Skip to main content

நாவல் எழுத்தாளர்களைப் பயிற்றுவிக்கும் வகுப்பு 2025


 

ஒரு பிரதான பாத்திரத்தின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தமிழ் நவீன இலக்கியத்தில் சு.ராவின் “ஜெ.ஜெ சில குறிப்புகள்” நாவலை ஒரு தோதான உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஜெ.ஜெ கேரளத்தை சேர்ந்த ஒரு லட்சிய நாயகன். அவன் தன் இளமையில் ஒரு சிறந்த கால்பந்தாட்ட வீரனாக விளங்கி, பின்னர் இலக்கிய விமர்சகனாக மாறி ஒரு முக்கிய இலக்கிய ஆளுமையாக உருப்பெறுகிறான். அவனை தமிழகத்தை சேர்ந்த ஒரு இளம் எழுத்தாளன் சென்று சந்திக்கிறான். அவனுடைய வாழ்க்கைப் போக்கில் ஆர்வம் கொண்டு பின் தொடரும் இந்த தமிழ் எழுத்தாளனின் ஆய்விலும் பார்வையிலும் ஜெ.ஜெயின் வாழ்க்கை நாட்குறிப்புகளாக தொகுக்கப்படுகிறது. வெளியான போது அதன் வடிவ புதுமைக்காகவும், லட்சிய தெறிப்புகளுக்காகவும் பெரிய அலைகளை தோற்றுவித்த “ஜெ.ஜெ சில குறிப்புகளை” இப்போது படிக்கும் போது சிறப்புகளும் குறைகளும் துலங்குகின்றன. என்னதான் நான்லீனியராக எழுதப்பட்டிருந்தாலும் ஜெ.ஜெயின் சமரசம் செய்யாத துணிச்சலும், இலக்கிய விழுமியங்களின் மகத்துவம் மீது அவன் வைக்கும் நம்பிக்கையும், தன்னை அழித்து இலக்கியத்தை வளர்க்க அவன் தயங்காததும் நம்மை கவர்கின்றன. தன்னுடைய சூழலுடன் பொருந்திப் போக, சாமான்ய ஆத்மாக்களை புரிந்து கொள்ள அவன் முனையாத ஒருவித பிடிவாதமும் அவனுடைய துன்பியல் வழுவாகிறது (tragic flaw). அவனுடைய வீழ்ச்சியின் வேகம், மிக உயர்ந்த இடத்தில் இருந்து மிக மோசமான இடத்துக்கு அவன் துரிதமாக வந்து சேர்வதாக நான்லீனியர் கதைமொழி நமக்கு உணர்த்துகிற பாங்கு, ஒரு அச்சத்தை, அதனாலே பச்சாதாபத்தை அவன் மீது ஏற்படுத்துகிறது. ஆனால் இந்த ‘துன்பியல் வீழ்ச்சியை’ ஜெ.ஜெ ரொம்ப சீக்கிரமாகவே அடைந்து விடுவதால் ஒரு கட்டத்துடன் நாவல் தொய்வடைகிறது. அதே நேரம் அரிஸ்டாட்டில் துன்பியல் படைப்பு முழுமையும் ஆழமும் பெறுவதற்கு முக்கியமாக அறிந்தேற்றலை (recognition) கருதுகிறார். அறிந்தேற்றல் என்றால் ஒரு பாத்திரம் தன் வழுவை அறிந்து கொள்ளுதல், பெரும்பாலும் மீட்சியடைவதற்கு சாத்தியம் இல்லாத நிலையிலோ அல்லது வீழ்ச்சிக்கு சற்று முன்போ தன் குற்றத்தை முழுமையாக உணர்வது. இந்த அறிந்தேற்றல் ஜெ.ஜெயிடம் நிகழ்வதை அவனுடைய நாட்குறிப்புகள் சிலவற்றில் நாம் உணர்கிறோம். அப்போது அவன் எப்படியாவது தன்னை மீட்டுவிட மாட்டானா என ஏங்கிறோம், ஆனால் அது நிகழாத போது நமது ஏமாற்றம் ஒரு இருத்தலிய பரிமாணம் பெறுகிறது.

என் நாவல் வகுப்பில் இணைந்து மேலும் கற்றுக்கொள்ள விரும்பும் நண்பர்கள் தொடர்புகொள்ளவும் - 9790929153.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...