Skip to main content

மொழி தேவையில்லாத சமூகம்


பள்ளிக்கல்வி இனிமேல் அதாவது அடுத்த கால் நூற்றாண்டுக்குள் நேரடி வகுப்புகள் குறைவாகவும், பதிவு செய்யபட்ட காணொளிகளும் பயிற்சிகளும் கொண்ட இணையவழி வகுப்புகள் அதிகமாகவும் இருக்கும். கட்டாயப் பாடங்கள் சொற்பமாகவும் தேர்வுப்பாடங்கள் அதிகமாகவும் இருக்கும். புதிய கல்விக்கொள்கையைப் பார்த்தால் ஏற்கனவே இதற்கான வேலையை ஆரம்பித்துவிட்டார்கள் எனத் தெரியும். தமிழ்நாடு அரசு இப்போதைக்கு புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கலாம், ஆனால் எதிர்காலத்தில் ஒரு சிறிய இடைவெளி விழுந்தால் உள்ளே கொண்டு வந்துவிடுவார்கள். ஒரே ஒரு பிரச்சினை - தனியார் பள்ளிகள் லட்சக்கணக்கில் வருடத்திற்கு வசூலிப்பதை நியாயப்படுத்த நிறைய உள்கட்டமைப்பில் முதலீடு செய்திருக்கிறார்கள். அவர்களால் புதிய பாணி கல்வியை உடனடியாக ஏற்க முடியாது. கட்டணத்தை குறைக்கவும் இயலாது. ஆரம்பத்தில் நிறைய குழப்பங்கள் தோன்றும். இப்போதே சீனாவில் குழந்தைப்பேறு குறைந்ததில் பள்ளிகள் பல மூடப்படுகின்றன. இந்தியாவில் இது 2055க்கு மேல் நிகழும் என்கிறார்கள். அப்போது வேறுவழியின்றி தொலைதூரக் கல்வியை ஏற்பார்கள், பல ஆசிரியர்கள் வேலை இழப்பார்கள். மாணவர்களுக்கு எதைக் கட்டாயமாக அளிக்க வேண்டும் என்பதில் இருந்து அரசு வழுவிக்கொள்ள அவரவர் தேவைக்கேற்ப பாடங்களைத் தேர்வு பண்ணும் 'உணவக மெனுகார்ட்' நடைமுறை வரும், பல்வேறு பாடத்திட்டங்கள், கஸ்டமைஸ்ட் பாடத்திட்டங்கள் வரும். 12 வயதுக்கு மேல் தொழில் செய்து கல்வி கற்கும் சூழல் ஊக்கப்படுத்தப்படும். 

இந்த களேபரத்தின் இடையே, மாணவர் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைய கட்டாய மொழிக் கொள்கைகள் சாத்தியமாகாது. மாணவர்கள் தமக்குத் தேவையெனக் கருதும் மொழிகள் மட்டுமே கற்பிக்கப்படும். ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் இது மாறிக்கொண்டே வரும். பெங்களூரில் பல தனியார் பள்ளி மாணவர்களுக்கு கன்னடாவில் வாசிக்கத் தெரியாது. எதிர்காலத்தில் இந்தி, சமஸ்கிருதம், உள்ளூர் மொழி எதையும் படிக்க மாட்டார்கள். ஆங்கிலத்தைக் கூட செயலியே நமக்காக எழுதும் எனும்போது அதையும் முறையாகப் படிக்க மாட்டார்கள். முழுக்க மாறுபட்ட வினோதமான மேலோட்டமான சமூகம் ஒன்று உருவாகும். இப்போதைய தமிழ்நாட்டு தனியார் பள்ளி மாணவர்களிடம் பேசினாலே இப்போக்கின் சாயலை உணர முடியும். 

 சி.பி.எஸ்.ஸி கல்வித்திட்டம் பற்றி அண்ணாமலை சொல்வதில் கொஞ்சம் உண்மை உள்ளது. ஒரே மாறுபாடு சி.பி.எஸ்ஸியே எதிர்காலத்தில் அப்படி இருக்க முடியாது என்பது. ஒன்றிய அரசின் பண்பாட்டு தேசியம் தற்காலிக மேகமூட்டம் மட்டுமே. உ.தா., புதிய கல்விக்கொள்கைக்குப் பிறகு முதலாமாண்டு மட்டுமே உயர்கல்வி நிறுவனங்களில் மொழிப்பாடம் இருக்கும். மாநில மொழிக் கல்வியை ஊக்கப்படுத்தும்படி பு.க.கொ பெயருக்கு கூறினாலும் அதற்கு எதிராகவே உள்ளது. திறன்சார் கல்வி, வேலை உத்தரவாதம் அளிக்கும் கல்வி எனும் பெயரில் மொழியை, பண்பாட்டுப் பாடங்களை அது ஒழித்து வருகிறது. இந்தியா முழுக்க எத்தனை மொழியாசிரியர்கள் இப்போது உள்ளார்கள், எத்தனை பேர்களை அரசு புதிதாக வேலையில் அமர்த்துகிறது எனக் கணக்கெடுத்துப் பார்த்தால் நான் சொல்வது புரியும். இன்று தம் பிள்ளைகளுக்கு தாய்மொழியைக் கற்றுக்கொடுக்கவே பெற்றோர்கள் பெரும்பாடு பட்டாக வேண்டும் 

பாஜகவும் திமுகவும் மோதிக்கொள்வது ஒரு தற்காலிக முரண்பாட்டுக்காகவே. கல்வியை தனியாரிடம் முழுமையாகக் கொடுக்காமல் அரசே அதில் பங்குதாரராக இருந்தால் மட்டுமே இம்மாற்றங்களைக் கட்டுக்குள் வைத்து கொள்கை வகுக்க முடியும். மொழிக்கொள்கைக்கு முன்பு அதற்குத் தோதான பொருளாதாரக் கொள்கை வேண்டும். இப்போதைக்கு கவனம் திருப்பும் விவாதம் மட்டுமே இது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...