Skip to main content

நட்சத்திரத்தைச் சந்திப்பது

இரு பத்தாண்டுகளுக்கு முன்பு நான் ஒரு நாளிதழில் மொழிபெயர்ப்புப் பிரிவில் வேலை செய்தேன். பயனர்களை ஊக்கப்படுத்த ஒரு திட்டம் கொண்டு வந்தார்கள் - சில தொடர் கேள்விகளுக்கு சரியாக பதிலளித்தால் அப்போது முன்னணியில் உள்ள நடிகர் ஒருவருடன் ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்து சாப்பிடலாம். எனக்கு இது பெரிய ஹிட்டடிக்கும் என்று தோன்றியது. ஒன்று, அந்நடிகர் அப்போது பெரிய ஹிட்களைக் கொடுத்தவர். அபாரமான நடிகர். இரண்டாவது, அது பெரிய ஓட்டல். போட்டியில் நாற்பத்து சொச்சம் பேர் ஜெயித்தார்கள். எல்லாரையும் கூட்டி ரசிகர் சந்திப்பு போல ஏற்பாடு பண்ணி விருந்தும் அளிக்கலாம் என நிர்வாகம் முடிவு செய்தது. நடிகரும் ஏற்றுக்கொண்டார். இப்போது எங்கள் அணியில் இருந்து வெற்றி பெற்ற ஒவ்வொருவரையாக அழைத்து வரக் கேட்டோம். ஆனால் ஆச்சரியமாக அவர்களில் கணிசமானோர் வர மறுத்துவிட்டார்கள். அவருடன் விருந்து சாப்பிடவோ புகைப்படம் எடுக்கவோ அவ்வளவு தூரம் பயணித்து சென்னைக்கு வர முடியாது என்றார்கள். நாங்கள் திரும்பத் திரும்ப அழைத்ததில் எட்டு பேர்கள் ஒப்புக்கொண்டார்கள். அதிலும் நான்கு பேர்தாம் வந்தார்கள். கடைசியில் ரசிகர்கள் சந்திப்பு ஒருவாறு நடந்து முடிந்தது. அவர் அதன்பிறகு பல படங்களைச் செய்தார். இன்றும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

எனக்கு அந்தச் சம்பவத்தின்போது தான் நட்சத்திர பிம்பம் சிரமப்பட்டு கட்டமைக்கப்பட வேண்டியது, மிகமிகச் சிலருக்கே இயல்பாகவே பிரபல்யம் அமையும், அவர்கள் தோன்றினாலே மக்கள் திரள்வார்கள், அதுவும் சமய சந்தர்பங்களால் அமைவதுதான் என்று புரிந்தது. நல்ல கதை, இயக்கம், சகநடிகர்கள், அதிர்ஷ்டம் எல்லாம் அமையும்போது ஒருவர் நட்சத்திர நடிகர் ஆகிறார். தனியாக அவர் தோன்றினால் மதிப்பில்லை. அடுத்தடுத்த வெற்றிகள் வந்ததும் அவர் தனக்காவே படம் ஓடுகிறது என நம்ப வைக்க முயல்வார். சந்தை மதிப்பைப் பெருக்கித் தக்கவைத்த பிரயத்தனம் செய்வார். அது பல சமயங்களில் வேலையும் செய்யும்.
இன்னொன்று, நட்சத்திரங்களின் சிறப்பே அவர்கள் அரிதாகத் 'தோன்றுகிறார்கள்' என்பது. அதில் ஒரு வியப்பு உள்ளது. வியப்புதான் அவர்களது சந்தை மதிப்பு. திரையில் திடீரெனத் தோன்றும்போது வரும் வியப்பும் அத்தகையதே. அதை ரசிகர்களே ஒருபக்கம் அழிக்க விரும்ப மாட்டார்கள். இன்னொரு பக்கம், அந்த வியப்பு பல காரணங்களால் மிகப்பெரிதாக மாறும்போது அவர்களே அதைக் கலைத்து நெருங்க வேண்டும் என்றும் பெருவிருப்பம் கொள்வார்கள். தஸ்தாவஸ்கியின் "கரமசோவ் சகோதரர்கள்" நாவலில் வரும் Grand Inquisitor அத்தியாயம் இதனோடு ஒப்பிடத்தக்கது - அதில் ஏசு உயிர்த்தெழுந்து கத்தோலிக்க சாமியார் முன்வந்தால் என்னவாகும் எனும் கற்பனைக் கதையை வைத்து இவான் கடவுள் மறுப்பைப் பேச முயல்வார். ஏசுவைப் பார்க்கும் சாமியார் அவரைப் பிடித்து சிறையில் அடைக்கச் சொல்வார். அங்கு சென்று அவர் ஏசுவிடம் "அதிசயங்கள் செய்வதன் வழியாகவே ஒருவர் தெய்வமாகிறார். அதைச் செய்ய மறுத்து அல்லது அதை அன்றாட வழக்கமாக்கி நீ தெய்வீகத்தையே இல்லாமல் ஆக்குகிறாய். அதை மனிதர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நீ தொடர்ந்து பூமியில் இருந்தால் மக்கள் கலவரம் பண்ணி தம்மையே அழித்துக் கொள்வார்கள். போய் விடு அல்லது இம்மக்களைப் பயன்படுத்தி உன்னை எரித்துக் கொல்வேன்" என்பார். உச்ச நட்சத்திரங்கள் நம்மிடையே புழங்கினால், நாம் காய்கறி வாங்கும்போது பக்கத்தில் வந்து நின்று தக்காளி அரைக்கிலோ போடுங்க என்றால் நமக்கு அது பெரும் தொந்தரவாகும். அவர்களை அடுத்து திரையில் பார்க்கும்போது திடீரென எங்கிருந்தோ வருகிறார்கள் எனும் அதிசய உணர்வு அந்தளவுக்கு வராது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...