Skip to main content

ராஜ் கௌதமன்


எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். குறிப்பாக "சிலுவை ராஜ் சரித்திரம்". அதில் வரும் நகைமுரணான தொனி, பல அபத்தங்களைச் சித்தரித்துக் கடந்துப்போகும் பாணி, அதிலுள்ள மென்மையான பொஹிமியன் தன்மை, ஆழம். அவரது விமர்சனக் கட்டுரைகள் செறிவானவை, கூர்மையானவை. மார்க்ஸிய, சமூகவியல் கோணத்தில் இலக்கியத்தை அணுகுபவர். அவர் காட்டும் சமூக உளவியல் பார்வை என் சிந்தனையை ஒருகாலத்தில் வெகுவாக பாதித்தது. என் ஆரம்பகாலக் கட்டுரைகளில் அவரையும் அவருக்குப் பிடித்தமான, அவர் மொழியாக்கிய எரிக் புரோமையும் மேற்கோள் காட்டி அதன் அடிபடையிலே இலக்கியத்தையும் சமூகத்தையும் அலசியிருக்கிறேன் - குறிப்பாக நிலம், அதனுடன் வேளாண் சமூகம் ஏற்படுத்திக்கொள்ளும் பிணைப்பு, அதிலிருந்து புலம்பெயரும்போது, சமூக அடுக்குகள் நிலைகுலையும்போது மனிதர்களை அது பாதிக்கும்விதம், அப்பாதிப்பு இலக்கியத்தில் நெருக்கடியாக மாறுவதைப் பற்றி அவர் செய்த விமர்சனம் என் எழுத்துக்குள் தாக்கத்தை செலுத்தியது. அது ஒரு அமைப்பியல் பார்வை எனப் பின்னர் விளங்கிக்கொண்டேன். நான் தெரிதாவைப் படிக்கத் தொடங்கிய பின்னர் அதைக் கடந்துவந்தேன். ஆனால் பாண்டிச்சேரியென்றால், லண்டன் என்றால் சிலுவைராஜ் நினைவுக்கு வருவதைத் தவிர்க்கமுடியாது. 


அவர் தனது புனைவுகளில், தன்னெழுத்தில், கிறித்துவ சாமியார்களை எப்படிப் பகடி பண்ணாமல் விட்டார் என்பது என்னை வியப்புக்குள்ளாக்கும் ஒன்று. அவரளவுக்கு யாரையும் பகடிக்குள்ளாக்காமல் அப்படி விடுவதில்லை. ஆனால் இங்குள்ள சூழல் அப்படியாக இருந்ததும் காரணமாக இருக்கலாம். அதேபோல பெண்ணுடல் மீதான மோகத்தையும், உடலிச்சையையும் அவர் எழுதி நான் படித்ததில்லை. இந்த சுயத்தணிக்கை அவரது மிக அந்தரங்கமான எழுத்தை புறவயமான நெருக்கடிகளான சாதி, பாகுபாடுகள் ஆகியவற்றுடன் இணைக்க உதவியது த்ன நினைக்கிறேன் 


எழுத்தாளர்களின் சுயத்தேர்வு சற்று விசித்திரமானது. அது அரசியல்வயப்பட்டதும் தான்.


அவரது கருத்துக்களையும் புனைவில் அவர் எழுப்பிய சித்திரங்களையும் கூட மறந்துவிடலாம். ஆனால் எழுத்தில் ஒலிக்கும் அவரது மாற்றுக்குரல், எதையும் இன்னொரு விதமாகக் காட்டி அதைவைத்து விளையாடும் கேலியும் கிண்டலுமான மென்மையான குரலை மறக்கமுடியாது.  வேறெந்த படைப்பாளியின் எழுத்தைப் படிக்கையிலும் அவரது குரல் என் காதுக்குள் வந்து விழுந்ததில்லை. 


மகத்தான படைப்பாளி, சிந்தனையாளர். ஒரு பெருமூச்சுடன் என் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...