Skip to main content

வயோதிகத்தின் சாபம்

வாழ்க்கையின் துயரங்களில் ஒன்று சில பத்தாண்டுகளுக்குப் பிறகு வயோதிகத்தின் நிழலில் வாழும் ஒரு மதிப்புக்குரியவரைச் சந்தித்து அவர் முழுக்க மனதளவில் உருக்குலைந்து, எந்த தொடர்புமின்றி கடுமையான கருத்துக்களையும் காழ்ப்புணர்வையும் கொட்டுவதை செய்வதறியாது பார்த்து நிற்பதுதான். காலம் மிகமிக வேகமாக ஓவியமொறை நீரில் நனைத்து உருவழிப்பதைப் போல மாற்றிவிடுகிறது. அவரா இவர் எனத் திகைத்து நிற்கிறோம். குறிப்பாக வயோதிகத்தால் மூளையின் முன்பகுதியில் உள்ள நரம்பணுக்கள் பாதிக்கப்படும்போது கருணையற்றவர்களாகவும், தன் சிந்தனைக்கு நடப்புலகில் பொருத்தமில்லை என உணராதவர்களாகவும், கற்பனையாலான கூண்டுக்குள் தம்மைச் சிறைவைத்தவர்களாகவும் மாறுகிறார்கள். அவர்களுடன் உரையாடும்போது நாம் சொல்வது எதுவும் அவர்களது மனத்துக்குள் பதிவதில்லை என்பதையும் உணர்கிறோம். அது நம்மை வாயிருந்தும் ஊமையாக மாற்றுகிறது. ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை அவர்கள் சிந்திக்கும் பாங்கும் மனநிலையும் மாறுவதைக் கண்டு திகைக்கிறோம். வயோகத்தின்போது மனிதர்கள் கனிவதாக சொல்லப்படுவது எல்லாருக்கும் பொருந்தாது. என் தோழி ஒருவர் தனது வயதான மாமியாருக்கு உடல்நலமில்லாமல் போனபோது அவரது கொடூரமான நடத்தையை, பேச்சைப் பொறுக்கமுடியாமல் தவித்தார். கடுமையான மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டார். என்னுடைய நண்பரொருவர் இதற்குத் தீர்வொன்றைச் சொன்னார்: என்ன சொன்னாலும் பதில் சொல்லாமல் கேட்டுவிட்டு வந்துவிட வேண்டும். இதைவிட அவர்களுடன் வாழ்வோருக்கு வேறு தற்காப்பில்லை என்றார் அவர். நாம் இந்தப் பக்கத்தைப் பற்றி அதிகமும் பேசுவதில்லை.

இன்னொரு பக்கம், இதற்கு விதிவிலக்கானவர்களையும் அனுமதினமும் காண்கிறேன். இயற்கை அவர்கள் ஆசீர்வதித்து நமக்கு அணுக்கமானவர்களாக, அன்பானவர்களாக விட்டுவைக்கிறது. ஆனால் கொஞ்சம் பிசகினால் அவர்களை இயற்கை நரகத்துக்குள் தள்ளி நம் கையையும் கோத்துவிடுகிறது. உடலுக்கு வரும் நோயைவிட இது கொடியது. ஏனென்றால் இதற்கு சிகிச்சையில்லை. மேலும் அவர்கள் சிகரத்தின் உச்சத்தில் இருந்து சட்டென கீழே பள்ளத்தில் விழுகிறார்கள். அதைக் காணவே கூடுதல் வருத்தமாக இருக்கிறது. இயற்கை கொடியது என்று தோன்றுகிறது. நமக்கும் இப்படி ஆகிவிடக் கூடாதே எனும் சுயநலமான அச்சமும் ஏற்படுகிறது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...