Skip to main content

புத்தாண்டு வாழ்த்துகள்


புத்தாண்டு என்றால் புதிய வாய்ப்புகள், தீர்வுகள், மேம்பாடு குறித்த நம்பிக்கை. எனக்கு அதனாலே புத்தாண்டுக்கு முந்தின நாளென்றால் மிகவும் பிடிக்கும். நடைமுறை வாழ்வு குறித்து சில தீர்க்கமான முடிவுகளை வரும் ஆண்டு நிறைவேற்றப் போகிறேன். முன்பு எவ்வளவு குறைந்தபட்ச வசதிகள் இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க முடிந்தது. மகிழ்ச்சி உள்ளிருந்து வருகிறது என்று நம்பினேன். புறவாழ்வின் தூண்டுதல்கள் என்னைத் தொடவேயில்லை. ஆனால் இப்போது புறவாழ்வு மிகவும் அலுப்பூட்டுகிறது. அதனாலே அதை மாற்றுவதற்கு 2025ஐ பெரிதும் எதிர்பார்த்திருக்கிறேன்.

2025க்குள் இரண்டு நாவல்களை முடிக்கும் நம்பிக்கை இருக்கிறது - ஒன்று "கறுப்பு தினம்". இன்னொன்று "ஒரு முடிவற்ற துப்பறியும் கதை". அபுனைவில் "ஆண் ஏன் அடிமையானான்?" எனும் புத்தகம் ஒன்றும் 2025க்கான என் திட்டத்தில் இருக்கிறது.

இந்த ஆண்டு நான் செய்த தவறு பணம் குறித்த கவலைகளை என்னைத் தின்ன அனுமதித்தது. என்னதான் முயன்றாலும் சில விசயங்களை மாற்ற முடியாது எனும்போது நம் கட்டுக்குள் இருக்கும் எழுத்தில் அதிக கவனம் அளித்து உணர்வுகளைக் குவிப்பது கூடுதல் நிறைவை, மகிழ்ச்சியைத் தரும். என்னால் இன்னொருவராக இருக்க முடியாது. 2025இல் நான் என் நிலையில் திருப்தியாக மகிழ்வாக இருக்க முயல்வேன். இந்த வாழ்வு நான் பிறந்ததில் இருந்தே ஏவப்ப்பட்ட அம்பு. அதன் திசையை நான் இப்போது குறுக்கிட்டு மாற்றமுடியாது. இது எதை நோக்கிப் போகிறதோ அங்கேயே போய்ச் சேரட்டும்.

2024ஐ உற்சாகமாக மாற்றிய பல்லவிக்கு, என் கட்டுரைகளைப் பதிப்பித்த சுதீர் செந்தில் அண்ணனுக்கு, மனுஷ்யபுத்திரனுக்கு, என் நாவலை இந்தாண்டு பதிப்பிக்கும் ஜீரோ டிகிரி பதிப்பக காயத்ரி, ராம்ஜிக்கு நன்றி. "நிழல் பொம்மை" நாவலைப் படித்து உரையாடப் போகும் வாசக நண்பர்களுக்கும், ஏற்கனவே படித்து கருத்தைத் தெரிவித்த நண்பர்களுக்கும் நன்றி.

பிரியத்துக்குரிய நண்பர்கள் எல்லாருக்கு அன்பு.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...