Skip to main content

காலமும் ஒழுக்கமும்

புத்தரின் அடிப்படையான கருத்தே அனைத்தும் - முக்தியும் கூட - நிபந்தனைக்கு உட்பட்டது என்பதுதான். அதாவது ஒருவர் தியானம், ஒழுக்கம், கருணை என அமைதியான விழிப்பான வாழ்க்கையை வாழ்ந்தாலும் அது கயிற்றின்மீது நடப்பதைப் போன்றதே. அமைதியும் கருணையும் அக ஒளியும் நிபந்தனைக்கு உட்பட்டவை எனும்போது எவையும் நிலைப்பதில்லை. எதுவும் நிபந்தனைக்குட்பட்டது எனும் கருத்து கூட நிபந்தனைக்குட்பட்டதே. ஆக நாம் பத்து கார்களை ஒன்றின்மீது ஒன்று வைத்து ஓடவிட்டால் எப்படி இருக்குமோ அப்படியான இருத்தலையே கொண்டிருக்க முடியும். எக்கணமும் தடுமாறுவதும் நிலைகொள்வதும் இரண்டுமே நிபந்தனைக்குட்பட்டு தோன்றுகின்றன எனும் உணர்வைத் தக்க வைப்பதுமே சாத்தியமுள்ள நிலைகள். 

முன்பு நான் ஜென் துறவிகளின் நூல்களைப் படித்துவிட்டு அவர்கள் எப்போதும் அனுபூதி நிலையில் இருப்பார்கள், அகம் மலர்ந்த பின் அது கூம்பாது என்றே அபத்தமாக நம்பினேன். பின்னரே மலர்தலே மலர்தல் அல்லாத நிலையைச் சார்ந்துள்ளதால் எதுவும் பூரணமாக மலர்வதோ வாடுவதோ இல்லை என நாகர்ஜுனரின் வழியாகப் புரிந்துகொண்டேன். சின்னச்சின்ன தெளிவுகளைக் கடந்து கடைசிவரை எல்லாரும் சாமான்யமான மனிதராகவே இருக்க முடியும். புத்தரும் அப்படியே மரித்திருக்க முடியும். அதனாலே புத்தரின் கால் பாதம் வழிபடப்படுகிறது - நம்மைப் போல சாதாரணமாக மட்டுமே இருக்க முடிந்தவர், அதனாலே அவர் மரணமும் உற்றார். பௌத்தம் அதன் வெவ்வேறு வடிவங்களில், பள்ளிகளில் வளர்ந்தபோது, வெகுமக்கள் மதமாகியபோது புத்தருக்கு ஆன்மா உண்டு எனும் கருத்தை சிலர் எட்டினர். ஏனெனில் ஆன்மா இல்லாதபோது, முக்தி நிலையற்றதாகும்போது மத நிறுவனங்களைக் கட்டமைக்க அது உதவாது. மெல்லமெல்ல பௌத்தம் வைதீகத்துக்கு அருகில் வந்தது அல்லது பௌத்தத்தை தழுவி உருவான வைதீகத்துடன் அது கைகோர்த்தது அப்படியே. இன்றும் வைதீக, கிறித்துவ மதங்களைச் சார்ந்தோர் ஆன்மா சார்ந்த நிரந்தர முக்தியின் பாலான சாராம்சவாத பௌத்தத்தையே விரும்புகிறார்கள். 

ஆனால் அசலான பௌத்தம் எதையும் நிரந்தரமாக, நிபந்தனைக்கு அப்பாலானதாக, முழுமையாக உருமாற்றுவதாக, நீடிப்பதாக ஏற்காது. அப்படி ஏற்காமையே விடுதலை என அது சொல்லும். புத்தரே நிபந்தனைக்குட்பட்டு தோன்றும் மனநிலைதான். நிபந்தனைக்குட்பட்டதெனத் தோன்றும் நிபந்தனையினால் ஆன நிலை. 

பௌத்தம் கோரும் ஒழுக்கமும் அறமும் கூட நிபந்தனைக்கு உட்பட்டதே - ஒழுங்கீனம் சூனியமானது எனும்போது கிடைக்கும் தெளிவு அந்த சூனியத்தை மேலும் பற்றிக்கொள்ளாதிருக்கும் பொருட்டு சுயக்கட்டுப்பாட்டை விதிக்கக் கோருகிறது. கெட்டுப் போன உணவெனத் தெரிந்தபின் சாப்பிடாமல் தவிர்ப்பதைப் போல. இது மிகமிகச் சிக்கலானது. நம் மனத்திலும் உடலிலும் காலமே செயல்படுகிறது - காலம் என்பது காரண காரிய விசையின் உருவகம். அதனாலே நாம் எதாவது ஒன்றை நோக்கி சதா ஈர்க்கப்படுகிறோம் - நம் கண்கள், நாசி, புலன்கள், நம் உடல், சிந்தனை, உணர்வுகள் காலத்துள் இருப்பதாலே அசைவுற்றபடி உள்ளன. நீங்கள் காலத்தை சூனியமாக்கினால் அசைவு அர்த்தமிழக்கும். அப்போது நாம் விளையாட்டாக ஜாலியாக அசைய வேண்டியிருக்கும், சும்மா ஒரு இலை அசைவதைப் போல. இது மொழியின் அமைப்புக்கு ஏற்றது அல்ல, இது சமூக வாழ்க்கைக்கு உகந்ததல்ல. காலம் என்பது 'ஒழுங்கீனத்தின்' இன்னொரு வடிவமெனில் காலத்துள் இருக்கும் நாம் 'ஒழுங்கீனத்தால்' அமைந்தவர்கள் ஆகிறோம். இவ்வளவு சிக்கலான ஒன்றை புலனடக்கம் என சுருக்கிக் கொள்ள முடியாது - கால-அடக்கமே புலனடக்கம். எனில் நாம் எங்கு சென்று அதை நாட முடியும்? நம் பாலுறுப்பு காலத்தினுள் அமைந்திருப்பதால் நம்மால் பாலுறுப்பை எப்படிக் கட்டுப்படுத்த இயலும்?

இக்கேள்விகளுக்கு அவரவருக்கான பதில்களை அவரவரே கண்டடைய முடியும்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...