Skip to main content

கோலியின் அற்புத ஆட்டமும் இந்தியாவின் கால்நடுக்கமும்


டி20 உலகக்கோபையின் முதற் போட்டியில் நிச்சயமாக ஜெயிக்க வேண்டிய இடத்தில் இருந்து இந்தியாவின் துவக்க வீரர்கள் பதற்றமாக ஆடி சொதப்பிட, நிச்சயமாக தோற்க வேண்டிய ஒரு ஆட்டத்தை கோலி - பாண்டியாவின் துணையுடன் - இறுதி வரை போராடி வென்றளித்தார். அதுவும் ஹாரிஸ் ரவுபின் 19வது ஓவரில் அவர் அடித்த இரு சிக்ஸர்களையும் மறக்க முடியுமா? கோலியின் தலைசிறந்த டி20 அரைசதம் இதுதான். இந்த ஆட்டநிலையை அவர் இறுதிப் போட்டி வரை எடுத்து சென்றால் கோப்பை நமக்குத் தான் எனத் தோன்றுகிறது.

அதே நேரம் இப்போட்டி முழுக்க பெரிய ஆட்டத்தில் மோதுகிற கால் நடுக்கம் தெளிவாக இந்தியாவுடம் புலப்பட்டது. இன்று கிட்டத்தட்ட choke ஆனார்கள். ஒருவேளை அரை இறுதியிலும் choke ஆனால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. கோலியின் இன்றைய இன்னிங்ஸ் போல சில அதிசயங்கள் முக்கியமான போட்டிகளில் நடந்தாலே இந்தியாவால் முன்னேற முடியும். 

ஒப்பிடுகையில் பாகிஸ்தான் இன்னும் மேலான தன்னம்பிக்கையுடன் ஒழுங்குடன் ஆடினார்கள். இறுதி வரை கலங்கவில்லை. ஆனால் இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் - சிங்கைத் தவிர - துவக்க ஓவர்களில் நீளத்தை fullஆகப் போடவில்லை. சற்று தள்ளி பந்தை லெங்த்தில் போட்டதாலே தொடர்ந்து எட்ஜ் வாங்காமல் பந்துகள் மட்டையை பறக்கும் முத்தம் மட்டும் இட்டுச் சென்றன. இல்லாவிடில் புவனேஸ்வருக்கு 3 விக்கெட்டுகள் முதல் 5 ஓவர்களுக்குள் கிடைத்திருக்கும். அதே போல வெவ்வேறு கட்டங்களில் எப்படியாவது சாதிக்க வேண்டும் எனும் மிகை விருப்பத்தில் வேகவீச்சாளர்கள் கட்டுப்பாட்டை இழந்தனர். அதனாலே 130க்குள் ஆட்டம் இழந்திருக்க வேண்டிய பாகிஸ்தான் 159ஐ எட்டியது.

 மட்டையாட்டத்திலும் விக்கெட் கொடுக்கக் கூடாதே எனும் பயத்தில் மிகவும் தடுப்பாட்டத்த நிலைக்கு போனோம். அதனால் பாகிஸ்தான் வீரர்களால் தம் விருப்பப்படி பந்து வீசி கட்டுப்படுத்த முடிந்தது  இந்திய அணி இப்படி தன் மீது தானே தேவையில்லாத அழுத்தத்தை போட்டுக் கொள்வது ஒரு பிரச்சினை. கோலியும் ஹர்த்திக்குமே விதிவிலக்குகள். அவர்கள் உணர்ச்சிவயப்படாமல் தோனி ஸ்டைலில் கூலாக ஆட்டத்தை இறுதி வரை எடுத்து சென்றனர். வென்றனர். அதனாலே ஆட்டமுடிவில் ரோஹித் ஓடி வந்து கோலியைத் தூக்கிக் கொண்டார், அவரது கண்கள் ஈரத்தில் மினுங்கின. இன்றைய போட்டியில் கோலி இல்லாமல் நிலைமை தலைகீழாகியிருக்கும் என அவர் அறிவார். 

இந்தியா இப்படி நெருக்கடி சமயங்களில் பயந்து நடுங்குவதை நிறுத்தினால்  இந்த உலகக்கோப்பை தொடர் பட்டாசாக இருக்கும். வரும் ஆட்டங்களில் தெரியும் இவர்கள் துணிந்தாடுவார்களா அல்லது நெருப்புக் கோழி போல தலையைப் புதைத்துக் கொண்டு கோலி தம்மைக் காப்பாற்ற மாட்டாரா என எதிர்பார்த்திருப்பார்களா என.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...