Skip to main content

வாடகை வீடுகளை முறைப்படுத்துவது



வீட்டு உரிமையாளர்கள்-வாடகையாளர்கள் நீயா நானா விவாதத்தைப் பார்த்த போது ஒரு முக்கியமான அவா எனக்கு ஏற்பட்டது.
இது என்னுடைய நீண்ட நாள் ஆசை அரசு - இந்த வாடகை வீடுகளை முறைப்படுத்தி தனது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். அதாவது நகரத்தின் மையத்தில் உள்ள வீடென்றால் 30,000 வெளியே உள்ள வீடென்றால் 8000 எனும் பாரித்த வேறுபாடு இருக்கக் கூடாது. ரெண்டாயிரத்துக்கு மேல் வீடுகளின் வாடகையை இடத்தின் பொருட்டு உயர்த்த அனுமதிக்கக் கூடாது. ஏனென்றால் நீங்கள் அடையாறில் வேலை பார்த்தாலும் அயப்பாக்கத்தில் வேலை பார்த்தாலும் உங்களுடைய சம்பத்தில் 20,000 வித்தியாசம் இருக்கப் போவதில்லை. அத்தியாவசிய பொருட்களின் விலையும் மாறப் போவதில்லை. அரசு ஒரு இணையதளம் ஆரம்பித்து அதில் உரிமையாளர்களும் வாடகையாளர்களும் தம்மைப் பதிவு பண்ணி வரிசை முறையில் வீட்டை மென்பொருளே ஒதுக்கீடு செய்ய வேண்டும். புரோக்கர்களை ஒழிக்க வேண்டும். வீட்டை அடிப்படையான விதிமுறைகள் ஒழிய வேறு காரணங்களுக்காக மறுக்கும் உரிமையை பதிவு பண்ணியுள்ள உரிமையாளர்களுக்கு மறுக்க வேண்டும். அதே போல வாடகையையும் முன்பணத்தையும் இணையதளம் மூலம் செலுத்தி அதை அவ்வழியே உரிமையாளரும் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போது அட்வான்ஸை சரியான நேரத்தில் திரும்ப வாங்குவதும் வாடகையாளர்களுக்கு சுலபம் ஆகும். இப்போது நடப்பதைப் போல அட்னாவ்ஸ் பணத்தை வாங்கி வட்டிக்கு, ரொட்டேஷனுக்கு விடும் வழக்கம் இல்லாமல் ஆகும். அரசின் கையிருப்பில் அட்வான்ஸ் இருந்தால் அது பொருளாதாரத்தை மேம்படுத்தும்.
அதே போல இருதரப்புகளின் குறைகளை சரிசெய்யும் நடுவராக அரசே செயல்பட வேண்டும். நகரத்தின் மத்தியில் வசிப்பதில் உள்ள மிகப்பெரிய சிரமமே அதிக வாடகை தான். அரசு இதை நெறிப்படுத்தினால் அது நீண்ட தூரம் பயணித்து வேலைக்கு வரும் சிரமத்தை குறைக்கும். பணக்கார, மேல் மத்திய, மத்திய வர்க்க வாரியாக மக்கள் பிரிந்து கிடக்கிற பாரபட்சம் இல்லாமல் ஆகும். சாதி, மதம், சைவம், ஒழுக்கக் கட்டுப்பாடு, குறுக்கீடுகள், ஆதிக்க சுபாவம் என வீட்டு உரிமையாளர்கள் பண்ணுகிற அட்டூழியங்களும் ஒரு முடிவுக்கு வரும். மக்கள் மீதுள்ள பொருளாதார அழுத்தம் குறையும். நான்கு வீடுகளைக் கட்டிப்போட்டு அநியாய வாடகைப் பணத்தில் உட்கார்ந்து தின்னுகிற, மென்பொருள் துறை கவிழ்ந்ததும் ஆள் கிடைக்காமல் அந்த வீடுகளைப் பூட்டிப் போட்டு உட்கார்கிற அவல நிலை இல்லாமல் ஆகும். வாடகை கடைகளை எடுத்துக் கொண்டாலும் வாடகைப் பணமே அங்கு விற்கப்படும் சேவை அதிகமாக ஆவதற்கு முக்கிய காரணம். அதையும் சீராக்கினால் அங்குள்ள சேவையின், பொருட்களின் விலையையும் குறைக்கும் படி அரசால் கட்டளையிட முடியும். இதுவும் மத்திய வர்க்கம் மீதான அழுத்தத்தை குறைக்கும்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...