். எனக்கு இந்த ரெண்டு காட்சிகளும் ஒன்றுதாம் எனத் தோன்றுகிறது.
இந்தக் கதையைச் சொல்லி எப்படி மம்முட்டியை கௌதம் மேனன் எப்படி ஏமாற்றினார் என்பதை விட டொமனிக் எப்படி அவ்வளவு நாட்களும் ஒரு ஆணைப் பெண் என்று நம்பினார் என்பது குறைவாகவே அதிர்ச்சி அளிக்கிறது. வித்தியாசமான காத்திரமான அமைப்பு கொண்ட பாத்திரம் என்றால் நாயகர்கள் உணர்ச்சிவரப்பட்டு ஏற்றுக்கொண்டு அதைத் தயாரிக்கவும் முன்வருவார்கள். குழந்தைகளுக்கு எதிலும் இனிப்பை, சாக்லேட்டைக் கலந்து ஏமாற்றி சாப்பிட வைப்பதைப் போல.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...