மனுஷ்ய புத்திரன் தன் கட்டுரையில் ‘திறன் வெளிப்பாடு’ என்றுதான் எழுதினார். அதை நான் திறன் மேம்பாடு எனத் தவறாகப் புரிந்துகொண்டு அதை விமர்சித்ததது தவறுதான். தவறான மனப்பதிவினால் நேர்ந்த பிழையை மன்னிக்கவும். அப்பகுதியை நீக்கியும் விட்டேன்.
இங்கே நான் இருவேறு விளக்கங்களைத் தரவேண்டும்:
முதலில், நான் மனுஷ்ய புத்திரனை - அவர் சொல்வதைப்போல - நான் பாஸிஸ்ட் என்று கண்டுபிடித்துக் கூறவெல்லாம் இல்லை - அவரது அக்கட்டுரையின் தொனியிலும் கருத்துக்களிலும் பாஸிஸத்தன்மை தெரிகிறது என்றேன். பாஸிஸ்டாவது எழுத்தின்வழியாக அல்ல என்று எனக்குத் தெரியும். பாஸிஸம் ஒரு சித்தாந்தம், அது ஒரு சமூகச் சூழலின் விளைவு, அதிகார அமைப்பை முழுக்க மாற்றியமைக்கும்போது தோன்றுவது, அது ஆளுமையோ மனநிலையோ அல்ல. மனுஷ்ய புத்திரன் தன் இளமையிலிருந்தே கொஞ்சம் அனார்க்கிஸமும் (அரசின்மைவாதம்), தாராளாவதமும், குடிமைச் சமூகத்தின் முக்கியத்துவம் குறித்த பிரக்ஞையும் கொண்டவர். இந்த பிரதான குணங்கள் அவரது பல்வேறு நடவடிக்கைகளில், சொற்களில், முடிவுகளில் வெளிப்படும். அவரது உதிரியான சில குணங்களையும் அறிவேன். ஒரு குறிப்பிட்ட சூழலில் இதற்கெல்லாம் நேர்மாறான ஒரு அணுகுமுறையை அவர் எடுக்கலாம், தொனியை வெளிப்படுத்தலாம், அது அவராகாது. இதே போல இன்னும் பத்து கட்டுரைகள் எழுதினாலும் அவர் பாஸிஸ்ட் ஆகப் போவதில்லை. பாஸிஸ்டுகள் கட்டுரை எழுதுவோர் அல்ல, பாஸிஸ்டுகள் பாஸிஸத்தன்மை கொண்ட இயக்கங்களை கட்டியெழுப்பி உருவாகும் ஆளுமைகள். ஆகையால் நான் அவரை பாஸிஸ்ட் என்று சொன்னதாக அவர் சொன்னது அவர் மொழியில் விளையாட்டாகச் சொல்வதானால் ஒரு ‘பச்சைப் பொய்’. சிலநேரங்களில் நாம் வாக்கியங்களில் வரும் சில சொற்களை கற்பனையில் பெருக்கி ஒரு சித்திரத்தை எழுப்புவோம். அது உண்மையல்ல. அதனாலே இவ்விளக்கம்: அவரே நினைத்தாலும் பாஸிஸ்ட் ஆக முடியாது. பாஸிஸம் தனிமனிதத் தன்மையல்ல.
அடுத்து, நான் ஏன் என் நேற்றைய கட்டுரையின் துவக்கத்திலும் முடிவிலும் கடும் விமர்சனத்தின் மத்தியில் மனுஷ்ய புத்திரனைப் பாராட்டுகிறேன், ஏன் அவரிடத்து என் அன்பைத் தெரிவிக்கிறேன், அதன் அவசியமென்ன என்று சில நண்பர்கள் நேற்று என்னிடம் கேட்டார்கள். கருத்தும் தனிமனிதரும் ஒன்றல்ல, கருத்தும் தனிமனிதச் செயல்பாடும் அத்தனிமனிதரும் கூட ஒன்றல்ல என்று நான் நம்புகிறேன். நமது வெளிப்பாடுகள் வெளியில் இருந்து வருவன, அவற்றை நாம் பிரதிபலிக்கிறோம், அதைத்தாண்டி நம்மால் ஒன்றுமே சொல்லவோ பேசவோ முடிவதில்லை. உள்ளுக்குள் நாம் நமது உள்வெளி மனிதர்களுடன் உரையாடுகையில் ஓரளவுக்கு நமது நம்பிக்கைகள், விழுமியங்களுடன் இணக்கமாக இருக்கிறோம், அதுவுமே அவர்களையும் சூழலையும் நாம் தீர்மானிப்பதால்தான். சூழல் மாறும்போது மனிதர்கள் மாறுவதாக தோற்றம் ஏற்படும், அது வெறும் தோற்றமே, அவர்கள் சூழலைப் பிரதிபலிப்பார்கள், உள்ளுக்குள் இன்னொருவராக இருப்பார்கள். அங்கு நாம் சென்றால் தமக்கு இணக்கமான அச்சூழலையும் அதன் உணர்வுகள், எண்ணங்களையும் பிரதிபலிப்பார்கள். பொதுவாழ்க்கையில் நமது உள்வாழ்க்கையும் சிலநேரங்களில் வெளிச்சூழலாக மாறும். சிலநேரங்களில் இரு வாழ்க்கைகளிலும் இருவராக மக்கள் இருப்பர்.
இதை நான் மனுஷ்ய புத்திரனிடம் மட்டுமல்ல, வேறு சில எழுத்தாள நண்பர்களிடமும் கண்டிருக்கிறேன். அவர்கள் முரண்படுகிறார்கள் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை, அதுவே நம்மால் இயன்றது. அதனாலே கருத்தை எதிர்ப்பது, மிகக்கடுமையாக, மிக மூர்க்கமாக எதிர்ப்பது, ஆனால் தனிமனிதரை விரோதியாக பாவிக்காமல் இருப்பது உத்தமம். நான் என்னதான் மனுஷ்ய புத்திரனை எதிர்த்து எழுதினாலும் அவர் மீதுள்ள என் நேசம் துளிகூட மாறுவதில்லை.
அதென்ன நேசமென்று இரு நண்பர் கேட்டார்கள்: அவர் எனக்கு பொருளியல் ரீதியாக என்ன செய்திருக்கிறார்? எப்போதும் எனக்காக இருந்திருக்கிறாரா என்றும் கேட்டார் அந்நண்பர்கள். நானும் அவருக்கு எதுவும் பொருளாகக் கொடுத்ததோ அவருடன் நெருக்கடியின்போது இருந்ததோ இல்லையே என்றேன். அதெல்லாம் அவசியமில்லை என நினைக்கிறேன்.
சரி, அதென்ன நேசம்? அதன் பொருளென்ன? சிலர் நம்மீது செலுத்தும் தாக்கம் நேரடியாக திட்டமிட்டதாக இருக்காது. கண்ணுக்கே தெரியாமல் அது நமக்குள் வேலை செய்யும், நம்மை மேலான மனிதராக்கும். அவர் மீதுள்ள என் பிரியம் எனக்குள் நான் உணரும் அவரது தாக்கத்தில் இருந்து வருகிறது. என் தலைமைப் பண்பில் அவரது நிழல் விழுவதை உணர்ந்திருக்கிறேன். அவரை நுணுக்கமாக கவனித்து வாதம் செய்வதைக் கற்றிருக்கிறேன். இன்னும் வார்த்தைகளால் சொல்ல முடியாத எத்தனையோ விசயங்கள் உள்ளன; நாம் ஒரு கடைக்குச் சென்று பிடித்த விசயங்களை அவ்வப்போது பொறுக்கி வந்து நமக்கான உலகை மேம்படுத்துவதைப் போல நண்பர்கள் நமக்குள் சிறுதுணுக்குகளாக, நிழல்களாக, சலனங்களாக வருகிறார்கள்; இதை இன்னொருவருக்கு நியாயப்படுத்த, விளக்க முடியாது. நட்பென்பது கொடுக்கல் வாங்கல்ல, ஒத்துப் போவதல்ல, அது கண்ணுக்குப் புலனாகாத விதத்தில் பரஸ்பரம் மகிழ்ச்சியாக்குவது, நிரப்புவது என்று அரிஸ்டாட்டில் சொல்கிறார். நான் அந்தளவுக்கு அவருக்கு நட்புக்கரம் நீட்டியதில்லை, சிறந்த நண்பராக இருந்ததில்லை, ஆனால் அவர் இருந்திருக்கிறார்.
நான் அவரது பத்திரிகையில் எழுதியது கூட பொருட்டில்லை, நான் எப்படியோ எங்கெங்கோ எழுதி உள்ளே வந்திருப்பேன் என இப்போது தோன்றுகிறது. ஆனால் அவரது ஆளுமையே என் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது. இதுவே அவர் மீதான என் மட்டற்ற நேசத்தின் காரணம். அதை விளக்கவோ நியாயப்படுத்தவோ முடியாது. எனக்கு அவரிடம் எவ்வளவு கோபம் வந்தாலும், விமர்சனம் தோன்றினாலும், வெறுப்பு வந்தாலும் நெருப்பின் மையம் போல இந்த நேசம் இருந்துகொண்டே இருக்கும். இதை அர்ப்பணிப்புணர்வு, வழிபாட்டு மனநிலை என்றும் கூற மாட்டேன். அதற்கான பித்து நிலை என் இயல்பில் இல்லை. இதை ஒருவித நட்பு என்பேன்.
இது மன்னிப்புக் கடிதமோ, காதல் கடிதமோ அல்ல. என் நிலைப்பாட்டை என் நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும் என நினைத்தேன். நான் எதையும் மறைத்து வைப்பதில்லை. என் நெஞ்சில் உள்ளது சொற்களில் அப்படியே பிரதிபலிக்கும்.
சுருக்கமாக, அவரது சொற்களின் தொனி தவறானது, அவரது கருத்துக்களுடன் முரண்படுகிறேன். என் தார்மீக நிலையில் இருந்து தற்காலிக எதிர்ப்பும் விமர்சனமும். அதைத்தாண்டி அவரை வெறுக்க நான் மிகக்கடுமையாக முயல வேண்டும். அதற்கு எனக்கு சக்தியில்லை. எனக்கு தனிமனித வெறுப்பில்லை, கோபமில்லை எப்போதுமே. பெரிய மலைச்சிகரங்கள் எப்போதும் இருந்துகொண்டிருப்பதைப் போல இந்த பிரச்சினைகள் தீர்ந்து மேகங்கள் கலைந்தபின்னரும் நாம் வெளிப்படுவோம், நீடிப்போம்தானே.