Skip to main content

ஒரு முடிவற்ற 'துப்பறிவாளன்'




2021இல் எழுதி முடித்த நாவல் அது. அதைக் கடந்த இரு ஆண்டுகளாக திருத்தி மீளெழுதிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அது புதிய பொலிவை, அடர்த்தியைப் பெறும் போது மகிழ்கிறேன். நான் எழுத்தாளனாக அறிமுகமான காலத்தில் ஒரு புனைவெழுத்தை முடித்ததும் வெளியிட்டு அடுத்த வேலையை பார்க்கப் போக வேண்டும் என நினைத்திருந்தேன். வெகுபின்னரே அது தவறு, கண்ணாடியைத் துடைக்கத் துடைக்க தோற்றம் தெளிவுறுவதைப் போல, ஒரு படைப்பை நாம் திருத்தத் திருத்தத்தான் முழுமையாக வெளிப்படுகிறது எனப் புரிந்துகொண்டேன்.
இந்நாவலுக்காக ஆய்வு செய்யும் நோக்கில் எவ்வளவோ படித்திருக்கிறேன், குறிப்பெடுத்திருக்கிறேன். ஒரு பாத்திரத்தின் பெயரை மாற்ற வேண்டுமெனில் அவர் எந்த மதத்தின், தத்துவ சிந்தனையின் பிரதிநிதி என யோசித்து, அதற்கான நூல்களை வாசித்து, அக்குறிப்புகளை கதையில் சரியான இடங்களில் கதையோட்டம் பாதிக்கப்படாமல் நுழைப்பது, அவரவருக்கான தனித்துவமான சிந்தனை, பேச்சுமொழிகளைக் கொண்டு வருவது ... இதற்கே ஒரு சில மாதங்கள் ஆகும். கதை முழுக்க காலநிலைக் குறிப்புகளில் ஒரு தொடர்ச்சியைக் கொண்டு வரவே ஒரு மாதத்திற்கு மேல் உழைப்பு தேவைப்படும். நாவலின் பக்கங்களை இரட்டைப் படை எண்களாகப் பிரித்து சரியான இடத்தில் திருப்பங்களைக் கொண்டு வருவது,ஒரு பாத்திரம் 200வது பக்கத்தில் சொல்லும் ஒரு கருத்துக்கான தர்க்கத்தை அதற்கு முன்பு ஓரிடத்தில் பட்டும்படாமல் உணர்த்துவது, ஒரு பாத்திரத்தின் நன்மைக்கு ஈடாக அவர்து தீமையையும் காட்டி சமநிலைப்படுத்துவது ... இப்படி நாவலைத் திருத்தி எழுதுவது கடும் உழைப்பைக் கோரும் வேலை, ஆனால் அதே நேரம் நாம் வேறு எதிலும் உழைத்துப் பெறாத மகிழ்ச்சியை நிறைவை இது தரும்.

உ.தா., நான் இதற்கு முன்பு பகவத் கீதையை நான்கைந்து முறைகள் துண்டுத்துண்டாகப் படித்திருக்கிறேன். இம்முறை என் நாவலுக்குத் தேவைப்பட்டதால் சினமயானந்தாவின் 1400 பக்க கீதை உரைநூலை பத்து நாட்களில் தினமும் வேலையிடையே படித்து முடித்தேன். என் நண்பர்கள் என் கையிலோ மேஜையிலோ அந்நூலைப் பார்த்து அதிர்ச்சியாவார்கள். ஆனால் எனக்கு அது ஆய்வுக்கான வாசிப்பு. எந்த மனச்சாய்வும் இன்றி, என் தர்க்க மனதை கழற்றி வைத்துவிட்டு, மகிழ்ச்சியாகவும் கொதிப்பாகவும் அதை வாசிக்கையில் நான் என் நாவலின் பாத்திரமாகவே உணர்ந்தேன். அதற்கு ஈடான மகத்தான அனுபவத்தை நான் எந்த நூல் வாசிப்பிலும் அடைந்ததில்லை. ஏனென்றால் புனைவுக்காக தத்துவத்தை வாசிக்கும் போது அதையும் , ஒரு பாத்திரத்தின் நோக்கில் இருந்து புனைவாகவே பார்க்கிறேன். அதனாலே தர்க்க மனத்துடன் தத்துவம் படிப்பதை விட இது அதிகமாக என்னை திகைப்பூட்டுகிறது.
அடுத்து உபநிடங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். என் நாக்வலில் ஒரு முக்கியமான பிரச்சினை இருந்தது. என்ன செய்தாலும் ஒரு பாத்திரத்தை சரியாக 'இருத்த' முடியவில்லை. எவ்வளவு யோசித்தும் தீர்வு கிடைக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட உபநிடத்தில் நான் படித்த உரையாடல் தற்செயலாக எனக்கு ஒரு புதிய திறப்பை அளித்தது. அதற்காக மீண்டும் நாவலில் ஒரு புதிய பகுதியை எழுதத் தொடங்கினேன். அடுத்து இதே புனைவு மனநிலையில் சூன்யவாதமும், ஸ்வந்திரிகா பௌத்தமும் படிக்க வேண்டும்.

இப்படி என் "முடிவற்ற துப்பறியும் கதை" நிஜமாகவே ஒரு முடிவற்ற துப்பறியும் கதையாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் நான் அவ்வளவு மகிழ்ச்சியாக இப்பணியை செய்துகொண்டிருக்கிறேன். ஆம், நான் இதற்கான நேரத்தில் இன்னும் இரு நாவல்களை எழுதி முடித்திருக்க முடியும். ஆனால் இந்த மகிழ்ச்சியும் திருப்தியும் அவற்றில் கிடைக்காது. இதற்கான கூலியோ பாராட்டோ எனக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் கிடைத்தால் அவற்றுக்கு எனது மகிழ்ச்சியும் திருப்தியும் ஈடாகாது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...