Skip to main content

நாவல் எழுதும்போதான நெருக்கடிகள்

 நாவலை எழுதிப் போகையில் ஒரு கட்டத்தில் என் துயரங்கள், நடப்புலகில் நான் எதிர்கொள்ளும் அபத்தங்கள், அவை தரும் மண்டையிடியைப் பற்றி நான் கவலை கொள்ளத் தேவையில்லாமல் போகிறது. எழுதாத போதும் அவற்றை நான் மறந்திருக்கிறேன் அல்லது பொருட்படுத்தத் தேவையில்லை என நினைக்கிறேன். இதைப் பற்றி ஒரு உளவியல் பேராசிரியரிடம் நான் விசாரித்த போது ஒரு விளக்கம் சொன்னார்: “நாம் ஒவ்வொருவருக்குள்ளும் உணர்வுகளை செயலாக்கம் செய்வதற்கு என ஒரு டெம்பிளேட் உள்ளது. இதை ஒரு வண்ணக் கண்ணாடி என்று கூறலாம். இதை நாம் அணிந்து கொண்டதும் உலகை நாம் பார்க்கிற வண்ணம், தீவிரம் மாறுபடுகிறது. பச்சைக் கண்ணாடியெனில் உலகம் பச்சை, சிவப்பெனில் உலகம் சிவப்பு. இந்த நடப்பு உலகம் ஏற்படுத்தும் பாதிப்பை சார்ந்து அதை எப்படி அர்த்தப்படுத்துவது, அதை எந்தளவுக்குப் புரிந்து கொள்வது என்பதைத் தீர்மானிப்பது இந்த டெம்பிளேட் தான். சிலருக்கு ஒருவர் முறைத்தாலே கடும் கோபம் வந்து கத்தியைத் தூக்கி வீசத் தோன்றும், மற்றொருவரோ காறித் துப்பினால் கூட அது உறைக்கவே உறைக்காததைப் போல போய் விடுவார். இது அடுத்தவர்களின் செயல்களை, உலகின் நிறபேதங்களை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும் எனத் தீர்மானிக்கும் டெம்பிளேட் ஆகும். ஆனால் ஒரு படைப்பாளி தான் எழுதும் நாவலுக்குள் தீவிரமாகப் போகும் போது அவர் அந்த நாவலின் உலகில் இருந்து, அங்கு உலவும் பாத்திரங்கள், அவர்களுடைய பிரச்சனைகள், உணர்வெழுச்சிகளில் இருந்து ஒரு மாற்று டெம்பிளேட்டை தன்னையறியாது உருவாக்குகிறார். இப்போது ஒரு அவனுக்குள் இரண்டு டெம்பிளேட்டுகள் தோன்றுகின்றன. அவனுடைய புனைவின் டெம்பிளேட் மெல்ல மெல்ல ஆதிக்கம் செலுத்தத் தொடங்க நடப்புலகின் டெம்பிளேட் பின்னுக்குப் போகிறது. இது ஏன் என்றால் நமது நரம்பணுக்கள் அதிகமாக புனைவு டெம்பிளேட்டால் தூண்டப்பட நடப்புலகின் பல தூண்டுதல்களுக்கு ஈடுகொடுக்க பின்னர் அதற்கு சக்தியில்லாமல் ஆகிறது.”

நீங்கள் எழுத விரும்பும் நாவலைக் குறித்து தீவிரமாக விவாதிக்க, வழிகாட்டுதலைப் பெற என் ஆன்லைன் நாவல் வகுப்பில் இணையுங்கள். மேலும் விபரங்களுக்கு 9790929153.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...