Skip to main content

ஒரு சிறுதவறும் சனியும்


2017ஆம் ஆண்டு நான் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தில் கடும் நெருக்கடி. எனக்கு அங்கிருக்கவே பிடிக்கவில்லை. பல இடங்களில் வேலைக்கு முயன்று கொண்டே இருந்தேன். பெங்களூரிலும் தான் வேண்டாவெறுப்பாக முயன்றேன். இங்கே கிடைத்தது. சென்னையில் இங்குள்ள ஊதியத்தில் பாதி கிடைத்தால் கூட போதும், எந்த வேலையென்றாலும் போதும் என்றே நினைத்தேன். இன்னும் ஆறு மாதங்கள் பொறுத்திருந்தால் கிடைத்திருக்கலாம். ஆனால் பொறுமையில்லை. அதுதான் நான் அன்று செய்த தவறு. அத்தவறு என் வாழ்க்கையை இன்று தலைகீழாக்கி விட்டதே என நான் நோகாத நாளில்லை. 

நான் பெங்களூருக்கு வருவதா வேண்டாமா என முடிவெடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த போது, ஜெயமோகனை அழைத்து அவரது அறிவுரையைக் கேட்டேன். உன் மொழி காதில் கேட்காத ஊரில் போய் இருக்காதே, ஒரு எழுத்தாளனுக்கு அது நல்லதல்ல என்றார். நான் அவருடைய அறிவுரையைக் கேட்டிருக்க வேண்டும். கேட்கவில்லை. 

ஒரே ஒரு சிறிய முடிவு. என் மொத்த வாழ்க்கையும் சர்வ நாசமாகி விட்டது. நிம்மதி, மகிழ்ச்சி போய் விட்டது.

இதே போல ஒரு 'சிறிய' முடிவை எடுத்து இந்த ஊரில் இருந்தே கிளம்பி சென்னைக்கு வரும்படியாக நிகழ்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

எனக்கு கிரகபலனில் நம்பிக்கை பெரிதாக இல்லை என்றாலும் நளனின் கால் பாதத்தில் சனி புகுந்ததைப் போல என் உச்சந்தலையில் அன்று அதே சனி ஏறிவிட்டதோ எனத் தோன்றுகிறது. ஏனென்றால் நளனுக்கு நடந்த ஒவ்வொன்றும் எனக்கும் நடந்தது. இதற்கு மேல் இழக்க ஒன்றுமில்லை எனும் நிலையில் தான் நளன் மீண்டு வருவான். நான் அப்படி மீள்வேனா?

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...