Skip to main content

ப. காளிமுத்துவிற்கு வாழ்த்துகள்


ப. காளிமுத்துவின் இக்கவிதையை பாருங்கள், எவ்வளவு அழகாக இருக்கிறது:

"மழைத் துளிகள் கூட்டாகி 
திரண்டு கீழிறங்குகிறது 
அவைகள் துளித்த போதிருந்த தெருக்குழாய் வசைக்கதைகள் கோணல்மானலாக மாறிக் கூட்டாகத் துவங்கியது 
அதன் துளிகள் முன்னுக்குப் பின் மாறி இத்தெருக்காரியின் பெயர் 
அடுத்த தெருக்காரனின் பெயரென திரட்சியில் மாட்டிக் கொண்டது 
அதனடி ஓயாது ஒலியெழுப்பிக் கொண்டிருந்த வெள்ளைக்கோழி அங்கு ஒதுங்கியிருந்த கிழவனாகியிருந்தது அம்மழைத் திரட்டு தரையில் விழுந்து சிதறிய சமயம் சிறு விசும்பல்கள் மேலெழ அதை மறுப்பதாய் சில தென்னம்பூக்கள் பரவிக் கிடந்தன."

காளிமுத்துவிடம் ஒரு அபாரமான கவி ஒழுக்கு (poetic flow), சரளத்தன்மை, காட்சிபூர்வமான மொழிநடை இருக்கிறது. வண்ணதாசனின் மென்னுணர்வு, கற்பனாவாதம், முகுந்த நாகராஜனின் வளர்ந்தவர்களின் அன்றாட உலகில் உள்ள குழந்தைமை, அது சார்ந்த ஒரு விளையாட்டு உள்ளது. இந்த இரண்டு கவிகளின் தாக்கத்தை அதிகமாக நான் காளிமுத்துவிடம் காண்கிறேன்.

அடுத்து, காளிமுத்துவின் படைப்புலகின் ஒரு பிரதான வசீகரமாக அதன் துல்லியமான காட்சி ஒழுங்கு - கிட்டத்தட்ட சினிமா மொழியை நினைவுபடுத்துகிற காட்சி செறிவு - உள்ளது.

அவரை ஆட்கொள்ளுகிற ஒரு அக்கறை, கேள்வி மனிதர்களிடையே தோன்றும் தொடர்புக் கண்ணிகள் எப்படி தொலைவிற்கு அப்பாலும் அண்மையாக உள்ளன என்பதே. அதாவது நெருங்கி இருந்தாலும் தொலைதூரமாவது, தொலைவில் அகன்றிருந்தாலும் அருகாமையில் உணர்வது. இந்த முரணை அவர் அன்றாட உலகின் காட்சிகள், பொருட்கள், இயற்கை வழியாக பரிசீலிக்கிறார். சில இடங்களில் நமது திணைக்கும், நாம் புழங்கும் உலகுக்கும், உடலுக்கும், மனதுக்கும் ஒரு அறுக்க முடியாத பிணைப்புள்ளதைக் காட்டுகிறார். ஒரு கவிதையில் திருமண வீட்டுக்கு வருவோருக்காக வைத்திருக்கிற வெற்றிலை, பாக்குகளை மனித உடல்களாக பாவித்து சிலாகிப்பாக எழுதுகிறார். எனக்கு இது தஸ்தவஸ்கியின் "வெள்ளை இரவுகள்" நாவலில் அவர் காலி செய்யப்பட்ட வீடுகளைப் பற்றி சொல்வதை நினைவுபடுத்தியது.

காளிமுத்துவுக்கு எனது அன்பும் வாழ்த்துகளும்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...