Skip to main content

வாழ்த்துகள்



நான் சென்னையில் இருந்திருந்தால் இந்த எழுத்தாளர்கள் ஆவணப் பட விழாவுக்கு நிச்சயமாக சென்று மகிழ்ந்திருப்பேன். ஒரு இலக்கிய விட்டேந்தித்தனம் இப்போது வந்துவிட்டாலும் மகிழ்ந்திருப்பேன். எழுத்தாளர்களும் வாசகர்களும் ஒன்று கூட, உரையாட நல்ல வாய்ப்பு. திருவுருவாக்கத்திற்கும் தான் - இலக்கிய சூழல் நிலைக்க நம் முன்னோடிகளை திருவுருவாக்குவதே தீர்வு. சும்மா விமர்சித்து ஓயாமல் சண்டையிடுவதால் தான் இப்படி பிச்சையெடுக்கும் நிலையில் படைப்பாளிகள் இங்கிருக்கிறார்களோ? பிரான்ஸில் முன்பு நிலைமை இப்படி இருந்ததென சொல்வார்கள். ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்தில் மோதல், சாதல், காதல் எல்லாம் இராது. இந்திய ஆங்கில எழுத்தாளர்களும் அப்படித்தான் - சண்டை போடவே மாட்டார்கள். எப்போதும் ஐந்து நட்சத்திர விடுதியிலே குடியிருப்பதாலோ என்னவோ நாவலை வெளியிட்டு புரொமோஷனுக்கு "எட்ரா வண்டிய" எனக் கிளம்பும் வரை கைப்புள்ள இருக்கிற இடம் தெரியாது. தமிழில் துரதிஷ்டவசமாக நீண்ட காலமாக பிரெஞ்சு சூழல் இருக்கிறது. கொஞ்ச நாட்கள் மாறுவது, சுயவளர்ச்சியில் கவனம் செலுத்துவது நல்லது. நம் புத்தகங்கள் பரவலாக மக்களிடம் போக வேண்டும். ஆங்கிலத்தில் உள்ள ஜெ.ஸி.பி மாதிரியான விருதுகள் தமிழிலும் தோன்ற வேண்டும். இங்கு இல்லாத பணமா? அதற்கு திருவுருவாக்கம் அவசியம். 

இந்த ஆவணப்படத் திருவிழாவில் முதல்வரும் அமைச்சர்களும் பங்கேற்றால் நன்றாக இருக்கும். பிக்பாஸில் கமல் செய்வதைப் போல முதல்வர் தினமும் ஒரு நூல் விதம் 100 நாட்களுக்கு இலக்கிய அறிமுகம் செய்து காணொளியாக வெளியிடலாம். அமைச்சர்களும் செய்யலாம். அதற்கு பெரிய படிப்பாளியாக இருக்க வேண்டும் என அவசியம் இல்லை  அத்தகைய ஆதரவே இலக்கியத்தை பொதுஜனத்திடம் கொண்டு சேர்க்கும்.

அதுவரை நம்மிடம் உள்ள கட்டமைப்பை வைத்தே இலக்கிய சூழலை வளர்க்க வேண்டி உள்ளது. அதையே மனுஷ்யபுத்திரன் செய்துவருகிறார். அவருக்கு என் அன்பும் வாழ்த்துக்களும்!

பின்குறிப்பு: ஏதோ சச்சரவு, சர்ச்சை என்றார்கள். ஒரு இலக்கிய அந்நியனாக இருக்கும் என் கண்ணில் இயல்பாகவே அது படவில்லை. யார் வீட்டு எழவோ பாய் போட்ட எழவோ என்று இருந்துவிட்டேன்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...