Skip to main content

ஜெயமோகனை விட அஜிதன் ஏன் மேலான எழுத்தாளர்?



கெ.என் செந்தில் புக் பிரம்மா இலக்கிய விழா பற்றி எழுதிய குறிப்பை படித்த போது இது தோன்றியது. எனக்கென்னவோ பிற விஷ்ணுபுரம் படைப்பாளிகளுக்குப் பதில் அஜிதனையே அழைத்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. எனக்கு விஷ்ணுபுரத்தாரை தாஜா பண்ணி எதுவும் ஆகப் போவதில்லை, ஆகையால் இதை நான் சுயநல நோக்கிற்காக சொல்லவில்லை - ஜெயமோகனிடம் இல்லாத ஒரு மெய்யியல் போக்கு அஜிதனிடம் உள்ளது. ஜெயமோகன் தன் புனைவில் மதம் எனும் இயக்கத்தின் வெறுங்கூடான புற அமைப்பையும், அதன் சடங்குகள், நம்பிக்கைகள், கலாச்சார அரசியலையும் (முரணியக்கம் சார்ந்து) புனைவாக்கினால், அஜிதனோ அதன் சாரமாக உள்ள, ஆன்மாவாக உள்ள மெய்யியலைத் தொடுகிறார், அல்லது சில நேரங்களில் அதற்காக குறைந்தது முயல்கிறார். இது அவரது எழுத்துக்கு ஒரு வெளிச்சத்தைக் கொடுக்கிறது. ஜெயமோகனுக்கு மதத்தில் உள்ள ஆர்வம் ஆன்மீகத்தில், மெய்யியலில் இல்லை. அவர் ஒரு லௌகீக எழுத்தாளர். எண்பதுகள் வரைத் தமிழ் எழுத்தாளர்கள் மெய்யியல் தன்மை கொண்ட புனைவுகளை எழுதினார்கள், அது எதார்த்தவாத, இயல்புவாத, இனவரைவியல் புனைவுகளின் பெருக்கத்தால் அழிந்து போய், எழுத்துலகமே ஏதோ காய்கறி சந்தை போல முழுக்க முழுக்க புறம் சார்ந்ததாக மாறிவிட்டது. ஏதோ கவிதையில் தான் இன்றும் மெய்யியல் கொஞ்சமாவது மீதமிருக்கிறது. அஜிதன் அதைப் புனைவெழுத்தில் மீட்க முயல்வது பாராட்டத்தக்கது. அதனாலே நான் அவர் தன் தந்தையை விட மேலான படைப்பாளி என நினைக்கிறேன். ஒரே பிரச்சினை அவர் தன் தந்தையின் மொழியை போலச் செய்ய முயல்கிறார் என்பது. (நான் சொல்லும் இந்த விசயத்தை கூட அவர் சிந்தித்திருக்க வாய்ப்பில்லை. இதை அவர் மறுக்கவே செய்வார் என்றே நம்புகிறேன்.) இந்த உளவியல் தடையை மீறிவிட்டால் சிறந்த படைப்பாளி ஆகிவிடுவார். அவரது அத்வைதத்துடன், கடப்புநிலைவாதத்துடன் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் அவரது எழுத்தை என்னால் ரசிக்க முடிகிறது, நான் நாவல் எழுதும் போது அது ஒரு தாக்கத்தை செலுத்துவதை உணர்ந்தேன். ஜெயமோகனின் எழுத்து இதை எனக்கு செய்ததில்லை. அவரது சொல்லாட்சி, நடை நினைவிருக்கும், நாடகீயமான காட்சிகள், கவித்துவமான பிம்பங்கள் நினைவிருக்கும், ஆனால் அதைக் கடந்து அவரது ஆன்மா என்னுடன் நான் எழுதும் போது இருப்பதில்லை. அதனாலே ஜெயமோகனால் தூண்டுதல் பெற்று ஒரு புதிய புனைவை நம்மால் எழுத முடிவதில்லை, அப்படி செய்கிறவர்களும் அவரது நடையை மட்டுமே பிரதியெடுக்கிறார்கள். இது சுந்தரராமசாமியிடமும் இருந்த நெருக்கடிதான், இப்போது யோசிக்கையில் ஜெயமோகன் சு.ராவின் நீட்சியே எனத் தோன்றுகிறது. இருவரிடமும் புறத்தை தாண்டி மீயுலகம் ('அகம்', 'மீபொருண்மையான இருத்தல்') என ஒன்று இல்லை. அந்த புறம் மிக அழகானது, பல நுட்பங்கள், வசீகரங்கள் நிறைந்தது, ஆனால் பாம்பு ஊர்ந்து ஊர்ந்து போவதைப் போல அது மண்ணிலே இருக்கிறது, பறந்தெழுவதில்லை.
பி.கு: இதை நான் ஜெயமோகன் மீதான கோபத்தில் சொல்லவில்லை. (கோபப்படுவதற்கு அவரிடம் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.) இது ஒரு விமர்சனக் கருத்து, வாசக அவதானிப்பு மட்டுமே.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...