Skip to main content

வயநாடு பயணம்



 

கடந்த சனி, ஞாயிறு கேரளாவில் வயநாட்டுக்கு பைக் பயணம் மேற்கொண்டேன். என் நண்பரின் நண்பர் வழியாக அங்குதான் எழுத்தாளர் லைலாவைச் சந்தித்தேன். அதற்கு அடுத்த நாள் வயநாட்டில் நடைபெற்ற நூல் வெளியிட்டு விழாவிற்கு அழைத்தார்கள். ஒரு மலையாள இலக்கியக் கூட்டம் எப்படி நடக்கும் எனத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தினால் சென்றேன். ஆனால் போனதும் அப்படியே அழைத்து மேடையில் அமர வைத்துவிட்டார்கள். 122 கவிகள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு அது. பெரும்பாலும் பெண் கவிகளால் அரங்கு நிரம்பியிருந்தது. இத்தனை பேர்கள் எழுதும் ஆர்வத்தில் இணைந்திருக்கிறார்களே என எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. என்னை வாழ்த்துரை பேச அழைத்தார்கள். அண்மையில் மலையாள இலக்கியத்தில் வெகுஜன நாவல்களுக்கு பெரிய சந்தை தோன்றியுள்ளது. இவ்வருடம் சாகித்ய அகாடெமியின் யுவ புரஸ்காரை மலையாளத்துக்காகப் பெற்ற அகில் தர்மஜன் அத்தகைய ஒரு சுவாரஸ்ய எழுத்தாளர் மட்டுமே. அவரது ராம் c/o ஆனந்தி எனும் நாவல் ஒரு கோடி ரூபாய் மதிப்புரிமைத் தொகையை அவருக்குப் பெற்றுத் தந்துள்ளது. இந்த விசயங்கள் அங்குள்ள இலக்கியவாதிகளிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதை கவனித்தேன். நான் அன்று கூட்டத்தில் இதைக் குறித்து ஒன்றைச் சொன்னேன் - எழுத்தாளர்கள் பிரபலமாக முயலக் கூடாது. பெருந்திரளை நோக்கி நாம் செல்லச்செல்ல நம் எழுத்தின் தரம் வாகனச் சக்கரத்தில் நசுக்கப்பட்ட எலியைப் போல ஆகும். சமூகவலைதளப் பிரசித்தம், சினிமா புகழ் கூட நம்மையே அறியாமல் நம்மை மேம்போக்கான ரசனைக்காக எழுத வைக்கும். இது நம் உபமனத்தில் நம்மையே அறியாமல் நிகழும் ஒன்று. புகழ் வெளிச்சம் கிடைக்காமல் இருப்பதே நம்மை உள்ளார்ந்த வெளிச்சத்தில் வைக்கும். புகழ் வெளிச்சம் நம்மை இருளில் மூழ்கடிக்கும். வியாபாரத்துக்காக மட்டும் எழுதுவோருக்கு இதெல்லாம் பொருட்டல்ல, நல்ல படைப்பாளிகளுக்கு நிச்சயமாகப் பொருந்தும்.

அடுத்து நவீன மலையாள இலக்கியம் தோன்றி விரைவிலேயே முதலே அது வெகுமக்கள் சமூகத்தின் அறிவுச் சின்னமாக, கலாச்சார அடையாளமாக மாறிப் போனது (முற்போக்கு இயக்கங்களுக்கு அதில் முக்கிய பங்கிருந்தது). வாசிப்பதும், இலக்கிய பரிச்சயம் கொண்டிருப்பதும் மாநிலத்தின் பெருமையாக மாறியது. ஆனால் இதன் எதிர்மறைப் பயன் அவர்களுடைய இலக்கியம் நடுநிலை இலக்கியமாக மாறியது, தீவிரமான எழுது அங்கு அருகிவிட்டது என்பது. இப்போது அதன் இன்னொரு தீவிர எதிர்நிலையை எட்டுகிறார்கள் - இலக்கியமும் வெகுஜன எழுத்தும் ஒன்றாகிறது. இன்று சமூகவலைதளங்கள் வழியாகத் தம்மை அடையாளப்படுத்தி வாசகர் பரப்பை உருவாக்கிய எழுத்தாளர்களே அங்கு கவனம் பெறுகிறார்கள். மொழிபெயர்ப்பு வழியாகவும் ஒலிநூல்கள் வழியாகவும் நான் அறிந்த சமகால மலையாளப் புனைவுகள் குறித்த சித்திரம் இதுவே. சிறந்த இலக்கியம் மிகச்சிறிய புள்ளியை நோக்கி நகர்ந்துவிட்டது. ஆனால் இதிலும் ஒருவித அனுகூலம் உள்ளது - வெகுன படைப்பு × தீவிர இலக்கியம் எனும் எதிர்மை நல்ல இலக்கியம் தோன்றி வழிவகுக்கும். சிறு குழுவுக்காக எழுதுவது, பரிசோதனை முயற்சிகள் பண்ணுவது வலுக்கும்.
தொடர்ந்து எழுதுவதும், அதனால் தமக்குப் பணமும் புகழும் கிடைக்குமா எனக் கவலைப்படாமல் இருப்பதும் முக்கியம் என்றேன். உறவுகள், குடும்பம், வேலை, கேளிக்கை ஆகியவற்றால் கிடைக்கும் எதுவும் நிலைக்காது, உங்கள் குடும்பம், பிள்ளைகள் கூட நாளை இருக்க மாட்டார்கள் (இதைச் சொன்னதும் முன்வரிசையில் இருந்த பெண்கள் சிரித்தார்கள்), ஆனால் உங்கள் எழுத்து என்றும் உங்களுடன் இருக்கும். உங்கள் அஞ்சலிக் குறிப்பில் நீங்கள் ஒரு படைப்பாளி என வந்தால் நீங்கள் அதைவிடப் பெரிய அதிர்ஷ்டத்தைப் பெறப் போவதில்லை. இலக்கியம் உங்களை காலத்தைக் கடந்து வாழ வைக்கும் என்றேன்.
நான் பேசி முடித்து வந்தபின்னர் அது மிகவும் உற்சாகமூட்டுவதாக இருந்ததாக இளம் படைப்பாளிகள் வந்து என்னிடம் கூறி தற்படம் எடுத்துக் கொண்டனர். ஒரு இளம் பெண் கவி என்னருகே அமர்ந்து தன் கவிதையைப் படித்துக் காண்பித்தார். சும்மா சுற்றலாம் எனச் சென்ற வயநாடு பயணம் என்றும் என் இப்படி நினைவில் ஜொலிக்கும் சித்திரமாக மாறியது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...