Skip to main content

இந்தியா - நியுசிலாந்து - யார் வெல்வார்கள்?



இந்தியாவுக்கே வாய்ப்பதிகம். நியுசிலாந்து பொதுவாக தம் பந்து வீச்சு, களத்தடுப்பின் ஆற்றலால் வெல்வார்கள். இந்த உலகக்கோப்பையில் முதன்முறையாக அதிரடி மட்டையாட்டத்தினால் பெரிய ஸ்கோர்களைக் குவித்து வென்றிருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய மட்டையாட்டத்தை மென்னியைப் பிடித்து நிறுத்தி ஓடினது போதும், வாக்கிங் போ என சொல்லத்தக்க பந்துவீச்சு இந்தியாவுக்கு உண்டு. எதிரணி 350 அடிக்க வேண்டிய ஆடுதளங்களில் கூட 300க்கு நிறுத்தியிருக்கிறார்கள் இந்திய வீச்சாளர்கள். குறிப்பாக மத்திய ஓவர்களில் (30-45). முதல் பத்து ஓவர்களில் கொஞ்சமே ஸ்விங் கிடைத்தாலும் அதைப் பயன்படுத்தி சில விக்கெட்டுகளை எடுக்க முடியும் அவர்களால். கேள்வியெல்லாம் 30-40 ரன்கள் குறைவாக உள்ள ஒரு இலக்கை வைத்து இந்தியாவின் மட்டையாட்டத்தைக் கட்டுப்படுத்தி வெல்ல நியுசிலாந்து வீச்சாளர்களால் இயலுமா என்பதே.
இந்தியாவுக்கு இது நல்ல போட்டியாக இருக்கும். இருதரப்பு போட்டித்தொடர் போல தன்னம்பிக்கையுடன் கூலாக ஆடி வருகிறார்கள். எப்படியோ ஒரே நேரத்தில் மட்டையாளர்கள், பந்துவீச்சாளர்கள் நல்ல ஆட்டநிலைக்கு வந்துவிட்டார்கள். மகிழ்ச்சியாக ஆடுகிறார்கள் என்பது அவர்கள் காத்திருப்பு அறையில் இருப்பதைப் பார்க்கையில் தெரிகிறது. அதுவும் முதல் போட்டியில் ஆஸி வீச்சாளர்களுக்கு எதிராக கோலியும் ராகுலும் காப்பாற்றி வெற்றிக்கு அழைத்துப் போனது இந்திய அணிக்கு ஒரு பெரிய உற்சாகத்தை, நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது என நினைக்கிறேன். அதன் பிறகு அவர்கள் நெருக்கடியை எதிர்கொள்ளவே இல்லை.
ஹர்த்திக் பாண்டியாவின் காயம் கூட நான்கைந்து போட்டிகளுக்குள் சரியாகி விடும் என நினைக்கிறேன். அதுவரை ஹர்த்திக்கின் இடத்தில் சூர்யாவும் (இன்றைய போட்டியில் சூர்யாவுக்கு காயம் இருப்பதால் ஒருவேளை இஷான் கிஷன்), தாகூரை விலக்கிவிட்டு அவரிடத்தில் ஷமி / அஷ்வினும் வந்தால் அணி இன்னும் வலுவாகி விடும். எப்படியும் தாகூர் நல்ல மட்டையாட்ட நிலையில் இல்லை என்பதால் 5 ஓவர்களில் 50 அடிக்க வேண்டிய நிலையில் 7 / 8 விக்கெட்டுகளை இழந்தால் அவரால் காப்பாற்ற முடியாது. பந்து வீச்சிலும் அவரை விட நன்றாக வீச ஆளிருக்கையில் அவருடைய இடத்தில் யாரையும் கொண்டு வரலாம்.
இந்தியா இப்போட்டியில் வென்றாலும் தோன்றாலும் பெரிதாகக் கவலைப்பட மாட்டார்கள். இது அரை இறுதி அல்லவே! ஆனால் அடுத்த இரு போட்டிகளில் வென்று அரை இறுதி இடத்தை உறுதி செய்து விட்டு ஆறுதலாக ஆட ஆரம்பித்து அரை இறுதிக்கு மனரீதியாக தயாராவார்கள். அரை இறுதி ல கொல்கொத்தாவில் என்றால் அங்கு ஷமி + பும்ரா நன்றாக வீசுவார்கள் என்பதால், பவுன்ஸ் குறைவாக இருக்கும் என்பதால் இந்தியாவுக்கு நல்ல வெற்றி வாய்ப்புண்டு. மும்பையில் நடந்தாலும் சமாளிப்பார்கள். பதற்றத்தில் சொதப்பாமல் இருந்தால் சரி. அனேகமாக எல்லா ஆடுதளங்களுக்கும் ஏற்ற பந்து வீச்சு இந்தியாவிடம் உண்டு. பாண்டே சில போட்டிகளில் இல்லாவிடினும் அது இந்திய பந்துவீச்சை வலுப்படுத்தவே செய்யும்.
நியுசிலாந்தின் பெரிய வலிமை அவர்கள் எந்த எதிர்பார்ப்பின் சுமையும் இன்றி ஜாலியாக ஆடுவார்கள் என்பது. அவர்கள் சில உலகக்கோப்பைகளை வென்று வருடாவருடம் நிறைய போட்டிகளில் ஆடும் நிலை வரும் வரை இப்படி “சமைஞ்சேன் இதுக்குத்தான்” என ஜாலியாக ஆடுவார்கள்.
இத்தொடரில் என்னை வெகுவாக கவர்ந்த மட்டையாளர் ரச்சின் ரவீந்திரா. அவர் ஆடும் போது ஒரு இளவரசர் உலா வருவதைப் போல இருக்கும். ஒருவேளை இந்தியாவுக்காக ஆடி கில்லுடன் இணை சேர்ந்திருந்தால் கம்பீரமான துவக்க வீரர்களாக இருந்திருப்பார்கள். அவரது அப்பா தேவையில்லாமல் நியுசிலாந்துக்கு வேலை தேடிப் போய் விட்டார்.
இப்போது என்னுடைய கணிப்பு:

இம்முறை ஆடுதளம் மட்டையாட்டத்திற்கு நன்றாக இருந்தால் நியுசிலாந்து முதலில் மட்டையாடி 270க்குள் முடித்தால் இந்தியாவால் சுலபத்தில் அடித்தாடி வெல்ல முடியும். இந்தியா முதலில் மட்டையாடி 290-300 அடித்தாலும் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெல்வார்கள்.
ஆனால் ஒருவேளை இது 250 ஆடு தளம் எனில், முதலில் பந்து ஸ்விங் ஆகி, பின்னர் மெதுவாக மாறி சற்றே திரும்பும் எனில், டாஸை வெல்லும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். எனில் நியுசிலாந்து ஆட்டத்துக்குள் வருவார்கள். இந்தியாவுக்கு கடும் நெருக்கடி இருக்கும். இங்கு தான் நியுசிலாந்து இஷ் சோதியை ஆடுவார்களா இல்லையா என்பது முக்கியமான முடிவாகும். சோதியின் காயமோ என்னவோ அவரை இதுவரை தொடருக்குள் கொண்டு வரவில்லை. ஆனால் அவரும் சாண்ட்னருக்கும் பதில் ரச்சினும் சாண்ட்னரும் இணைந்து வீசினால் அந்த தாக்கம் இருக்காது. இந்தியா இஷானையும் ஜடேஜாவையும் கொண்டு வந்து அவர்களை சமாளிக்க முடியும். ஒரு கால்சுழலரின் ஆபத்தே தனி. அதை நியுசிலாந்து மிஸ் பண்ணுவார்களா? ஆம் பண்ணுவார்கள்.
ஆடுதளத்தை நான் இன்னும் டிவியில் பார்க்கவில்லை. இது ஒரு குத்துமதிப்பான கணிப்பு மட்டுமே. தலைகீழாக நடந்தால் என்னை வையாதீர்கள்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...