Skip to main content

அகத்தில் அடிக்கும் புயல்

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியாது, ஆனால் எனக்குத் தெரியும்: கடந்த மூன்று மாதங்களில் நான் எழுதும் அளவு வெகுவாக குறைந்துவிட்டது. சராசரியாக ஒருநாளைக்கு ஆயிரம் சொற்களாவது குறைந்தது எழுதுவேன். மாதத்திற்கு 50,000 சொற்கள்தாம் என் கணக்கு. ஒரு பக்கம் கட்டுரைகள் எழுதிக்கொண்டே இன்னொரு பக்கம் என் நாவல்களில் நேரம் செலவிட்டபடி இருப்பேன். முக்கால்வாசி எழுதிய நிலையில் நான்கு நாவல்கள் இப்படி கைவசம் இருக்கின்றன. மிகவும் நேரநெருக்கடியான நாட்களில் கூட சில நிமிடங்களாவது எழுதக் கிடைத்தால் போதும், நிம்மதியாவேன். கூடுதல் நேரம் கிடைக்கும் நாட்களில் அதிகமாக எழுதி ஈடுகட்டுவேன். ஆனால் அண்மையாகத்தான் இது முடியாமல் போய்விட்டது.

இது பெரிய உலகப் பிரச்சினையா? ஆமாம், எனக்கு எழுத்துதான் உயிர், உடல், ஆவியெல்லாம். எழுதுவது குறையும்போது என் மூளைக்குப் போகும் பிராணவாயு குறைந்து போகிறது. நான் நடைபிணமாக மாறுகிறேன். அதிகமாக எரிச்சல்படுகிற, மகிழ்ச்சியற்ற மனிதனாகிறேன்.
காரணம் என் வேலையில் ஏற்பட்டுள்ள மிதமிஞ்சிய சிக்கல்கள், நெருக்கடி, பிரச்சினைகள்தாம். முன்பைவிட பலமடங்கு அதிகமாக உழைக்கவேண்டியிருக்கிறது. எப்போதுமே வேலையிலிருக்கும் உணர்வு. எவ்வளவு உழைத்தாலும் வேலை தீராத அலுப்பு. ராட்சஸ பள்ளமொன்றில் கைமணலை அள்ளிஅள்ளிப் போட்டு இன்னும் நிரம்பவில்லையே என அசந்துபோகும் நிலை. கோவிட்டுக்குப் பிறகு பலருக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சினைதான். வேலையைக் காப்பாற்றிக்கொள்ள, மூன்று வேளை சாப்பிட்டு வாடகை கொடுத்து கடனைத் தீர்க்கவே எல்லாரும் 18 மணிநேரத்திற்கு மேல் உழைக்கிறார்கள். சம்பாதிக்கும் பணத்தை பொருளாதார வீக்கமும் வரிகளும் விழுங்கியது போக, நிம்மதியை வேலை நெருக்கடி பிடுங்கிக்கொள்கிறது. என்னுடைய பிரச்சினை நூதனமானது - எனக்கு வேலைக்காக, எதிர்காலப் பாதுகாப்புக்காக வாழப் பிடிக்காது. அது தற்காலிகமானது. எனக்கு நிரந்தரமான உயர்ந்த இலக்குகளுக்காக ஓடப் பிடிக்கும். 9-9 வேலைகளில் நம் நேரத்திற்கு எந்த மதிப்பும் இல்லை. நாம் போனால் அங்கு இன்னொருவர் வந்து உட்கார்ந்துகொள்வார். யாரும் ஓரிரு நாட்களுக்கு மேல் நம் உழைப்பைப் பற்றிக் கவலைகொள்ள மாட்டார்கள். ஆனால் இப்படி எழுத்துக்காக வாழும், போதுமான அளவுக்கு மட்டும் வேலையில் ஈடுபடும் காலம் முடிந்துவிட்டது எனத் தோன்றுகிறது. உலகம் ஒரு பெரும் நிலக்கரிச் சுரங்கமாக மாறிவிட அது எல்லாருடைய கையிலும் மண்வெட்டியைக் கொடுத்து இருட்டில் இறக்கிவிட்டு விடுகிறது.
எல்லா வேலையிலும் பௌதீகமான ஓய்வு இருக்கும். ஆனால் ‘மன ஓய்வு’ என ஒன்று உண்டு. அகம் கடலைப் போல ஓய்ந்து அமைதியாக அசைவற்று இருக்கவேண்டும். எனக்கு அந்த மன ஓய்வு தான் அண்மைக்காலமாக கிடைக்கவில்லை. ஓய்வுப் பொழுதிலும் ஆயிரம் பிரச்சினைகளைப் பற்றி நினைத்து முயற்சிகள் செய்தபடியே இருக்கவேண்டி வருவதால் மனம் எழுத்துக்கு நேரெதிரான திசையில் சென்றுவிடுகிறது. ஒருநாளை நூறு சொற்களை எழுதுவதே பெரிதாகிவிட்டது. என் கணிணியில் நான் எழுதவில்லை, அதை வேறுவேலைகளுக்காக பயன்படுத்துகிறேன் என்று அதைப் பார்க்கையில் நினைக்கையிலே வியப்பாக இருக்கிறது.
ஆனாலும் எழுதியெழுதிப் பழகியவன் என்பதால் மனம் நிலைபெற்றதும் சட்டென என்னால் பழைய தாளலயத்துக்குத் திரும்ப முடிகிறது. ஒன்றிரண்டு ஓய்வுநாட்கள் கிடைத்தால் நாவலை விட்ட இடத்திலிருந்து சரளமாக எழுதமுடிகிறது. இப்போதுதான் எனக்கு வருடக்கணக்கில் எழுத முடியாமல் போன பல நண்பர்களின் நிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்கள் திறமையானவர்கள், ஆனால் வாழ்வின் சூறாவளிக்கு தம்மை ஒப்புக்கொடுத்தபடி தாமே சூறாவைளியின் மையமாக மாறிப் போனவர்கள். ஒரேயடியாக அக அமைதியை இழந்த பின்னர் எழுதாமல் இருப்பதே இயல்பாகிவிட்டவர்கள். மௌனித்துப் போனவர்கள். சிலர் சில பத்தாண்டுகள் எழுதாமல் இருந்துவிட்டு மீண்டு வருவார்கள். பலருக்கு திரும்ப வரும் பாதை மூடுண்டு போயிருக்கும். அவர்கள் சிறுகசிறுக கேளிக்கைகளால், சுயநிந்தனையால், தன்வெறுப்பால் தம்மை அழித்துக்கொள்வார்கள். அவர்களால் அது எப்படி முடிகிறது என்று வியந்ததுண்டு. அது இப்படித்தான் முடிகிறது என எனக்கு அனுபவப்படும்போது இப்போது புரிகிறது.
வாழ்வின் பல்வேறு சார்புநிலைகள், நிபந்தனைகள் தாம் ஒவ்வொன்றையும் தோற்றம் கொள்ளச் செய்கின்றன என்றார் நாகார்ஜுனர். எழுத்தும் கூட சாராம்சமானது அல்ல - நிபந்தனைகள் மாறும்போது எழுதும் மனம் எந்திர மனமாகிவிடக் கூடும். உலகின் ஆகப்பெரும் சாபக்கேடு அதுதான்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...