Skip to main content

நாவலில் பத்திகளை எழுதுவது - மெக்-இவன்

 இந்த நேர்முகத்தில் இயன் மெக்-இவன் புனைவில் வரும் ஒரு பத்திகளை கவிதையின் வரிகளுடன் ஒப்பிடுகிறார். கவிதையில் வரிகள் இடையே ஓசையளவிலும் கருத்து, தொனி, அர்த்தங்களின் அளவிலும் மாற்றங்களும், முரண்களும் அவசியம், இவை ஒரு சீராக வரும்போது தாளமாகிறது. அது வாழ்க்கையின் பாய்ச்சலுக்கு, நமது பிரக்ஞையின் உள்ளோட்டத்துக்கு நெருக்கமாக கவிதையைக் கொண்டு வருகிறது. ஆனால் கவிதையின் தீவிரத்தை, மிக நுட்பமான விவரிப்பை புனைவில் நம்மால் கொண்டு வர முடியாது. செய்தாலும் அது வாசகருக்குத் திகட்டும். கதை ஒழுங்குக்கு வராமல் அலைவதாகத் தோன்றும். கவிதையின் தீவிரத்தையும் அழகையும் புனைவுக்கு கொண்டு வந்து அதேநேரம் அது ரொம்பவே கவிதைத்தனமாக ஆகாமல் இருக்க மெக்-இவன் ஒரு உத்தியைச் சொல்கிறார் - இது ஏற்கனவே ஸ்டைலிஸ்டுகள் பலமுறைச் சொன்னதுதான்: ஒவ்வொரு பத்தியையும் தன்னளவில் முழுமையான ஒரு வாக்கியமாகக் கருதி உருவாக்குவது. ஒரு அத்தியாயத்தில் பத்து பத்திகள் இருந்தால் ஒவ்வொன்றும் கதையின் வளர்ச்சியில், போக்கில் ஒருவிதமான மாற்றத்தின் ஒழுங்குவரிசையை உருவாக்குவதில் பங்களிக்கும். அவை ஒருங்கே ஒருவித தாளத்தை, மனநிலையைக் கட்டமைக்கும். தனித்தனியாக அவற்றுக்கு மதிப்பிருக்காது. இப்படியான அத்தியாங்களைப் படிக்கையில் தன்னளவில் மிகுந்த அழகு கொண்டவையாக, நம் மனத்தில் ஆழமாகப் படிவனவாக இருக்கும். கோயில் பிரகாரத்தில் தீட்டப்படி தனி ஓவியங்களைப் போல, சிற்ப வரிசையைப் போல. கலவியின் போது தரப்படும் முத்தங்களைப் போல.


மெக்-இவன் இதைச் சொல்லக் கேட்டபோது எனக்கு என் புனைவிலும் அத்தியாயங்களை மிகவும் ஈடுபாட்டுடன் ரசனையுடன் அமைக்க வேண்டும், கதையை நகர்த்துவது மட்டுமே அத்தியாயங்களின் நோக்கமல்ல என்று தோன்றியது. இப்போது எழுதிவரும் நாவலைத் திருத்த இது உதவியது.

சினிமா நடிகர்களின் பேட்டிகளைவிட இத்தகைய பேட்டிகள் அர்த்தபூர்வமானவை. எழுத்தாள நண்பர்கள் இதைப் பாருங்கள். 


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...