Skip to main content

போதை ஒரு நோய், குற்றமல்ல

 போதை மருந்து பயன்பாட்டுக்கு ஒருவரைக் கைது பண்ணுவது நோய்த்தொற்று ஏற்பட்டதற்காக ஒரு நோயாளியைக் கைது செய்வதற்குச் சமம். பெரும்பாலான சட்டங்கள் அபத்தமானவை எனில் மிக அபத்தம் இந்த போதைப் பொருள் பயன்பாட்டுச் சட்டம்தான். முதலில், ஒருவர் ஏதோ சில காரணங்களுக்காக போதை மருந்திற்கு அறிமுகமாகி அதற்குப் பழகினபின்னர் அவர் நோயாளியாகிறார் எனில் அவரால் பிரக்ஞைபூர்வமாக அதைத் தவிர்க்க இயலாது. அவருக்கு போதை மருந்தும் ஒருவித மருந்தாகிவிடும். எனில் அத்தகையவரைப் பிடித்து ஆறுமாதங்கள் சிறையில் அடைப்பதால் என்ன பயன்?

அடுத்து, போதை மருந்தை எடுத்துக்கொள்ளும் ஒருவர் சமூகத்திற்கு பாதிப்பை நேரடியாக உண்டுபண்ணுவதில்லை (திருட்டு, அடிதடி, கொலைக் குற்றங்களைச் செய்பவரைப் போல).
இந்தியாவில் மொத்தமாக ஏழரை கோடி பேர்கள் போதை மருந்து அடிமைகள் என்று அரசின் அறிக்கையே சொல்கிறது (https://socialjustice.gov.in/.../Magnitude_Substance_Use...). இதை விட நிச்சயமாக பலமடங்கு அதிகமாகவே இருப்பார்கள். இளைஞர்கள், பதின்வயதினர் இடையே இன்று மது போதையை விட போதை மருந்து போதையே அதிகம் என்பதை அறிவோம். இத்தனை பேர்களையும் பிடித்து சிறையில் அடைக்க இயலுமா? அரசால் எல்லா பள்ளி, கல்லூரிகளுக்கும் சென்று ரத்த மாதிரி வாங்கி சோதித்துப் பார்க்க இயலுமா? அதெல்லாம் சாத்தியமா? அதனால் பலனுண்டா?
கொசு கடித்து மலேரியா வந்தவரைக் கைது பண்ணுவோமா (ஏன் கவனமாக இருந்து மலேரியாவையும் அதன் பரவலையும் தடுக்கவில்லை எனக் கேட்டு) அல்லது கொசுவை, அது வளரக் காரணமான மழைநீர்க் குட்டைகளை ஒழிப்போமா?
தடைசெய்யப்பட்ட பொருளை வாங்கிப் பயன்படுத்துவது தவறெனத் தெரிந்துதானே அதைச் செய்கிறார் என சிலர் கேட்கலாம். அது ஒழுக்கக் குற்றமே ஒழிய அறப்பிறழ்வு அல்ல என தனிமனிதர்களுக்குத் தெரியும். அதனாலே அவர்கள் யாருக்கும் தெரியாதபடிக்கு அதைச் செய்யலாம் என நினைக்கிறார்கள். நீங்கள் போதை மருந்தை பயன்படுத்தினால் உங்கள் அண்டை வீட்டாருக்கு மாரடைப்பு உடனே வருமென்றாலோ பக்கத்து தெருவில் உள்ளவர் தன் சொத்தையோ மானத்தையோ இழப்பார் என்றால் அதை முதலில் வாங்கும்போதே மனசாட்சி எச்சரிக்கும், தவிர்ப்போம். ஒழுக்க மீறல்கள் எப்போதுமே இப்படித்தான் நிகழ்கின்றன. யாரும் காணாதபோது அவை மீறலே அல்ல.
போதை மருந்துப் பயன்பாட்டைத் தடுக்க இது உதவும் அல்லவா என்றும் அதே சிலர் கேட்கலாம். தண்டனையால் குற்றங்கள் குறைவதாக எந்த தரவும் ஆய்வும் தெரிவிக்கவில்லை (More imprisonment does not reduce state drug problems. The PEW Charitable Trusts. 2018. https://www.pewtrusts.org/.../pspp_more_imprisonment_does.... Accessed 27 May 2021.). மாறாகத் தண்டனைகள் போதை மருந்துப் பயன்பாட்டை அதிகரிக்கவே செய்கின்றன (Binswanger IA, Stern MF, Deyo RA, Heagerty PJ, Cheadle A, Elmore JG, et al. Release from prison-a high risk of death for former inmates. N Engl J Med. 2007;356:157–65.). பொதுவாகவே தண்டனைகள் காவலர்களுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் வக்கில்களும் தொழில் சாத்தியங்களை உண்டு பண்ணுகின்றன, சமூகத்துக்கு போலியான பாதுகாப்புணர்வு கிடைக்கிறது தவிர சமூகத்துக்குப் பயனில்லை. அடிப்படையில் தண்டனையானது போலி தடுப்பூசியைப் போன்றது. "People with substance use disorders need treatment, not punishment, and drug use disorders should be approached with a demand for high-quality care and with compassion for those affected" என்று நோரா வோல்கோவ் சொல்வதை நாம் கவனிக்க வேண்டும். போதை மருந்து நோயாளிகளுக்குத் தேவை தண்டனையல்ல, சிகிச்சைதான் என்கிறார் அவர்.
இதற்குப் பதிலாக, போதை மருந்துகள் கிடைக்கிற சூழலை, அதன் வலைத்தொடர்பை, வணிகத்தை ஒழிப்பதே தீர்வு. அதற்கு அரசு நிறைய பணத்தையும் ஆற்றலையும் இதற்குச் செலவிட வேண்டும். இம்மாதிரி போதை மருந்து பெருவியாபாரிகளிடம் இருந்து கட்சிகளோ காவல்துறையோ பணம் வாங்கக்கூடாது. ஆனால் அதுவும் முழுக்கச் சாத்தியமல்ல. ஏனென்றால் தாராளவாத சந்தைப் பொருளாதாரத்தில் எந்த வணிகத்தையும் சுலபத்தில் ஒழிக்க இயலாது. பணம் எங்கெல்லாம் அதிகமாகப் புழங்குகிறதோ அங்கெல்லாம் அதிகாரமும் இருக்கும், அதை நோக்கி சமூக அமைப்பு, சட்டம், அரசியல் வளையும். நவதாராளவாதத்திற்குள், தனிமனிதர்களும் நிறுவனங்களும் பணத்தை, சொத்தைச் சேர்ப்பதில் கட்டுப்பாடுகள் வரும்போது சமூகத்தில் பெரும்பாலான குற்றங்கள் ஒழியும்.
கொகெய்ன் பயன்படுத்தியதற்காக தமிழ்நாடு காவல்துறை நடிகர் ஶ்ரீகாந்த் கைது பண்ணியுள்ளது இந்த அபத்தக் கூத்தின் நீட்சிதான். போதை மருந்து விற்கிறவர்களைப் பிடித்தபின்னர் அவர்களது புகழ்பெற்ற வாடிக்கையாளர்களின் பட்டியலை எடுத்து அவர்களில் அதிகமாக அதிகாரமோ செல்வாக்கோ இல்லாத ஒருவரைக் கைது பண்ணியிருக்கிறார்கள். ஏனென்றால் காவல்துறைக்கும் சினிமா ஷோக்கு தேவைப்படுகிறது. பொதுவாக நடிகர்களைக் கைதுபண்ணினால் அவர்களுக்காக சிபாரிசு பண்ணும் அரசியல்வாதிகளோ தொழிலதிபர்களோ யாரும் ஶ்ரீகாந்துக்காக அழைக்கவில்லை என்று காவல்துறையோ அதிர்ச்சியடைந்ததாக பத்திரிகையாளர் அந்தணன் கூறுகிறார். ஆனால் ஶ்ரீகாந்துடைய கைதைக் கொண்டு காவல்துறைக்கு நல்ல கவனமும் டிராக்‌ஷனும் கிடைத்துள்ளது. அதற்காகத்தான் அவரைத் 'தேர்வு' பண்ணியுள்ளார்கள். இது அவர்களின் PROவின் பகுதி. அரசியலைப் போலவே காவல்துறையின் நடவடிக்கைகளிலும் சினிமாத்தனம் மிகுந்துவிட்டது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...