Skip to main content

'வெகுமக்கள்' சினிமாவைக் கொண்டாடும் விலங்குப் பண்ணை

தீபாவளி என்றால் ஓய்வு தினம், கொண்டாட்டம். நான் என் குழந்தைப் பருவத்தில் அப்படித்தான் மகிழ்ச்சியாக இந்நாளைப் பார்த்தேன். இந்த நாளில் எவ்வளவோ பேசலாம், படிக்கலாம், எழுதலாம், நன்றாக சாப்பிட்டுவிட்டு உறங்கலாம். உறவினர்களைச் சந்திக்கலாம். பட்டாசு வெடித்து சூழலை ஓரளவுக்கு மாசுபடுத்தி ஊரையே கதறடிக்கலாம். இதைப் பற்றி பிறரிடம் பகிரலாம். நம் வாழ்க்கை மீது உள்ள நம் கட்டுப்பாடு புலனாகும். நாம் இங்கே இவர்களுடன் இணைந்திருக்கிறோம் எனும் உறுதி ஒரு நம்பிக்கையை அளிக்கும். பொங்கலும், கிறித்துமஸும் கூட அப்படித்தான் (இஸ்லாமிய பண்டிகைகளை இவர்கள் இன்னும் பண்டமாக்கல் செய்யாததால் அதற்குள் நான் வரவில்லை.) ஆனால் நம் ஊடக வியாபாரிகள் தீபாவளி என்றால் தீபாவளி சிறப்பிதழ் படியுங்கள் என்று ஆரம்பித்து படம் பாருங்கள், படம் மட்டுமே பாருங்கள் என்று அதைப் பற்றி மட்டுமே யோசிக்கிற வைபவம் ஆக்கிவிட்டார்கள். 
ஏன் தீபாவளி என்றாலே படம் பார்த்துவிட்டு அதைப்.பற்றி புலம்ப வேண்டும் என ஒரு கும்பல் திரிகிறார்கள்? அதிலேயே ஒருநாள் முடிந்துவிடுகிறதே. நீங்கள் ஒன்றை செய்யக் கூடியவராக இருக்கையில் அங்கு செயலை நிகழ்த்துபவர். நீங்கள் சினிமா பார்க்கும்போது ஒரு காய்கறி. உங்களுக்கு எந்த முகமையும் இல்லை. அதனாலே அது உங்கள் வாழ்க்கையை அடிப்படையில் கொன்று விடுகிறது. அது மேலும் மேலும் உங்களை எதிலும் பங்கெடுக்க விடாமல் பண்ணி அரங்கில் அமர்ந்து பொம்மைகளைப் போலக் கைத்தட்டி சத்தம் எழுப்புபவர்கள் ஆக்குகிறது. 

வெகுஜன சினிமா அடிப்படையில் நுண்ணுணர்வற்ற மந்தையை மந்தையாகவே வைத்திருக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. எந்த நாட்டிலும் சினிமாவால் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டதாக வரலாறில்லை. ஆனால் இலக்கியத்தால், எழுத்தால் ஏற்பட்டிருக்கிறது. சினிமா தரும் உடனடிப் புகழை அரசியல்வாதிகள் பயன்படுத்தி அதிகாரத்தை வெல்லலாம். ஆனால் எதிர்த்து அடிக்கிற உணர்வு அது தராது, அது ஒருவரைப் போராடவோ செயல்படவோ வைக்காது. அப்படி எண்ணி மயங்க மட்டும் வைக்கும்..அது அறிவையும் நுண்ணுணர்வையும் தராது, அவை இல்லாமல் இருப்பதைக் குறித்து கும்பல் மனநிலையில் சிலிர்க்க வைக்கும். இதனாலே வெகுமக்கள் சினிமாக்காரர்கள் அரசுக்கு நெருக்கமாக இருக்கிறார்கள். நூல்கள் தடை செய்யப்படுவதில் நூறில் ஒரு மடங்கு கூட வெகுஜன சினிமாக்கள் தடைசெய்யப்படுவதோ, இலக்கியவாதிகள் அளவுக்கு அவர்கள் கைதாவதோ உலகம் முழுக்க இல்லை. அரசு எப்போதுமே சினிமா கலைஞர்களைக் கண்டு அஞ்சுவதில்லை. ஆனால் படைப்பாளிகளை அஞ்சுகிறது - நீங்கள் இப்போதுகூட பயங்கரவாத ஆதரவு நூல்களை வைத்திருந்ததாகச் சொல்லி போராளிகள் மீது அரசு பொய் தேசத்துரோக பயங்கரவாதத் தடைச் சட்ட வழக்க்குகள் போடுவதைப் பார்க்கலாம் - ஆனால் விஜய், அஜித், ரஜினி, கமல், சினிமாப் படத்தை போனில் வைத்ததற்காக கைது பண்ண மாட்டார்கள் - இத்தனைக்கும் இவர்கள் படங்களில்தாம் நிமிடத்துக்கு நூறு புரட்சிக் கருத்துக்கள் பேசப்படும், ஆபாசத்துக்கு வெகு அருகில் செல்லக்கூடிய விசயங்கள், சாதி வெறுப்பைத் தூண்டும் சங்கதிகள் ஏராளமாக இருக்கும். 

பெருமாள் முருகனைத் தடை செய்யப் போராடினார்களே, ஏன் ஊர்ச்சடங்குகளை வைத்து என்னென்னமோ படமெடுத்தவர்களை இம்மக்கள் எதிர்க்கவில்லை? சல்மான் ருஷ்டிக்கு பத்வா விதித்து அவரைக் கத்தியாலும் குத்தியவர்கள் மணிரத்னத்தை சும்மா மிரட்டியதுடன் ஏன் விட்டார்கள்? ஏனென்றால் சினிமா ஒருபோதும் status quoவை (இயல்பெனக் கருதப்படும் அதிகார நிலையை) எதிர்க்காது. இம்மியும் விலகிப் பேசாது. ஆனால் அவ்வாறு செய்வதாக பாவனை செய்து யாரையும் அதைச் செய்யவிடாமல் பண்ணும். அதனாலே ஊடக முதலாளிகளும் அரசும் சினிமாவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் - சில எழுத்தாளர்களைப் பணத்தையும் அதிகாரத்தையும் காட்டிப் பணிய வைக்கலாம். அப்போது ஒரு சிலராவது உண்மையைப் பேசுவார்கள். சினிமாக்காரர்கள் ஒருபோதும் உண்மையைச் சொல்ல மாட்டார்கள். எப்போதும் அதிகாரமும் பணமும் பாயும் திசையிலே சாய்வார்கள் (காலனிய அடிமைக்காலத்தில் நாடகக் கம்பனிகள் அப்படித்தான் இருந்தார்கள் என்பது வரலாறு.) இந்தியா முழ்க்க இத்தனை மொழிகளும் அதில் பல லட்சம் படங்கள் எடுக்கப்படுகின்றன. இதுவரை மோடியை எதிர்த்து, விமர்சித்து ஒரு படமாவது எடுக்க முடிகிறதா? ஆனால் எத்தனை கவிதைகள், கதைகள், கட்டுரை நூல்கள் வந்துவிட்டன. இதுதான் வித்தியாசம் - சினிமாக்காரர்களுக்கு சமூக முன்னேற்றச் சிந்தனை, சுரணை, கவலை, அக்கறை, உயர்பண்பாட்டு விழுமியம், வாசிப்பு, கறனை, ஆய்வுத்திறன் ஒன்றும் கிடையாது. வீட்டுக்குள் எலிகள் ஓடுவதைப் போல ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நாம் சினிமாவை ஏதோ கடவுள் அவதரித்து பூமிக்கு வந்ததைப் போல புல்லரித்துப் பார்க்கிறோம் - அதற்காக நம் சிறந்த நாட்களை வீணடிக்கிறோம், அதில் நம் வாழ்க்கை, சிந்தனை, உணர்வு வந்துவிடாதா என ஏங்குகிறோம். ஆனால் அது மக்களை ஜடமாக்கிக் கொண்டே வருகிறது. 

ஒரு ஆரோக்கியமான சமூகத்தில் வெகுமக்கள் பண்பாட்டு செயல்பாடு சார்ந்ததாக இருக்கும், செயலைப் பார்த்துத் திளைப்பதாக இருக்காது. நோய்மைச் சமூகத்திலே சினிமா இவ்வளவு பெரும் இடத்தைப் பெறும். வெகுமக்கள்  சினிமாவும் அடுத்து வருகிற யுடுயூப், இன்ஸ்டா பொழுதுபோக்காளர்களும் ஒழியாதவரைக்கும் நாம் ஒரு விலங்குப் பண்ணையாகவே இருப்போம். சினிமாக்காரர்கள் நம் பண்ணையை நிர்வகித்து மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...