Skip to main content

இங்கிலாந்தின் Bazballஐ முறியடிக்கும் வியூகம்

 



இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டை ஆடும் பாணி 50 ஓவர் ஆட்டத்துக்கு உரியது. நான் மட்டையாட்டத்தைச் சொல்லவில்லை. வியூகத்தைச் சொல்கிறேன்.
தட்டையான ஆடுதளத்தில் ஐம்பது ஓவர் போட்டியை வெல்ல சிறந்த வழி இரண்டாவதாக மட்டையாடுவதுதான். ஸ்டோக்ஸும் அதனால்தான் பெரும்பாலும் முதலில் பந்துவீசவே விரும்புகிறார். ஆடுதளம் மிகத் தட்டையாக இருக்கும். ஆனாலும் அவருக்கு கவலையில்லை. ஏனென்றால் 20 விக்கெட்டுகளை எடுப்பதற்காக அவர் மெனெக்கெடப் போவதில்லை. இன்றைய மட்டையாளர்கள் எப்படி ஆடினாலும் ஒன்றரை - இரண்டு நாட்களுக்கு மேல் ஆடப் போவதில்லை. அதனால் ஸ்டோக்ஸ் அவர்களது ரன் ரேட்டை மட்டுமே கட்டுப்படுத்த பந்து வீச்சாளர்களைக் கேட்கிறார். இப்போது நிகழ்ந்து வரும் போட்டித்தொடரில் முதல் டெஸ்டில் (ஹெடிங்லி) இந்தியா முதலில் மட்டையாடி நானூற்று சொச்சம் ரன்களை அடித்தாலும் அவர்களது ரன்ரேட் 4தான். ஆனால் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் ஆடியபோது 4.5 ரன்ரேட்டில் ஆடி அந்த ஸ்கோருக்கு நெருங்கி வந்தார்கள். அடுத்து இந்தியா மட்டையாடியபோது ஸ்டோக்ஸ் இந்தியாவின் ரன் ரேட்டைக் குறைக்கவே பிரயத்தனப்பட்டார், விக்கெட் எடுக்க அல்ல. குறைநீளத்தில், காலுக்கு வெளியே வைடாக வீசுவது, எதிர்மறையான களத்தடுப்பை அமைப்பது, மட்டையாளர்கள் தவறு செய்வதற்காக காத்திருப்பது என. இந்தியாவின் சராசரி ரன்ரேட் இரண்டாவது இன்னிங்ஸில் 3.5 ஆக இருந்தது. நான்காவது இன்னிங்ஸில் ஆடிய இங்கிலாந்து 4.5 ஸ்டிரைக் ரேட்டில் ஆடி முன்னூற்று சொச்சம் இலக்கை சுலபத்தில் அடைந்தது. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் அண்மைக் காலங்களில் இங்கிலாந்தில் ஆடுதளமானது 5வது நாள்தான் மட்டையாட்டத்துக்கு மிகச்சிறப்பாக இருக்கிறது. அவர்கள் பயன்படுத்தும் டியூக்ஸ் பந்தும், ஹெவி ரோலரும் மட்டையாட்டத்தை லட்டு சாப்பிடுவதைப் போலாக்குகிறது. அதனால் ஸ்டோக்ஸின் இலக்கு கடைசி நாள் மட்டையாடுவதும் 90 ஓவர்களுக்குள் அடிக்கிற மாதிரியான இலக்கைப் பெறுவதும்தான். அதற்காகத்தான் அவர் எதிரணியின் ரன் ரேட்டைக் குறைக்க மட்டும் போராடுகிறார், விக்கெட்டுகளை எடுக்க அல்ல. ஏனென்றால் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 4.5 ரன் ரேட்டில் ஆடியிருந்தால் கடைசி நாள் இலக்கு 450ஐத் தாண்டி இருக்கும். ஓவருக்கு 5 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டியிருந்திருக்கும். முதல் 20 ஓவர்கள் பும்ரா நன்றாக வீசி ரன் ரேட்டை 6க்கு கொண்டு வந்தால் அது சேஸிங்கைச் சிக்கலாக்கும். இப்படி ஸ்டோக்ஸ் டெஸ்ட் ஆட்டத்தைப் பார்க்கும்விதமே வித்தியாசமானது. அவரிடம் டெஸ்ட் ஆட்டத்தை ஆடினாலும் எடுபடாது. முழுக்க பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுதளம் அமைந்தால் மட்டுமே ஸ்டோக்ஸ் இந்த அணுகுமுறையைக் கைவிடுவார்.

ஸ்டோக்ஸை ("பேஸ்பாலை") முறியடிக்க முதலில் தட்டையான ஆடுதளத்தில் டாஸ் ஜெயித்தால் இங்கிலாந்தை மட்டையாட வைக்க வேண்டும். அவர்களுடைய ரன் ரேட்டைக் குறைத்து நமது பந்து வீச்சின் ஓவர் ரேட்டையும் குறைக்க வேண்டும். எதிர்மறையான உத்திகளைக் கையாள வேண்டும். அல்லது நாம் முதல் நாள் மட்டையாட நேர்ந்தாலும் ரன் அடிப்பதைவிட அதிக நேரம் மட்டையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும். குறைந்தது 2.5 நாட்களையாவது தின்று விட வேண்டும். எனில் கடைசி நாளில் இங்கிலாந்துக்கு மட்டையாட அரை நாள்தான் கிடைக்கும். இது அவர்களைக் கடுமையாக வெறுப்பேற்றும் என்பதால் வித்தியாசமாக எதையாவது செய்து சிக்கிக் கொள்வார்கள். அதே போல அவர்களுடைய வேகவீச்சாளர்கள் காயம்பட வாய்ப்பு அதிகமாகும். பந்து வீசி ஜெயிக்கவே வாய்ப்பில்லாத ஆட்டச்சூழலை, ஆடுதளத்தை இங்கிலாந்து கியூரேட்டர்களும் பந்து தயாரிப்பாளர்களும் ஏற்படுத்தும்போது எதிர்மறை கிரிக்கெட்டின் வழியாக மட்டுமே அதைச் சமாளிக்க முடியும். இதையே இன்று கில் செய்ய முயன்றார். அதிகப் பந்துகளை ஆட முயன்றார். ஒரே பிரச்சினை ஜெய்ஸ்வாலும் பண்டும் இந்த வியூகத்துக்கு ஏற்ப ஆடாமல் அதிக ஷாட்களை ஆட முயன்றார்கள். ஜெய்ஸ்வால் 250 பந்துகளில் சதம் அடிக்க முயன்றிருக்க வேண்டும். எனில் அவரும் கில்லுமாக தலா 300 பந்துகளை ஆடியிருந்தால், இன்னும் சிலர் தலா 100 பந்துகளை எடுத்திருந்தால் ஒரே இன்னிங்ஸில் ஸ்டோக்ஸின் பேஸ்பால் வியூகத்தை நாசமாக்க முடியும் (ஆனால் அவர்கள் வேகமாக ஆடி ஆட்டமிழந்தார்கள்). முதல் இன்னிங்ஸில் எத்தனை ரன்கள் அடிக்கிறோம் என்பதல்ல எத்தனை நாட்கள் ஆடுகிறோம் என்பதை ஸ்டோஸுக்கு ஆப்படிக்க உதவும். இதை இரண்டு போட்டிகளில் செய்தால் இங்கிலாந்து வேறு வழியின்றி தன் ஆடுதளங்களை மாற்றும் நிலை வரும்.

இதைத்தான் அஷ்வினும் தன் யுடியூப் சேனலில் வலியுறுத்துகிறார். முதல் டெஸ்டில் இந்தியா இதைப் புரிந்துகொள்ளாமல் நான்காவது நாளே பந்துவீச விரும்பி கடைசி ஐந்து விக்கெட்டுகளை வேகமாக அடிக்கும் நோக்கில் தியாகம் செய்தது. ஐந்தாவது நாள் உணவு இடைவெளி வரை ஆடிவிட்டு இங்கிலாந்துக்குக் கொடுத்திருந்தால் அவர்கள் தடுமாறியிருப்பார்கள். ஐம்பது ஓவர் கிரிக்கெட்டில் தட்டையான ஆடுதளத்தில் 350-400 என்று இலக்கை அதிகப்படுத்துவார்கள். அதாவது ரன் ரேட்டை உயர்த்துவார்கள். இங்கிலாந்தில் இதைச் செய்ய சிறந்த மார்க்கம் இங்கிலாந்துக்கு மட்டையாடக் கிடைக்கும் பந்துகளைக் குறைப்பதுதான். இது தடுப்பாட்டம் அல்ல, இங்கிலாந்தில் இதுதான் புத்திசாலித்தனமான ஆட்டம்.

இரண்டாவது டெஸ்டில் என்னைப் பொறுத்தவரையில் இந்தியா 450 அடிக்கிறதா என்பதல்ல நாளை மாலை வரையில் அல்லது நாளைக்கு அடுத்த நாள் காலை வரைக்கும் கில், ஜடேஜா, சுந்தரால் ஆட முடியுமா என்பதே இந்தியாவின் எழுச்சிக்கான அளவுகோல். நாளை மதியத்துடன் ஆல் அவுட் ஆனால், அவர்கள் அந்த ஸ்கோரை 100 ஓவர்களில் அடித்துவிட்டு நான்காவது நாள் மாலைக்குள் இந்தியாவை ஆல் அவுட் பண்ணப் பார்ப்பார்கள். இப்போட்டியில் 5வது நாள் இங்கிலாந்து தமக்கு அளிக்கப்படும் எந்த இலக்கையும் சுலபத்தில் விரட்டி அடைந்துவிடும். ரன்கள் அல்ல, நேரமே இப்போட்டியைத் தீர்மானிக்கும் காரணி.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...