Skip to main content

இருமுனைக் கத்தி அரியணை ஆகுமா?


காங்கிரஸ் கட்சியின் ஊடக சந்திப்பில் தேர்தல் கூட்டணிக்கு வெளியே உள்ள கட்சிகளின் ஆதரவை ஆட்சி அமைக்கத் தேடுவீர்களா என நிதீஷையும் சந்திரபாபு காருவையும் மனத்தில் வைத்து ஒரு பத்திரிகையாளர் கேட்க ராகுலும் கார்க்கேவும் நாளை கூட்டணிக் கட்சிகளுடன் விவாதித்து முடிவெடுப்போம் என்றார்கள். சமயோஜிதமான முடிவு.
ஏற்கனவே பேச்சுவார்த்தை நடந்துகொண்டு தான் இருக்கும். கூட்டணிக்கு வெளியே இருந்து வந்தவர்களுக்கு கேட்டதைக் கொடுத்தால் உள்ளே இருக்கும் கட்சியினர் கோபித்துக் கொண்டு போய் விட்டால் பஞ்சாயத்தாகி விடும். ஏற்கனவே மம்தாவும், ஸ்டாலினும் தில்லிக்குப் போகவில்லை. ஆக அவர்களிடமும் கேட்டுவிட்டு பகிர்ந்து முடிவெடுப்பதே ஆதாயம்.
இது காங்கிரஸை விட மோடி-ஷா தலைக்கட்டுகளுக்கே பெரிய குடைச்சலாக இருக்கும். நிதீஷைப் போன்றவர்கள் சும்மாவே ஆனையைக் கொடு, பூனையைக் கொடு எனக் கேட்பார்கள். காங்கிரஸ் எதையும் இழக்கப் போவதில்லை. அவர்கள் பரிசீலிக்கலாம். ஆனால் நம் தலைக்கட்டுகளுக்கு அது ஆபத்தானது. பொம்மை அமைச்சரவையை ஆட்டி வைத்துக்கொண்டு விமானத்தில் பறந்து, பாராளுமன்றத்தில் தலைகாட்டாமலும், மொத்த வருமானத்தையும் தானும் கூட்டாளியுமாக ஆட்டையைப் போட்டதெல்லாம் இனி சாத்தியப்படாது. ரொம்ப காரசாரமான போட்டியாக இருக்கும். லாபம் நிதீஷ் மற்றும் பாபு காருவுக்குத் தான்.
தலையைக் கொடுத்தாவது பாஜக ஆட்சியமைக்கும், பின்னாளில் அதிகாரம் நிலைப்பெற்றதும் சில கூட்டணி எம்.பிக்களை விலைக்கு வாங்கி தம் கட்சியில் சேர்த்து மாநில கட்சியினரை பஞ்சராக்கி ஜம்பமாக உட்கார பார்க்கும் என்றாலும் கூட மோடி ஜிக்கு திக்திக்கென்றே இருக்கும். ஒருவிதத்தில் மோடியின் ஜம்பம் குறைவது, ஷாவின் ஆட்டம் கட்டுக்குள் வருவது மக்களுக்கு நல்லது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவினுள் மோடியை விரும்பாத அணிகளுக்கும் நல்லது. அவர்கள் வளர்ந்து வர முடியும்.
என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகளுக்கோ காங்கிரஸ் கூட்டணிக்குப் போனால் கிடைக்கும் பெரும் அதிகாரம், சுதந்திரம், பாதுகாப்பு ஒரு போதும் பாஜக கூட்டணியில் இருக்காது. அடுத்த தேர்தலுக்குள் பாபு காருவை காலி பண்ணி நிதீஷையும் முழுங்கி விடவே பாஜக முயலும்.
காங்கிரஸுக்கும் கூட்டணி அமைப்பதில் சிக்கல் உள்ளது. ஆட்சி சரியாக அமையாமல் நிதி நிலைமை, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் அதிகமானால் அது அடுத்த தேர்தலில் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பை பாதிக்க கூடும். ஏனென்றால் மக்கள் இதை காங்கிரஸின் கூட்டணி அரசென்றே பார்ப்பார்கள். ஜெ மறைவுடன் திமுக அதிமுகவின் ஆட்சியைக் கவிழ்த்து அதிகாரத்தில் அமர வாய்ப்பிருந்தது. ஆனால் அதனால் பாஜகவிடம் தாம் சிக்கி சீரழிய நேர்வதுடன், மக்களிடம் பெயர் கேட்டுப் போக நேரும் என்பதால் ஸ்டாலின் பொறுமை காக்க முடிவெடுத்தார். அது அவருக்கு பயன் தந்தது. இன்னொரு பக்கம் ஸ்டாலினுக்கு அன்றிருந்த நிச்சயத்தன்மை, தன்னம்பிக்கை, நிர்வாக கட்டமைப்பு, கட்சி வலிமை, நிதியாதாரம் காங்கிரஸிடம் இன்று இருக்கிறதா? இல்லை. அடுத்த ஐந்தாண்டுகள் காத்திருந்தால் அன்று இந்த எதிர்ப்பலை இருக்குமா? அன்று இந்த கூட்டணிக் கட்சிகள் அவர்களுடன் இருப்பார்களா? நிதியாதாரம் இருக்குமா? இதை பிரியங்காவே ஒரு பேட்டியில் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அதிகாரத்தில் இல்லாமல் போனால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அவநம்பிக்கையில் சோர்ந்து போவதுடன் வேலை பார்க்காமலே இருப்பார்கள். ஏற்கவே காங்கிரஸ் மிகவும் பலவீனமான நிலையிலே இந்த தேர்தலை சந்தத்தது. ராகுலும், தென்னக கட்சித்தலைமைகளுமே காங்கிரஸை செலுத்தினர்.
இது காங்கிரஸுக்கு இருமுனைக் கத்தி. எந்த பக்கம் அமர்ந்தாலும் டவுசர் கிழியும். சில கட்சிகளின் தன்னலத்தை பயன்படுத்தியும் வேறு சிலரை சமாதானப்படுத்தியும் கூட்டணி அமைத்து அந்த ஆட்சியில் அதிர்ஷ்டவசமாக நல்ல வளர்ச்சியும் ஏற்பட்டு விட்டால் மட்டுமே அந்த ஒரு முனை வசதியான அரியணையாகும். அப்படி ஒன்று நடக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...