Skip to main content

டி.என்.ஏ - ஒருமுறை அழகி

 


பம்பரத்தைச் சுற்றிவிட்டதைப் போல விர்ரென நின்றபடி ஓடும் திரைக்கதைதான் இப்படத்தின் வலிமை. இடைவேளைக்குப் பிறகு தண்ணீர் குடிக்கணும், பாத்ரூம் போகணும் எனும் நினைப்பை ஒவ்வொரு கணமும் மறக்கடித்து ஒட்டுமொத்தமாக ஒண்ணும் வேணாம் போ என உட்கார வைத்துவிடுகிறார்கள். அடுத்தடுத்த பரபரப்பான திகிலான திருப்பங்கள், பதற்றத்தின் எல்லைக்கே கொண்டு போகும்படி இழுத்துப்போகும் காட்சியமைப்புகள்.

அதன்பிறகு நிமிஷா சஜயனின் அபாரமான நடிப்பு. நிமிஷா இதன் துவக்கத்தில் மனநலப்பிறழ்வை கோமாளித்தனமாகக் காட்டும்போது ஏமாற்றம் ஏற்பட்டது. ஆனால் குழந்தை காணாமல் போனபிறகு அவரது நடிப்பு இன்னொரு தளத்துக்குப் போகிறது. ஒவ்வொரு நிலையிலும் ஒரு பெண்ணின் உடல்மொழியில் வரும் மாற்றங்களை அபாரமாக கண்ணாடிபோலப் பிரதிபலிக்கிறார். அவரது கண்கள், பளிச்சென்று சிரிப்புக்கு மலரும் முகம், சட்டென்ற சோர்வில் வாடும் மலரைப் போன்ற பாவனைகள், சின்னச்சின்ன மாற்றங்களை அடுத்தடுத்து காட்டும் பாங்கு - அசத்துகிறார். ஆனால் அதேநேரத்தில் "பார்ரா நான் நடிக்கிறேன்" எனும் மிகையும் உள்ளது. "உணர்ச்சிவசத்த அடக்கு, அது பக்கத்து தெருவில ஒரு தங்கச்சி தன் அண்ணனைக் கூப்பிடுற சத்தம்" என வடிவேலு சொல்வாரே அதைப் போல அடிக்கடி சொல்கிற ஒரு இயக்குநர் இவருக்குத் தேவை. ஆனாலும் மனதைக் கொள்ளையடித்துவிடுகிறார்.

இப்படத்தின் துவக்கத்தையும் - அதர்வாவின், நிமிஷாவின் பாத்திர வார்ப்பு - நன்றாகவே எழுதியிருக்கிறார்கள். அதர்வாவின் பாத்திரமான ஆனந்த் தன் காதலியின் மரணத்தில் இருந்து மீளத் தெரியாமல் போதையில் ஆழ்ந்து அதிலிருந்து பயிற்சி வழியாக மீண்டுவருகிறார். நிமிஷாவின் பாத்திரமான திவ்யா யாராலும் நம்பவோ ஏற்கவோ படாத மனநலம் பாதிக்கப்பட்ட பெண். இருவருக்கும் அன்பும் ஏற்பும் தேவைப்படுகிறது. குழந்தை காணாமல் போகிற, அதைத் தேடி ஆனந்த் திரிகிற, போராடுகிற பகுதிகள் சுவாரஸ்யமாக இருந்தாலும் அவை ஆரம்பக் கதையுடன் - பிரதான பாத்திரத்தின் உடனடித் தேவையுடன் (want), ஆழமான அக நிறைவுக்கான தேடலுடன் (need) - பொருந்தவில்லை. குழந்தையை அவர்களுடன் வாழ்வுடன் சரியாகப் பிணைத்து முன்னெடுக்க முடியாதபடி கதையின் அமைப்பும் உள்ளது - பிறந்தவுடனே குழந்தை காணாமல் போகிறது. சொல்லப்போனால் ஆனந்தின், திவ்யாவின் கதை திருமணத்துடன் முடிந்துவிடுகிறது. இரண்டாவது கதையான குழந்தைக்கான தேடல் துண்டாகத் தனியாக நிற்கிறது. அதனாலே இப்படம் முடிகையில் சாக்லேட் சாப்பிட்டு முடித்துவிட்டு அதை இதைப் போய் ஏன் தின்றோம், இதில் உடம்புக்குத் தேவையான ஒன்றுமே இல்லையே என ஏமாற்றமடைவதைப் போல இருகிறது. ராஜேஷ் குமாரின் நாவலைப் படித்துவிட்டு என்னதான் படித்தோம், என்னதான் நடந்துச்சு, என்னவோ ஜாலியா டைம் பாஸாச்சு என்று பஸ் இருக்கையில் நைசாக வைத்துவிட்டு நகர்வதைப் போல உள்ளது. நெல்சன் வெங்கடேசனின் "மான்ஸ்டர்" படம் இன்னும் நன்றாக எழுதப்பட்டது. அதில் கதாபாத்திரத்தின் அகப்பயணம், நிறைவு இன்னும் சரியாகக் கொண்டு வரப்பட்டிருந்தது. எலியும் நாயகனும் பல சாகசங்களுக்குப் பிறகு கிளைமேக்ஸில் இன்னொரு இடத்திற்கு நகர்ந்து புதிய உயரத்தை எட்டுவார்கள். இரண்டு உயிர்களுமே ஒன்றுதானே எனும் விழுமியமும் (ராபர்ட் மெக்கீ சொல்கிற value) இருக்கும். அப்படி எந்த விழுமியமும் இக்கதையில் இல்லை.
சாலையில் ஒருமுறை பார்த்து ரசித்து மறந்துவிடுகிற பெண்ணைத் திரும்பப் பார்க்க நேர்ந்தால் ஏன் முதற்பார்வையில் மட்டும் அவ்வளவு அசத்தலாக இருந்தாள் என நினைக்க வைப்பதைப் போன்ற படம்.

திரைக்கதையிலும் மூலகதை உருவாக்கத்திலும் அதிஷாவின் பங்பளிப்பு எவ்வளவு எனத் தெரியவில்லை. இணை-எழுத்தாளராக கிரெடிட் கொடுக்கப்பட்டுள்ளதைக் கண்டால் அவர் முக்கிய பங்காற்றியிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. கச்சிதமான திகில் கதைக்கான வேலையைப் பிரமாதமாகச் செய்திருக்கிறார். இதற்காக அவரும் நெல்சன் வெங்கடேசனும் எவ்வளவு மெனெக்கெட்டிருக்க வேண்டும் என்று புரிகிறது. அடுத்தடுத்து நல்ல படங்கள் அவருக்கு அமையட்டும்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...