Skip to main content

"நிழல் பொம்மை" - உரையாடல் நிகழ்வு - ஊட்டி இலக்கிய விழா

 வரும் சனிக்கிழமை ஊட்டியில் இலக்கியத் திருவிழாவில் என்னுடைய "நிழல் பொம்மை" நாவல் குறித்து எழுத்தாளர் எம்.டி முத்துக்குமாரசாமியுடன் பேசுகிறேன். இது ஒரு உரையாடல் நிகழ்வு. நேரமிருந்தால் நாவலில் இருந்து சில பத்திகளையாவது வாசித்துக்காட்ட ஆசையுண்டு. ஒரு எழுத்தாளர் இப்படித்தான் தன் நூலைக் குறித்து உரையாடி வாசகர்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும் என நம்புகிறேன். அதனால் நானே நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் விண்ணப்பம் வைத்து அமர்வை இவ்வாறு உருவாக்கச் சொன்னேன்.


பொதுவாக நம் இலக்கிய விழாக்களில் நடப்பதைப்போல எழுத்தாளரை அழைத்து அவரது படைப்புலகுக்கு சம்மந்தமில்லாமல் சங்க இலக்கியதில் குதிரைகள், சமகால கொங்கு இலக்கியத்தில் குரங்குகள், நெல்லை இலக்கியத்தில் யானைகள் போன்ற பொதுத்தலைப்புகளில் எழுத்தாளர் பேசலாகாது. எழுத்தாளரின் பணி இலக்கியத்தைப் பயிற்றுவிப்பது அல்ல, தன் எழுத்தைப் புரொமோட் செய்வதும் மற்றவர்களைத் தம்மைக் குறித்துப் பேச வைப்பதுமே.
எழுத்தாளர்கள் பொதுத்தலைப்புகளில் உரையாற்றினால், கல்யாண மண்டபங்களில் மைக்கில் வாழ்த்த வரும் பெரிசுகளைப் போல அவர்களை நடத்தும் சமூகம் மெல்லமெல்ல அவர்களைப் பேச்சாளர்களாக முத்திரை குத்தி இருட்டடிப்பு செய்துவிடும். எழுத்தாளரின் ஒவ்வொரு சொல்லும் தன்னையும் தன் எழுத்ததையும் தன் இலக்கிய கருத்தியலையும் நம்பிக்கையையும் தன் வகையான எழுத்தையும் நோக்கி மட்டுமே இருக்க வேண்டும்.
இதைப் புரிந்துகொள்ள நாம் இரு வெகுஜனப் படைப்பாளிகள் 90களில் எப்படித் தம்மை மேடைகளிலும் ஊடகத்திலும் முன்வைத்தார்கள், எதைப் பற்றிப் பேசினார்கள் என்று பார்த்தால் போதும்: வைரமுத்து, பாலகுமாரன். அவர்கள் தம் எழுத்துக்கு நேரடித் தொடர்பில்லாத ஒரு சொல்லைக் கூடப் பேசி நீங்கள் பார்க்க முடியாது. வைரமுத்து மதுரை மாவட்ட நாவல்களைப் பற்றிப் பேசி புரொமோட் செய்ய நேரத்தை வீணடிக்க மாட்டார். பாலக்குமாரன் தொடர்ந்து தன்னையும் யோகி ராம் சுரத்குமாரையும் பற்றி மட்டுமே பேசினார்.
ஏனென்றால் வசீகரமான பேச்சை வைத்துக்கூட இலக்கியத்தை விற்க முடியாது. எஸ்.ரா தல்ஸ்தாய் பற்றி ஒரு மணிநேரம் பேசுவதைக் கேட்டுவிட்டு நாம் அவரது உப பாண்டவத்தை வாங்க மாட்டோம் - தல்ஸ்தாயை வாசிக்கவோ எஸ் ரா தல்ஸ்தாய் பற்றி எழுதிய உரைநூலைப் படிக்கவோ தான் தலைப்படுவோம். அதனாலே முதலில் நாம் நம்மைப் பற்றி அதிகமாகப் பேச மேடைகளைப் பெறவேண்டும். அதன் பிறகு நிறைய அவகாசம் இருந்தால் முன்னோடிகளையும் சமகாலத்தவர்களையும் பற்றிப் பேச வேண்டும்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...