Skip to main content

தங்கிலிஷின் தத்துவப் பிரச்சினை


தங்கிலிஷ் பயன்பாடு குறித்த நீயா நானா விவாதத்தைப் பார்த்தேன். நல்ல விவாதம் - தங்கிலிஷில் எழுதப்படுவதால் தமிழ் லிபியின் புழக்கம் குறைவதாகவும் அழிவதாகவோ கருதும் முன்பு நாம் இருபதாண்டுகளுக்கு முன்பு நாம் அதிகமாக இந்த லிபியைப் பரவலாகப் பயன்படுத்தியதாகக் கூற வேண்டும். அது உண்மையா? இல்லை. முதலில், 90கள் வரைக்கும் தினசரி நாம் தமிழில் தகவல் பரிமாற்றத்துக்கு அதிகமாக எழுதிக் கொண்டிருந்தோமா? இல்லை. நாம் (வெகுமக்கள்) உச்சபட்சமாக எழுத்து மொழியைப் பயன்படுத்தியது கடிதங்களின்போதே. ஏனெனில் மொழியின் ஜீவநாடி பேச்சிலே உள்ளது. மக்கள் தமிழில் பேசுவதைக் குறைக்கும்போதே நாம் அஞ்ச வேண்டும். எழுதுவதைக் குறைக்கும்போதல்ல.

அடுத்து, கடந்த இருபதாண்டுகளில்தாம் நாம் அதிகமாக 'எழுதத்' தொடங்கியுள்ளோம். திறன்பேசியும் சமூகவலைதளமும் நம்மை இன்று மிக அதிகமாக எழுத வைக்கின்றன. தமிழில் பரவலாக எல்லாரும் எழுதுவதில்லை. சில ஆயிரம் பேர்களே எழுதுகிறோம். சில லட்சம் பேர்கள் படிக்கிறோம். 1-2%தாம். ஆகப் பரவலாக தமிழில் வாசிக்கவோ எழுதவோ நம்மால் முடியாமல் போவதே நெருக்கடி. நான் கவனித்தவரையில் அடுத்தடுத்த தலைமுறைகள் ஆங்கிலத்தில்கூட சரிவர பேசவோ எழுதவோ தெரியாதவர்களே. பள்ளிக்கூடங்கள், காட்சி ஊடகம், அரசியல் கட்சிகள் என எல்லாருமே அதற்குக் காரணம்.

தங்லிலிஷ் ஏன் உறுத்துகிறது எனில் அதிகமாக மக்கள் முதன்முறையாக தமிழில் எழுதும்போது எழுத்து மொழி - தொழில்நுட்ப வடிவம் - தமிழில் இல்லையென்பது உறுத்துகிறது. இது தமிழுக்கு மட்டுமல்ல கன்னடத்துக்கும் இந்திக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடிதான். முதலில், அரசு பண்பாட்டுக் கல்விக்கும், மொழிக்கும் முதன்மை அளித்து அதிக நிதியளிக்க வேண்டும். அதிகமான தமிழ்ச் சொற்களை தமிழர்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் கொண்டுச் சேர்க்க வேண்டும். சொல்வளம் பெருகினால் ஒழிய சரளமாகத் தமிழில் பேச இயலாது. அதற்கு வாசிக்கவும் எழுதவும் வேண்டும். அடுத்து எழுதவும் நிறைய பேர்களுக்குத் தெரியவில்லை. அதற்கு பள்ளிக் கல்வித்துறைப் பொறுப்பேற்க வேண்டும். நிதி தான் இதற்கெல்லாம் அடிப்படை. தொழில்நுட்பத்திலும் கட்டுமானப் பணிகளிலும் நாம் செய்யும் நிதி முதலீட்டில் 0.5% கூட மொழியிலோ பண்பாட்டிலோ செய்வதில்லை. அப்போது மக்களும் சிமிண்டையும் களிமண்ணையும் போலத்தான் மாறுவார்கள்.

தமிழ் ஊடகங்களிலும் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாட்டை அரசை சட்டரீதியாகக் கொண்டு வரவேண்டும்.

அதேநேரத்தில் தமிழைப் பண்பாட்டு மொழியாகக் கருதி அதைப் பாதுகாப்பது இனிமேல் எடுபடாது. அதாவது தூய தமிழ்வாதம் இனிமேல் பொருளற்றுப் போகும். ஏனெனில் சாராம்சமான பண்பாடு என ஒன்று இனிமேல் சாத்தியமில்லை. இது பின்நவீன யுகம். ராஜகோபால் குறிப்பிட்ட கொரியன் சினிமா, பாப் பண்பாட்டுத் தாக்கம் வெறுக்கத்தக்கது அல்ல. பல்வேறு மொழிகளின், பண்பாடுகளின் அடையாளங்களின் கலப்பின் ஊடாகவே இனிமேல் நமது தன்னிலையை நாம் உணர முடியும். சாராம்சமான பண்பாட்டில் தங்காமல் வெளியேறுவதே சமகால அரசியல். அதைத் தமிழ்தேசிய அணுகுமுறையால் எதிர்க்க இயலாது. தன்னில் இருந்து வெளியேறுவதே இன்றைய மனநிலையாக இருக்கையில் மனிதர்கள் தாமாக இல்லாமல் இருப்பதையே விரும்புகிறார்கள். இதுவே அடிப்படையான பிரச்சினை - தமிழைக் கற்றுத் துல்லியமாகத் தூய்மையாகப் பேசுவதும் எழுதுவதும் தற்சுருங்கலாக அவர்களுக்குப் படுகிறது. இது தவறல்ல. இது பின்னமைப்பியல் மனநிலை.

உதாரணமாக, உங்களிடம் ஒரு ஜட்டி உள்ளது. அதைத் தினமும் துவைத்துப் போட்டு அணியலாம். ஆனால் இன்றைய மக்கள் ஐம்பது ஜட்டிகளை வாங்கி ஒரு நாள் கொரிய ஜட்டி, இன்னொரு நாள் சீன ஜட்டி, அமெரிக்க, இங்கிலாந்து, ஜப்பானிய ஜட்டிகள், ஒருநாள் கோமணம் என அணிய முடியுமெனில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்வார்கள். மொழியும் மக்களுக்கு இதுதான். அவர்களிடம் ஒற்றை மொழியைக் கொடுத்து அதை மட்டுமே சாராம்சமாக பயன்படுத்தச் சொன்னால் அது கடுமையான நடைமுறையாக, தட்டையான ஒன்றாக அவர்களுக்குத் தோன்றும். தமிழை பல்வேறு மொழிகளைப் போன்றே ஒழுங்காக அடிப்படையைக் கற்றுத் தெரிந்து பயன்படுத்துவதே இனி சரியானதான இருக்கும். மகுடேஸ்வரன்களின் காலம் முடிந்துவிட்டது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...