Skip to main content

எம்.கே மணி




கடந்த சில நாட்களாக எம்.கே மணியைப் பற்றி எழுதப்படும் பல உணர்ச்சிகரமான அஞ்சலிக் குறிப்புகளைப் படித்துக் கொண்டிருந்தேன். எந்த உள்நோக்கமும் இல்லாமல் மனதில் இருந்து பகிரப்படும் வருத்தமும் மரியாதையும். ஒருவருடைய மதிப்பையும் அன்பையும் பெற நாம் அவர்களை முதலில் சமமாக மதிக்க வேண்டும், அவர்களுக்கு எதிர்பார்ப்பின்றி நேரத்தை கொடுக்க வேண்டும். நேரம் மதிப்பற்றது, நாம் அதை வீணடிப்போமே அன்றி அடுத்தவருக்கு கொடுக்க மாட்டோம். எம்.கே மணி இதையெல்லாம் செய்திருக்கிறார், முன்தீர்மானம் இன்றி, மதிப்பிடாமல், ஒதுக்காமல் பழகியிருக்கிறார். அதனால் தான் இத்தனை பேர்களை அவரது இழப்பு சஞ்சலப்படுத்தியிருக்கிறது. இயக்குநர் மிஷ்கின் மணியின் கடைசிக் கால மருத்துவ செலவுகளைப் பார்த்திருக்கிறார் எனத் தெரிய வந்த போது மிகவும் நெகிழ்ந்தேன். மிஷ்கின் இதே போல தனக்கு தெரியாதவர்களுக்காகவும் யோசிக்காமல் உதவ தலைப்படக் கூடியவர் தான். இம்மாதிரி நல்ல விசயங்களை ஒரு இழப்பின் போதுதான் தெரிந்துகொள்கிறோம், அது துரதிஷ்டமானது என்றாலும் வாழ்க்கை மீது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு சின்ன விசயத்துக்கும் எதாவது ஒரு பெறுமதியை திரும்ப எதிர்பார்த்து நம்மை நாடுவோர் சூழ்ந்த உலகில் இப்படியான ஒரு தரப்பும் இருப்பது ஒரு அற்புதம்


எம்.கே மணியின் எழுத்தைப் படித்திருக்கிறேன். அவரிடம் உரையாடியதில்லை. அவருடைய பாணியும், நம்பிக்கைகளும் என்னுடையவற்றில் இருந்து வெகுவாக விலகி நிற்பவை. பிறந்தநாள் வாழ்த்துக்களை சியர்ஸோடு அவர் சொல்வதை ஏற்றிருக்கிறேன். கமல் விசயத்தில் சண்டை போட்டிருக்கிறேன். ரொம்ப கூலான ஒரு சினிமா ரசிகர் என்றே நினைத்தேன். ஆனால் அவரது வாழ்க்கை இவ்வளவு துயரானதாக, எழுத்தில் சாகசம் புரிபவராக இருந்திருக்கிறார் எனத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் அவரை அணுகி பழகியிருப்பேன்


அவரது கதைகளில் ஒரு வினோதமான மனநிலை இருக்கும் என பலரும் சொல்வது உண்மை தான் - அவை துல்லியமான கதையாகாமல் இருக்கலாம், ஆனால் பாத்திர அமைப்பில், நடையில் அவருடைய ஒரு தனித்துவம் இருக்கும். தன் இறுதி சில ஆண்டுகளில் மட்டுமே ஏகத்துக்கு எழுதியிருக்கிறார். ரெட்டை வேட சினிமாவில் ஒரு நாயகன் வேறு ஊருக்கு குடும்பத்திற்கு அடையாளம் மாறி வந்து பரபரப்பாக நடந்துகொண்டு அசத்துவாரே அதே மாதிரி.


அவருக்கு என் அஞ்சலி!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...