Skip to main content

மரணம் - மெய்யறிவு - சர்வாதிகாரம்


நாம் தனியாக இருக்கிறோம் என்பதே அறுதியான உண்மை - அதை நாம் உறுதிப்படுத்தும் தத்துவ அலகாகவும் மறப்பதற்கான சிறிய போதையாகவும் உறவுகள், நட்பு, காதல், சமூகமாக்கம் தேவையாகிறது. அவர்களில் மிக மிக அணுக்கமானவர் காலமாகும்போதே நாம் எவ்வளவுத் தனிமையாக இருக்கிறோம் எனத் தீவிரமாக சில கணங்கள் உணர்கிறோம். மீண்டும் உறவு போதைக்குள் விழுந்து தனிமையின் மறதி மட்டுமே தரத்தக்க தன்னுணர்வுக்குள் சிக்குகிறோம். மரணத்தை வாழ்வில் நேரில் காணுறும்போது இந்த இருமை கிடைக்காமல் தத்தளித்து காணாமல் போகிறோம். 


இதனாலே காலனை தெய்வமாக வழிபடும் மரபு நமக்கு இருந்திருக்கிறது. பௌத்தத்தில் வலுவாகவே இன்னும் இருக்கிறது. அங்கு மரணத்தை அனுதினமும் நினைப்பது மெய்யறிவுக்கான மார்க்கம். இந்து மதத்தில் நசிகேதன் வாழ்வின் உண்மையை அறிய காலனிடமே சென்று மண்டியிடுகிறான். 


இதற்கு வெளியேதான் மெய்யறிவுக்கு எதிரான போலி எந்திரமய உலகம் ஒடிக்கொண்டே இருக்கிறது. அது மரணத்தைக் குறித்து யோசிக்க நம்மை அனுமதிக்காமல் ஓடிக்கொண்டே இருக்கச் செய்கிறது. எந்தளவுக்கெனில் இன்று சில நொடிகளிலே மரணத்தைக் கடந்துவிட இவ்வுலகம் நம்மைத் தூண்டுகிறது. அனுதினமும் பார்க்கிற ஒருவர் இல்லாமல் போகும்போது இரங்கல் தெரிவித்துக் கொண்டாட்டத்தில் மூழ்குகிறோம். அதன் பெயரே பண்பாடு, கலாச்சாரம். சமூகம் என ஒன்று உண்டானதுமே மரணத்தை மறப்பது முக்கிய இலக்காக அது வைத்துக் கொள்கிறது. அதற்கு வளர்ச்சி எனப் பெயரிடுகிறோம்.


நமது மொபைல் விளையாட்டுகளைப் பாருங்கள். ரத்தம் தெறிக்கவிடில் போரடிக்கிறது. ஜோம்பிகளைக் கொல்லாவிடில் அதில் உற்சாகமேயில்லை. பலிச்சடங்களை எல்லா இடங்களில் இருந்தும் ஒழித்துவருகிறோம். அதனிடத்தில் வன்முறையற்ற தெய்வத்தையும் வன்முறைமிக்க் வாழ்க்கையையும் உருவாக்குகிறோம்.

 மரணத்திற்குப் பதிலாக முடிவற்ற வன்முறையை குறியீட்டுரீதியாக அது நமக்குப் பரிசளிக்கிறது - வெறுப்பாக,  கொலைகளாக, ரத்தமாக, அதிகாரமாக, சர்வாதிகாரமாக.


நாம் மரணத்தை வெறுக்காதபோது வன்முறைக்கும் அதிகாரத்துக்கும் தேவையே இராது எனத் தோன்றுகிறது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...