Skip to main content

சேலம் இட்லி

கடந்த ஞாயிறன்று சேலத்துக்குச் சென்றிருந்தேன். சேலத்தில் என்னை அசரடித்தது இட்லி. நான் இதுவரைச் சாப்பிட்டதிலேயே சிறந்த இட்லி அங்கு ஶ்ரீகிருஷ்ணா எனும் ஓட்டலில் சுவைத்ததே. முருகன் இட்லி கடையில் கிடைக்கும் இட்லி மென்மையாக இருக்கும், ஆனால் இந்த இட்லியோ மென்மையுடன் தனித்த சுவையும் கொண்டது. ஒப்பற்றது (சாரு தன் "எக்ஸைலில்" இட்லியை நிதம்பத்துடன் ஒப்பிடுவாரே அதற்கு ரொம்ப பொருத்தமான இட்லி இது). சரி அந்த ஓட்டலின் சிறப்பு போல என நினைத்துக்கொண்டேன். அடுத்த நாள் ஒரு தெருவோர சிறிய கடையில் இட்லி வாங்கினேன். அது இந்தளவுக்கு மென்மையாக இல்லையென்றாலும் அபாரமான சுவையைக் கொண்டிருந்தது. இந்த ஊரின் மண்ணில் விளைகிற அரிசியில்தான் ஏதோ மாயம் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். அன்று மதியம் சாப்பிட்ட பிரியாணியின் சீரகச் சம்பாவும் தித்தித்தது. அப்போதுதான் அந்த ஊர் அரிசியில் உள்ள சிறிய இனிப்பு, வித்தியாசமான அடிநாக்கில் பரவும் இனிப்பே இட்லியை அவ்வளவு ரம்மியமான அனுபவமாக மாற்றுகிறது என்று புரிந்தது. அன்று மாலை அதே சேலத்தில் திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது இடைவேளையின்போது அரிசி விளம்பரம் போட்டார்கள். வேறெதாவது ஊரில் பார்த்தால் சிரித்திருப்பேன், ஆனால் உணவின் ராஜாவே அந்த அரிசிதான் எனும்போது திரையில் விளம்பரம் என்ன கோயில் கட்டி கும்பிடலாம்.

சேலத்துக்காரர்கள் உண்மையிலே கொடுத்து வைத்தவர்கள்தாம். அவர்களால் வேறு ஊர்களுக்குப் போய் அந்த ஊர் அரிசி வகைகளை, இட்லியை ரசிக்கவோ சகிக்கவோ சிரமமாக இருக்கும். நான் அரிசிச் சோற்றுக்கு இப்படி அடிமையாவேன் என்று நினைத்ததில்லை. ஆனால் பாருங்கள் நான் பேலியோ டயட்டில் இருக்கிறேன். பயணித்ததாலே அன்று டயட்டைக் கழற்றி மூலையில் போட்டேன். ஊர் திரும்பினால் பழையபடி பேலியோதான். அதனால் அங்கிருந்து அரிசி வாங்கவில்லை. ஒருநாள் மீண்டும் அங்கு போய் சாப்பிட வேண்டும்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...