Skip to main content

"நிழல் பொம்மை" நாவலின் துவக்கம்

 


அன்புள்ள பாலியல் துன்புறுத்தல் விசாரணைக் குழு உறுப்பினர்களே,


என் மீதான விசாரணை கடந்த மூன்று வாரங்களாக நடந்து வருகிறது. நான் முதலில் இதைக் குறித்து மிகுந்த பயம் கொண்டிருந்தேன். ஆனால் தொடங்கிய பின்பே நான் இதை எந்தளவுக்கு மகிழ்ச்சியாக எடுத்துக்கொள்வேன் எனப் புரிந்தது. விசாரணை அரங்குக்குள் வரும்போது என் உடல் மெல்ல நடுங்கியது. தன்னிச்சையாகத்தான். என் கைகால்களில் ஏற்பட்ட நடுக்கம் என் குரலையும் பற்றிக்கொண்டது. அச்சத்தினால் வரும் நடுக்கமல்ல. பரவசத்தினால் வரும் நடுக்கம். நான் விசாரணைக் குழுவினரிடம் அல்ல கடவுளிடம் அழைத்துச் செல்லப்படுகிறேன் என்றே உணர்ந்தேன். இதுவரை நான் கோயில்களிலும், மதநூல்களிலும், தத்துவங்களிலும்கூட கடவுளைக் கண்டதில்லை. என் வாழ்க்கையின் தேடல் கடவுளைத் தேடுவதிலேயே இயல்பாக ஆரம்பித்தது. உங்கள் முன்வந்து நின்றபோது நான் கைகளைக் கூப்பி பேச்சற்று நின்றேன். நீங்கள் என்னை நகர சொன்னீர்கள். அப்போதுதான் ஏன் விழுந்து கும்பிடவில்லை என்பது எனக்கு உறைத்தது. நான் தரையில் குப்புற விழுந்திட முனைந்தபோது சிலர் வந்து என்னை அழைத்து ஓரமாக நிற்க வைத்தார்கள். மெல்லமெல்ல நீங்கள் என்னிடம் சில சிக்கலான ஆனால் தெளிவான நடைமுறை விதிகள், நம்பிக்கைகள், தர்க்கத்தின்படி இயங்கும் அமைப்பின் பிரதிநிதிகளே நீங்கள் எனப் புரிய வைக்க முயன்றனர். உங்கள் உடல் அசைவுகள், நீங்கள் என்னைப் பார்த்தவிதம், உங்கள் சொற்தேர்வு, குரலின் மென்மை என்னை மீண்டும் மானுட உலகுக்கு அழைத்து வந்தன. ஆனால் உங்கள் மகத்தான அதிகாரத்தின் அமானுஷ்யதன்மை நான் அங்கிருந்த நேரம் முழுக்க உணரத்தான் செய்தேன். எந்நேரமும் நீங்கள் மெய்யறிவை போதிக்கக்கூடும், தரிசனம் சாத்தியப்படும் என நம்பினேன். அங்குள்ள அதிர்வு என்னை உள்ளுக்குள் உருகவும், உணர்ச்சிவயப்பட்டு நிர்மூலமாக உணரவும் வைத்தது. இதையெல்லாம் என்னிடம் முன்பு யாராவது சொல்லியிருந்தால் நம்பியிருக்க மாட்டேன். இப்போது இதைப் படிக்கும் உங்களுக்கும்கூட நான் மிகைப்படுத்தவதாகத் தோன்றினால் அது என் தவறு அல்ல. நமது சமூக அமைப்பில் அதிகார அமைப்புகளுக்கு இணையாக தெய்வ தரிசனத்தைக் காட்ட வேறு எவையும் இல்லை. நான் அத்தனைக் காலமும் இதை நோக்கித்தான் பாய்ந்துகொண்டிருந்தேன் என்பதை அந்தச் சிறிய அரை இருட்டான தூசு மண்டிய அரங்குக்குள் வந்தபோதுதான் உணர்ந்தேன். இருட்டிலே வாழும் ஒரு மனிதன் நாடும் உச்சபட்சமான வெளிச்சம் ஒரு கையெழுத்து இடப்பட்ட சிறு அச்சிட்ட காகிதமே.

என்னை எனக்கே ஆச்சரியப்படுத்த உதவியதற்கு நன்றி. இந்த விசாரணையே எனக்குள் முடுக்கி சுற்றி இறுகிப் போயிருந்த சிடுக்கொன்றை விடுவிக்க உதவியது. அதற்கும் சேர்த்து நன்றி.

("நிழல் பொம்மை" நாவலின் முதல் அத்தியா துவக்கம்)

சென்னை புத்தகக் கண்காட்சி 2025 வெளியீடு -44
ஸ்டால் எண் 540,541

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...