Skip to main content

ராபின் மின்ஸும் சமீர் ரிஸ்வியும்




ஐ.பி.எல் ஏலம் வந்த பிறகு வறிய எளிய சூழலில் இருந்து வரும் இளம் வீரர்களின் நிலை ஒரே நாளில் வானுக்கு ஏவப்பட்ட ஏவுகணையைப் போல் ஆகிறது. இம்முறை ஏலத்தில் எந்த வீரர்களுக்கு எல்லாம் வாய்ப்பு அதிகம் என கிரிக் இன்போ தளத்தில் ஒரு கட்டுரையில் பட்டியலொன்றை வெளியிட்டிருந்தார்கள். அந்த வீரர்களின் ஆட்டத்தையும் வேறு விபரங்களையும் தேடிப் பார்த்தேன். ஒரு சில ஆல்ரவுண்டர்கள் எடுக்கப்படவில்லை, ஆனால் இரண்டு கீப்பர் மட்டையாளர்கள் எடுக்கப்பட்டார்கள். ஒருவர் ராபின் மின்ஸ் (குஜராத் லயன்ஸ்). மற்றொருவர் சமீர் ரிஸ்வி (சென்னை சூப்பர் கிங்ஸ்).
எனக்கு இருவரில் ரிஸ்வியே மேலான மட்டையாளர் எனத் தோன்றுகிறது. அவரது ஆட்டத்தில் ஒரு முழுமை உள்ளது. ஆக்ரோஷமானவர். எல்லா திசைகளிலும் அடிக்கக் கூடியவர். கீப்பிங்கும் நன்றாக உள்ளது. அதனால் எட்டரை கோடி சரியான தொகை தான். நம்மூர் பட்லர் (இங்கிலாந்து அணி) போல இருப்பார். அதுவும் சுழலை நன்றாக அடிப்பவர் என்பதால் சென்னை ஆடுதளங்களுக்கு ஏற்றவர்.
அடுத்து ராபின் மின்ஸ். இவர் ஐ.பி.எல்லில் எடுக்கப்படும் முதல் பழங்குடி வீரர் எனும் அளவில் பரவலான கவனத்தை ஊடகங்களில் பெற்றார். எனக்கு இவரது ஆட்டம் கிறிஸ் கெயிலை அல்ல, வினோத் காம்பிளியையே நினைவுபடுத்தியது. அடுத்து ஹெட்மெயிரையும் நினைவுபடுத்தினார். மரண அடி. எந்த பந்து முழுநீளத்தில் விழுந்தாலும் மிட் விக்கெட், லாங் ஆன் பகுதிகளில் கொலைவெறியில் அடிக்கிறார். பட்டாலே சிக்ஸர் தான். செமையான தோள் பலம். இடுப்பில் இருந்து கைகளுக்கு ஆற்றல் செல்லும்படியான ஸ்விங்கும், உடல் அசைவுகளும். ஆனால் இவருக்கு முக்கியமான பலவீனம் உண்டு - எக்ஸ்டிரா கவருக்கு மேல் பந்தை சிக்ஸருக்குத் தூக்கி அடிப்பதைத் தவிர ஆப் சைடில் ஷாட்கள் அதிகமாக இல்லை. பந்து கொஞ்சம் வெளியே திரும்பினாலோ மெதுவான ஆடுதளங்களில் நின்று வந்தாலோ பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து வைடாக வெளியே மெதுப்பந்தைகளை சுற்றி விட்டாலோ சிக்கிக் கொள்வார். மிட் விக்கெட், லாங் ஆபில் கேட்ச்கள் கொடுப்பார். இதனால் தான் ஏலத்தில் ஒரு அளவுக்கு மேல் பணம் கொடுத்து இவரை எடுக்க சென்னை அணி நிர்வாகம் தலைப்படவில்லை.
ஒருவேளை நேராக அடிக்கவும், ஆப் பக்கத்தில் டிரைவ், கட் செய்யவும் திறன்களை வளர்த்துக் கொண்டு கொஞ்சம் பொறுமையாக நின்று ஆட முயன்றால் இரண்டே ஆண்டுகளில் இந்திய டி20 அணியில் இடம்பெறுவார்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...