Skip to main content

இங்கிலாந்து டி20 அணியின் வேகப்பந்து வீச்சும் இந்திய மட்டையாட்டத்தின் பிரச்சினையும்

இங்கிலாந்து தன் டி20 அணியில் இம்முறை இரண்டு முழுநேர சுழலர்களை மட்டுமே கொண்டு வந்தனர். ஆனால் இந்தியாவோ தன் அணியில் நான்கு சுழலர்களைக் கொண்டு ஆடுகிறது. ஆகையால் இங்கிலாந்தின் அணித்தேர்வு முட்டாள்தனமானது என்று ஶ்ரீகாந்த் உள்ளிட்டவர்கள் கூறினர். நானும் அப்படியே கருதினேன். ஆனால் அவர்களுடைய தேர்விற்குப் பின்னால் அபாரமான திட்டமொன்று இருந்தது என்பதை தொடரின் இரண்டாவது ஆட்டத்தின்போதே புரிந்துகொண்டேன்



கடந்த சில ஆண்டுகளாகவே நமது மட்டையாளர்கள் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவுக்கு டெஸ்ட் ஆடப் போகும்போது பந்தை நான்காவது, ஐந்தாவது குச்சிகளில் தொடர்ந்து வீசி அவர்களை வெளியேற்றுகிறார்கள். பந்தை உள்ளே வீசுவதே இல்லை. ஏனென்றால் உள்ளே வரும் பந்தைக் கூட இந்திய மட்டையாளர்கள் காலை நகர்த்தி ஆப் பக்கமாக அடித்தார்கள். பந்தை வெளியே வீசினால் அவர்கள் அதை மட்டையால் தொடும் நோக்கில் நகர்ந்து வருவர்கள் எனக் கருதி வைடாக வீசி சற்றே உள்ளே கொண்டு வந்தோ நேராகச் செல்ல வைத்தோ தடுப்பாட வைத்து ஸ்லிப்பில் கேட்ச் கொடுக்க வைத்தார்கள் எதிரணி வேகவீச்சாளர்கள். கோலி, ரஹானே, புஜாரா என நமது மட்டையாளர்கள் இப்படித்தான் திணறினார்கள். ஆனால் டி20யில் பந்து அந்தளவுக்கு நகராது, பவுன்ஸும் ஆகாது, நன்றாகத் தெறித்துக் கொண்டு சிக்ஸர் போகும் என்பதால் வைடாக வீசுவது நல்ல உத்தியல்ல. நமது மட்டையாளர்கள் வழக்கம்போல முழுநீளத்திலும் குறைநீளத்திலும் விழும் பந்துகளை விளாசி சுற்றிச்சுற்றிக் காட்டினார்கள். சஞ்சு சாம்ஸன் பந்தைவிட்டுத்தட்டிகவர், எக்ஸ்டிரா கவருக்கு மேலாக தூக்கி விரட்டுவார் என்றால் சூர்யாவோ குச்சிகளுக்குப் பின்னால் எல்லா திசைகளுக்கும் விளாசுவார். ரிங்கு, அபிஷேக் ஷர்மாவின் வலிமை நேராகவும் கவர் பகுதியிலும் அடிப்பது. இந்திய அணி மட்டையாட்டத்தைக் காணவே எதிரணிக்குப் பயமாக இருந்தது. ஆனால் இங்கிலாந்து ஒன்றை கவனித்தார்கள் - பிரச்சினை திசையில் இல்லை, நீளத்தில் இருக்கிறது. இந்தியா பின்னங்காலுக்குப் போய் பெரிதாக அடிப்பதேயில்லை. நீங்கள் ஹெட், வார்னர் போன்ற வீரர்களின் பெரிய ஷாட்களை கவனித்தால் பின்னால் போய்த்தான் பந்தைத் தூக்குவார்கள். ஆனால் இந்திய அணியிலோ முன்பு முன்னங்காலிலும் பின்னங்காலிலும் ஆக்ரோஷமாக அடிப்பதற்கு டெண்டுல்கர் போன்ற ஒருவராவது இருந்தார். இப்போது யாருமே இல்லை. (ரோஹித் ஷர்மாவும் டி20யில் இருந்து ஓய்வுபெற்று விட்டார். ரஹானே டி20 ஆடுவதில்லை.) இங்கிலாந்து வேகவீச்சாளர்களில் நான்கு பேரும் 140-150 வேகத்துக்கு வீசுபவர்கள். அவர்கள் மிக வேகமாக பந்தை நடுக்குச்சியில் இருந்து விலாப்பக்கமோ ஆப் பக்கமிருந்து நடுக்குச்சிக்கோ வீசுவார்கள். ஒரு பந்தைக் கூட வெளியே வீசுவதில்லை. உள்ளே வரும் பந்தையும் நம் மட்டையாளர்களால் குச்சிகளை விட்டு அடிக்க முடியாது. குச்சிகளுக்கு குறுக்கே சென்று midwicket, fine leg பகுதிகளுக்கு புல் / ஹூக் அடிக்கவே முடியும். ஆனால் அங்கேயும் தடுப்பாளர்களை நிறுத்தி வைத்துவிடுகிறார்கள். மேலும் நம் ஆட்களுக்கு அங்கே பின்னங்காலில் அடிக்க வராது. கடைசி இரண்டு போட்டிகளில் அவர்களில் 90% மேல் பந்துகளை நம்மை விரட்டவே அனுமதிக்கவில்லை. இதில்தான் இந்திய மட்டையாளர்கள் திகைத்துப் போனார்கள்.


இரண்டாவது போட்டியில் இந்தியா தட்டுத்தடுமாறி வென்றாலும் அதில் உண்மையான வெற்றியாளர்கள் இங்கிலாந்தே என்று நான் நினைத்தேன். அவர்களுடைய வேகப்பந்து வீச்சு அவ்வளவு அழகாக நெருப்பாக இருந்தது. சென்னையின் ஆடுதளத்தின் பவுன்ஸ் அவர்களுக்கு உதவியது, மூன்றாவது போட்டியில் ராஜ்கோட்டில் அந்தளவுக்கு உதவாது என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் அந்த ஆடுதளத்திலும் பந்தை குத்தி உள்ளே கொண்டு வந்தபோது, ஒழுக்கத்துடன் தொடர்ந்து குறைநீளத்தில் வீசிக்கொண்டே இருந்தபோதுதான் அவர்களுடைய திட்டத்தின் மேதைமை எனக்கு விளங்கியது. நாம் பொதுவாக சஞ்சு சேம்ஸன் பவுன்சருக்கு எதிராகத் திணறியதைப் பற்றித்தான் பேசுகிறோம். ஆனால் அனேகமாக எல்லாருக்குமே அந்த நீளம் சிம்மசொப்பமாக உள்ளது. அஷ்வினின் யுடியூப் சேனலில் இதைப் பற்றின விவாதம் நடந்ததை கவனித்தேன். பந்தை குறைநீளத்தில் உள்ளே கொண்டு வந்து சஞ்சுவை விரட்டவே விடாமல் இங்கிலாந்து கட்டுப்படுத்தியதை அவர் குறிப்பிட்டார். ஆனால் அவர் சொல்லாமல் விட்டது மற்ற மட்டையாளர்களுக்கும் இதுவே நடக்கிறது என்பது. அதனாலே அவர்கள் நான்கு வேகவீச்சாளர்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். 16 ஓவர்களில் அவர்கள் 80 பந்துகளையும் அப்படியே வீசும்போது இந்தியாவின் கணிசமான ஷாட்கள் அசாத்தியமாகின்றன (இதுவே இரண்டு முழுநேர சுழலர்களை அவர்கள் கொண்டு வந்தால் இந்த திட்டத்தைப் பின்பற்றுவது சிரமமாகும்.). கையைக் கட்டியது போலாகி விடுகிறது. என்ன மாதிரி ஆடுதளமென்றாலும் இதே மாதிரி வீசுவதே அவர்களுடைய நோக்கம். இதை 1932-33இல் ஆஸ்திரேலியாவின் பிரேட்மேனுக்கு எதிராக இங்கிலாந்து பிரயோகித்த bodyline வியூகத்துடன் நாம் ஒப்பிடலாம். வழக்கமாக 100 சராசரியில் ஆடும் பிரேட்மேன் அந்த தொடரில் 56.57 சராசரியுடன் 396 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். என்னவொரு மகத்தான வீரர் என்று பாருங்கள். (இதுவே கோலி, ரோஹித், கில் உள்ளிட்ட நமது இன்றைய இந்திய மட்டையாளர்கள் எனில் பாடி லைனுக்கு எதிராக 10-20 சராசரியுடன் 100 ஓட்டங்களே எடுத்திருப்பார்கள்.) இங்கிலாந்தின் பந்துவீச்சுப் பயிற்சியாளரான பிரண்டம் மெக்கல்லத்தையும், புள்ளியல் வல்லுநர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்


 இந்தியாவுக்கு இந்த பொறியில் இருந்து விடுபட ஒரே வழிதான் இப்போது உள்ளது. அஷ்வின் சொல்வதைப்போல மைதானத்தின் பக்கவாட்டு எல்லைக்கோடுகள் குறைவாக இருக்க வேண்டும். பின்னங்காலுக்குப் போய் பவுன்ஸரை லேசாக அரைகுறையாகத் தட்டினாலே சிக்ஸர் போக வேண்டும். அப்போது சஞ்சு, சூர்யா போன்றவர்கள் ஜொலிப்பார்கள். வழக்கமான பெரிய மைதானங்களில் இது பெரும் பிரச்சினையாகவே தொடரப் போகிறது. இனி ஓரளவுக்கு நல்ல வேகவீச்சாளர்களைக் கொண்டுள்ள எதிரணிகள் எல்லாருமே நான்கு வேகவீச்சாளர்களுடன் சரியான திட்டத்துடன் வருவார்கள். இந்திய மட்டையாளர்களால் இதற்கு உடனடியாக தீர்வு கண்டுபிடிக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஏனென்றால் இயல்பாகவே பின்னங்காலில் நன்றாக ஆடக்கூடியவர்கள் நம்மிடம் இப்போது இல்லை. சஞ்சுவும் சூர்யாவும் மெல்லமெல்ல இதற்குத் தீர்வு காண்பார்கள்தாம். ஆனால் அதற்குள் தோல்விகள் அதிகமாகி அணிக்குள் பல மாற்றங்கள் வரும். இடதுகை ஆட்டக்காரர்களால் இதே பந்துகளை பின்னால் வெட்டியாட முடியும், விட்டு தூக்கி அடிக்க முடியும் என்பதால் அவர்களை அதிகமாக கொண்டு வருவார்கள். ரிஷப் பண்ட் கூட உள்ளே வரலாம் (அவரால் இயல்பாகவே இந்த வியூகத்தை நன்றாக கையாள முடியும்.).  இங்கிலாந்தின் இந்த வியூகம் ஒருவேளை இந்திய அணியின் மட்டையாட்ட வரிசையையே எதிர்காலத்தில் மாற்றும் நிலையை உருவாக்கக் கூடும்

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...