Skip to main content

ஆவண அரசியல் 3

 நம்மூரில் தரப்படும் அடையாள அட்டைகளில் பெரும் வேடிக்கை பெயர் பதியப்படும் விதம். என் வாக்காளர் அட்டையில் முதற் பெயர், குடும்பப் பெயர் ஒட்டியிருக்கிறது, ஆதாரில் என் இனிஷியல் முன்னிலையில் இருந்தால் இன்னொரு அட்டையில் கடைசியில் இருக்கிறது. இதில் எந்த முறையையும் நம் அமைப்புகள் பின்பற்றுவதில்லை. கொடுப்பதை தோன்றினபடி பதிவு பண்ணி வைக்கிறார்கள். இவை ஒன்றுபோல இருக்காவிடில் பின்னர் நிராகரித்துவிடுகிறார்கள். MK Stalin என்பது Stalin MK என்றிருந்தால் என்ன தப்பு? அதனால் அவர் இன்னொருவர் ஆகிவிடுவாரா? ஆனால் நம்முர் ஆவணச் சரிபார்ப்பு மண்டைகளுக்கு இருவரும் ஒருவர் அல்லர். எல்லா அட்டைகளிலும் பெயரை ஒரே போல வரவழைத்தாலும் வேறு புதுப் பிரச்சினைகள் புற்றீசல் போல புறப்பட்டு வரும்.

நான் என் வருங்கால வைப்புநிதிக்காக ஆவணத்தை அளிக்கையில் ஆதாரமாக ஆதாரைக் கொடுத்தேன். அதில் மேற்சொன்ன காரணத்துக்காக என் பெயரை மாற்ற வேண்டி வந்தது - அதாவது இனிஷியலை முன்பிருந்து பின்பாக மாற்றினேன். ஆனால் இணையதளத்தைக் கட்டமைத்தவர்கள் மென்பொருளே தாமாகத் தேடி பெயர் மாற்றங்கள் இருப்பின் தடைசெய்யும்படி அமைத்திருக்கிறார்கள். எனக்கு இது ஆரம்பத்தில் தெரியாது. வைப்புநிதியைப் பணத்தேவையின் பொருட்டு எடுக்க முயன்றால் பயனர் அடையாளப பெயர் தப்பு எனக் கூறியது. அலுவலகங்களில் முன்னும்பின்னுமாகப் பந்தாடப்பட்ட பின்னர் இந்த உண்மை சொல்லப்பட்டது. இதைச் சரிசெய்ய இன்னொரு ஆவணத்தை - விண்ணப்படிவம், சான்றாதாரங்கள் - தாக்கல் செய்ய வேண்டும். இன்னும் சரியாகவில்லை.
அரசின் பொதுக் கணக்கில் நம் வைப்பு நிதியைச் சேமிப்பதன் பிரச்சினை இது. இதற்குப் பதிலாக ஊழியர்களின் ஒரு தனியான நிலை வைப்புக் கணக்கில் இந்நிதியை அரசும் (சம்பளத்தில் 1.16%) தனியார் நிறுவனங்களும் (12%) நாமும் (12%) போடும்படி வைத்தால், அதற்கு ஒரு லாக் இன் காலமும் இருக்கையில் இதைவிடச் சுலபமாக இருக்கும். நாம் அரசு நிறுவனங்களில் அலைய அவசியம் இருக்காது. ஆவணங்களின் சுழல்வட்டப் பாதையில் சிக்க வேண்டியிருக்காது. நம் பணத்தை யாரும் திருடவும் முடியாது. இவர்கள் கொடுக்கிற பிச்சைக்கார 1.16% ஏன் இவ்வளவு பாதுகாப்பு, தடையுத்தரவு, ஆவணத் தாக்கல் பந்தா எல்லாம்? நீங்க கொடுக்கிற ஆயிரம் ரூபாய்க்கு ஒரு அலுவகம், கணினி எல்லாம் எதற்குங்க? இது அநாவசிய செலவில்லையா? மேற்சொன்ன கேள்விகள் நமக்கு இயல்பாகவே எழும் - ஆனால் அரசுக்கு இது தன் இருப்பைக் காட்டிக்கொள்ள ஒரு வழி.
"வரவு எட்டணா செலவு பத்தணா" படத்தில் அப்பா தன் பிள்ளைகளின் பணத்தை வாங்கிவைத்து கராறாகச் செலவு பண்ணி இல்லாத பிள்ளைகளைப் பாதுகாத்து இருக்கிற பிள்ளைகளை அடக்கி வைப்பார். ஒரு கட்டத்தில் அவர்கள் என் காசை ஏன் உன்கிட்ட கொடுக்கணும் என கொடுப்பதை நிறுத்துவார்கள். அப்போது அப்பாவின் அதிகாரம் காலியாகும் (அதன்பிறகு பிள்ளைகளின் சீரழிவைக் காட்டி நம்மைப் பயமுறுத்துவது வேறு கதை). அரசின் அதிகாரமும் இப்படித்தான் - நம்மிடம் வாங்கி நம்மைக் கட்டுப்படுத்தி உருட்டி மிரட்டி அதிகாரம் பண்ணுவது, அதன் மீது இருப்பை நிறுவுவது. அதைத் தாண்டி (மத்திய வர்க்கத்தினருக்கு) அரசு எங்கு நிலைக்கிறது? தெரியவில்லை.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...