Skip to main content

விருதுக்காக வேலை செய்வது நம் வேலையா?

 . ராமசாமி சாகித்ய அகாடெமி விருதைப் பெறுவதற்கு எழுத்தாளர்களோ அவர்களுடைய நண்பர்களோ பின்பற்ற வேண்டிய நடைமுறை நுணுக்கங்கள், வித்தைகள், முயற்சிகள் பற்றியெல்லாம் (புத்தகப் பரிந்துரை அனுப்புவது, வாதிடத் தெரிந்த நண்பர்கள் வழியாக நூல்களை இறுதிப்பட்டியலில் இருந்து விருதுக்கு நகர்த்துவது) பேஸ்புக்கில் எழுதியிருந்தார். இது ஓரளவுக்கு பெரிய விருதுகளுக்கு எல்லாம் பொருந்தும் என நினைக்கிறேன். குழுக்களால் அல்லது தனிநபரால் தேர்வு செய்யப்படும் விருதுகளே விதிவிலக்கு (விஷ்ணுபுரம் விருது). . ராமசாமி ஒரு வேடிக்கைக்காத தான் சொல்கிறார் என்றாலும் அவர் சொல்வதைப் போல விருது பெறுவதற்கான அடிப்படைகளை சொல்லித் தரும் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்பதை நான் மறுக்கவில்லை. அதே நேரம் இன்னொரு சிக்கலும் உளது. எல்லாரிடமும் இந்த இலக்கிய சமூகமாக்கல், மனிதவள மேலாண்மை ஆகிய இயல்புகள் இருப்பதில்லை, அவர்கள் இத்திறன்களை வளர்த்து சுலபத்தில் ஜொலிக்க இயலாது


சாகித்ய அகாடெமி பிரதான விருதைப் பற்றித் தெரியவில்லை, ஆனால் யுவ புரஸ்காரைப் பொறுத்த வரையில் விருதாளர்கள் சிலருக்கு அப்படி ஒரு விருது எப்படி முடிவு செய்யப்படுகிறது, பெரும்பட்டியல், குறும்பட்டியல் என ஒன்றுமே தெரியாது என்பதை அவர்களுடன் பேசும்போது உணர்ந்திருக்கிறேன். தம்மை அதற்குத் தகுதியானவர்கள் எனக் கருதி முயன்றவர்களும் அல்லர் அவர்கள். அவர்களில் நானும் ஒருவன். என்னுடைய நூலை ஒரு பிரதியைப் பெற்று விபரப்பட்டியலுடன் தில்லிக்கு அனுப்பும்படி போன் அழைப்பு வந்த போது தான் தெரியவே வந்தது என் பெயர் இறுதிப்பட்டியலுக்குப் போயிருக்கிறது என. யார் எப்படி அனுப்பினார்கள் எனத் தெரியவில்லை. பின்னர் விருது முடிவான செய்தி கசிந்து வந்தது. என்னிடம் அமைதியாக இருக்கும்படி ஒரு எழுத்தாளர் நண்பர் சொன்னார். நான் அவ்வாறே இருந்தேன். கடைசி வரை எனக்கு என்ன நடக்கிறதென்பதே புரியவில்லை. அறிவிப்பு வந்த பின் கோலாகாலம் தான். இதற்கு இடையே ஒரு நண்பர் என்னை போனில் அழைத்து எனக்காக விருதுக்குழுவில் இருந்த மூத்த படைப்பாளி ஒருவர் சண்டை போட்டதாலே எனக்கு கிடைத்தது என்று அந்த எழுத்தாளரிடம் பேச சொன்னார். அப்படி அழைத்து நன்றி தெரிவிப்பது தவறாக இருக்குமென, அதை அவரே அவமானமாக நினைப்பார் என எண்ணி நான் அப்போது அதைச் செய்யவில்லை. இப்போதெனில் செய்திருப்பேன். அந்நண்பர் இன்னொரு செய்தியும் சொன்னார் - பின்னர் வெற்றி இயக்குநராகி விட்ட ஒரு படைப்பாளியின் பெயரைக் குறிப்பிட்டுஅவருக்கும் உனக்கும் தான் போட்டி, அவருக்காக இன்னொரு பெயர் பெற்ற இயக்குநர் மற்றொரு பெயர் பெற்ற மூத்த எழுத்தாளரிடம் பரிந்துரைத்து வேண்டிக் கேட்டதால் கடுமையாக கருத்து மோதல் இருந்தது, கடைசியில் உன் தரப்பே வென்றதுஎன்றார். அந்த இருவருமே எனக்கு நண்பர்கள் தாம். என்று கேட்டுவிட்டு அதை விட்டுவிட்டேன். எனக்கு நன்றாகத் தெரியும் - விருது கிடைக்காவிடினும் எனக்கு நஷ்டமில்லை, என் இடத்தை விருது தீர்மானிப்பதில்லை, விருதினால் என்வாசகர் படைஅதிகரிக்கப்போவதில்லை என்று. விருது என்பது ஊரில் சாமிக்கு பாயசம் படைதோ கோழியை பலிகொடுத்தோ படையல் போடுவதைப் போல. படையல் கிடைத்தாலும் இல்லாவிடினும் சாமி சாமி தான்.


என் இலக்கிய நண்பர் ஒருவர் எனக்கு விருது கிடைத்த சில மாதங்களில் நேரடி உரையாடலில் சொன்னார்: “உனக்கு எப்படியோ தெரியாம கொடுத்திட்டாங்க, இனிமே கொடுக்க மாட்டாங்க.” அவர் சொன்னது உண்மையே. நான் முன்பு டமால் டுமீல் என கருத்துக்களை ஏவியபடி இருப்பேன். இப்போது கருத்துக்கள் மீதான என் பிடிப்பு குறைந்துவிட்டது என்றாலும் நான் இப்போதும் கருத்தில்லாதவன் ஆகவில்லை. அகாடெமியின் யுவ புரஸ்காருக்குப் பிறகு பாஷா பரிஷத் கிடைத்தது. ஆனால் அதைக் கடந்து எனக்கு ஒரு விருது கூட கிடைத்ததில்லை. விகடன், உயிர்மை விருதுகள் கூட. என் கூட எழுத வந்தோர் 40-50 விருதுகளாவது - தெருவிளக்கு ரங்கசாமி விருது உள்ளிட்டு - வாங்கிவிட்டனர். எனக்கு இதெல்லாம் கிடைக்காது எனும் யோகநிலையை எட்டிவிட்டேன். சிலருக்கு சில விசயங்கள் வராது. அவர்கள் அப்படி இருந்து விடுவதே நலம்.


இன்னொரு விசயம் - விருதை இலக்காகி எழுதலாமா? கூடாது. விருதை இலக்காகி எழுதாமல் அதற்காக சமூகமாக்கல், அரசியல், முன்னெடுப்பு எல்லாம் செய்ய முடியுமா? முடியாது. செயற்கைத்தனம் வந்துவிடும், பயம் வந்து விடும். மகிழ்ச்சி போய்விடும். நாம் எதற்காக எழுத வந்தோம், விருதுக்காகவா? இல்லை. எழுத்து தரும் மகிழ்ச்சிக்காக, அடையாளத்துக்காக, இடத்துக்காக, உரையாடும் வாய்ப்புக்காக, நம் பண்பாட்டிற்காக, மொழிக்காக. எனில் கடைசி வரை நாம் இவற்றுக்காக மட்டுமே எழுத வேண்டும். அல்லாவிடில் நம் எழுத்து பத்தாயிரம் ரூபாய் ரெட்மி போன் போல ஆகிவிடும், நம் அக விளக்கு அணைந்துவிடும். நம் பாட்டுக்கு எழுதியபடி இருக்க இருட்டான வழியில் தெய்வமோ பேயோ குறுக்கிட்டு விருதைக் கொடுக்க நாம் அதை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு எழுத்தாணியை கூர்தீட்ட வேண்டும். நாமாகத் தேடிப் போனால் நாம் எழுத்தாளர்கள் அல்லர்.


தனது மற்றொரு பதிவில் . ராமசாமி ஏன் திறனாய்வாளர்கள், விமர்சகர்களுக்கு சாகித்ய அகாடெமி விருது தரப்படுவதில்லை எனக் கேட்டிருந்தார். இது முழுக்க நியாயமான கேள்வியே. நான் இதற்கு முன்பும் இதை வலியுறுத்தி இருக்கிறேன். விமர்சகர்களை நாம் ஊக்கப்படுத்தாவிடில் நமது இலக்கியம் கர்ணனின் கைப்பட்டு அறுந்த துரியோதனின் மனைவி பானுமதியின் மேகலையின் மணிகளைப் போல பொலபொலவென உதிர்ந்துவிடும். எடுக்கவும் கோக்கவும் ஆளிருக்க மாட்டார்கள்.  

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...