Skip to main content

‘அதிர்ஷ்டக்காரன்’


நேற்று அனேகமாக இந்த நேரத்தில் எனக்கு ஒரு வினோதமான விபத்து நடந்தது


நான் வீட்டுக்கு வந்து கழிப்பறைக்குப் போய்க் கொண்டிருந்தேன். ஜீனோ என் பின்னாலே வந்தான். என்னைத் தாண்டி கழிப்பறையை நோக்கி ஓடினான். நான் அவனுடைய கழுத்துக் கயிற்றைக் கழற்றியிருக்கவில்லை. கழிப்பறைக்குள் எலி வந்து போன சந்தேகத்தில் குறுக்குமறுக்காகப் பாய்ந்து கொண்டிருந்த அவன் சட்டென வெளியே வந்தான். என்ன நடக்கிறது என யோசித்துக்கொண்டு நான் அவனை நோக்கி வர அவனுடைய கயிற்றை நான் மிதித்துவிட்டேன். நான் சுதாரிக்குமுன் அவன் கயிற்றை இழுத்துக்கொண்டு பின்னால் ஓட நான் புரண்டு கீழே முன்னோக்கி விழுந்தேன். பொதுவாக இப்படி விழுகையில் நான் சரியாக லேண்ட் ஆகி விடுவேன் (அடிக்கடி விழுந்து பழக்கம்). ஆனால் இம்முறை நான் கழிப்பறையின் கதவருகே இருந்ததால் என் தலை நேராகப் போய் கதவில் மோதியது. நல்ல வலுவான கதவா அடியும் செமையான வலுவுடன் இருந்தது. எந்தளவுக்கு என்றால் வீட்டுக்கு வெளியே நின்றிருந்த வீட்டு உரிமையாளருக்கே கேட்டு விட்டது. நான் கதவை மூடாததால் அவர் உள்ளே வந்து பார்த்தார். நான் தலையைப் பிடித்துக்கொண்டு கீழே கிடக்கிறேன்.


இடது காதுக்கு மேலிருந்து தலைக்கு நடுவில் உள்ள பகுதியில் பலமான அடி. பில் ஹியூக்ஸ் என்ற ஒரு மட்டையாளருக்கு பந்து பட்டு அவர் செத்துப் போனாரே கிட்டத்தட்ட அந்த இடம். ஆனால் ஆச்சரியமாக எனக்கு கடும் தலைவலி இருந்ததே தவிர தலைசுற்றுவது, குழப்பம், வாந்தி போன்ற உபாதைகள் இல்லை. அதனால் ஆபத்தில்லை எனத் தோன்றியது. எனக்குத் தெரிந்த ஒரு டாக்டரிடமும் பேசினேன். அவரும் பயப்பட வேண்டாம் என்றார்.


வாயை முழுக்கத் திறக்க முடியவில்லை. தலைவலிக்கு மாத்திரை மட்டும் போட்டுக்கொண்டேன். காலையில் எழுந்தால் அந்த வலியும் குறைந்திருந்தது. ஆனால் ஹெல்மெட் அணியும் போது வலி, சாப்பிடும் போது வலி, அவ்வளவு தான். மோதிய வேகத்திற்கு, வலுவிற்கு கொஞ்சம் முன்னே பின்னே பட்டிருந்தால் நான் செத்துப் போயிருப்பேன். ஆனால் ஏதோ ஒரு தற்செயல் தப்பித்துவிட்டேன்


ஒருவேளை நான் இறந்திருந்தால் இந்த வழக்கு, அதை ஒட்டிய அலைச்சல், செலவுகள், செட்டிமெண்டுக்கான கடன் என எந்த நெருக்கடியும் இல்லை. ஆனால் பாருங்கள் காலம் என்னை அப்படித் தப்பிக்க விடுவதாக இல்லை. நீ இருந்து அனுபவித்து விட்டுப் போ எனச்சொல்லி என்னைப் பிழைக்க வைத்திருக்கிறது. இந்த வருடத் துவக்கத்திலே எனக்கு சிறிதும் அதிர்ஷ்டம் இல்லையென்றால் எப்படி?

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...