Skip to main content

தினேஷ் கார்த்திக்கும் வேறு விசயங்களும்



நேற்றைய இந்தியா-மே. தீவுகள் முதல் டி20 போட்டியைப் பார்த்த போது தோன்றியவை:


  1. அஜய் ஜடேஜா டிவி விவாதத்தில் சொன்னதைப் போல தினேஷ் கார்த்திக் இப்போது எம்.எஸ் தோனியின் பாணியை தனக்கானதாக வரித்துக் கொண்டு விட்டார். அவர் பதினாலாவது ஓவருக்கு மேல் வருகிறார் என்றால் விக்கெட்டுகள் தன்னைச் சுற்றி மளமளவென சரிகிறது என்றால், சற்றும் பதறாமல் பதினெட்டாவது ஓவர் வரை பொறுமையாக ஒற்றை, இரட்டை ரன்கள், எப்போதாவது ஒரு நான்கு என அடித்து காத்திருப்பார். ஒரு புலி தன் இரையை அடிக்க சரியான தருணத்திற்கு காத்திருப்பதைப் போல. 18 ஓவரில் பெரும்பாலான பந்து வீச்சாளர்களுக்கு ஏதோ ஒரு பயம் வந்து விடும். தினேஷ் வேறு கவருக்கு, எக்ஸ்டிரா கவருக்கு மேலும், நேராகவும், மிட்விக்கெட், லாங் ஆனிலும் சிக்ஸர்கள் அடிப்பார், ஸ்கூப் ஷாட், ரேம்ப் ஆடுவார் என்பதால் அவருக்கு எங்கு வீசுவது என்பதில் வீச்சாளர்களுக்கு குழப்பம் வரும். தம் பாட்டுக்கு நாலு மெதுபந்துகள், ஒன்றிரண்டு யார்க்கர்கள், லெங்க்த் பந்துகள் என வீச வேண்டியவர்கள் கைகால் உதற கண்ட இடத்திலும் வீச முயன்று சொதப்புவார்கள். நேற்றைய போட்டியில் மே. தீவு வீச்சாள்ரகளும் அப்படித்தான் திணறினார்கள். ஆட்டத்தின் கடைசி இரு ஓவர்களில் கார்த்திக் இந்த பயத்தை பயன்படுத்தி எதிரணியின் முதுகுத்தண்டை முறித்தார்


2) தினேஷ் கார்த்திக் பின்னர் ஆட்டநிறைவு பேட்டியில் சொன்னதைப் போல அவர் ஆடுதளத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு எந்த ஷாட் ஆடலாம், எது வேண்டும் என முடிவெடுக்கிறார். இது 10-12 பந்துகளை பொறுமையாக ஆடிய பின்னரே சாத்தியமாகிறது. அதனாலே முதல் பந்தில் இருந்தே அடிக்க வேண்டி வரும் போது அவருக்கு சற்று சிரமமாகிறது. நேற்றைய போட்டியில் முழுநீளப் பந்துகளை அடிக்கலாம் என முடிவெடுக்கிறார். பெரும்பாலும் கவருக்கு மேல், லாங்க் ஆனில் மற்றும் நேராக. அந்த மெதுவான ஆடுதளத்தில் இவை நல்ல தேர்வுகள். இதுவே சற்று வேகமாக ஆடுதளம் எனில் பின்னங்காலுக்கு சென்று இன்னும் கூடுதல் ஷாட்களை அடித்திருப்பார். ஸ்டம்புக்கு குறுக்காகவும் ஆடியிருப்பார். இந்த திட்டமிடலும், அவதானிப்பும் தினேஷ் கார்த்திக்கின் தனிச்சிறப்புகள். அதனாலே இறுதி ஓவர்களில் மற்றவர்கள் அடிக்கத் திணறும் போது அவர் மட்டும் சிறப்பான டைமிங்குடன் பந்தை தெறிக்க விடுகிறார். தோனி தான் இந்த பாணி - நில், கவனி, அடி - ஆட்டத்தின் பிதாமகர் என்பதையும் குறிப்பிட வேண்டும். அதனாலே கார்த்திக் தோனியின் வாரிசாகத் தோன்றி விட்டார் என நினைக்கிறேன்.


3) அதே நேரம் தோனியால் 8வது ஓவரில் வந்தும் 20 ஓவர்கள் வரை ஆடி அணியை கரைதேற்ற முடியும். கார்த்திக்கால் இதுவரை அது இயன்றதில்லை


4) இன்னொரு விசயம் கார்த்திக் பந்தின் வேகத்தை நம்பி இருப்பவர். அவருக்கு கடைசி ஓவர்களை வீசும் பொறுப்பை ஒரு நல்ல சுழலரிடம் ஒப்படைத்தால் - இடதுகை சுழலர் அல்லது கால்சுழலர் - அது சுவாரஸ்யமாக இருக்கும். ஏனென்றால் அப்போது கார்த்திக் பவரை தன் உடம்பில் இருந்து உற்பத்தி பண்ண வேண்டி வரும். அவர் ஒரு திடகாத்திரமான ஆள் அல்ல. சுழலர்களுக்கு எதிராக அவரது பவுண்டரி ஷாட்கள் ஸ்லாக் ஸ்வீப் மற்றும் இறங்கி வந்து லாங் ஆனில் அடிப்பவை மட்டுமே. அதுவும் ஸ்வீப்பையும், பின்னால் சென்று டீப் பாயிண்டில் அடிக்கும் கட் ஷாட்டையுமே நம்பி இருப்பார். ஆகையால் அந்த இடங்களை கவர் செய்து விட்டால் தாராளமாக ஒரு சுழலரால் கார்த்திக்கை கட்டுப்படுத்த முடியும். தோனிக்கும் இந்த பிரச்சனை இருந்தது. எதிர்காலத்தில் எதிரணி தலைவர்கள் இந்த யுக்தியை கார்த்திக்கு எதிராக முயல்வார்கள் பாருங்களேன்!


4) நிறைய பேர் கார்த்திக்கின் 37 வயது மீள்வருகையைப் பற்றி பேசுகிறார்கள். அதற்கு கடந்த ஐந்தாண்டுகளில் அவர் அபிஷேக் நாயருடன் சேர்ந்து கடுமையாகப் பயிற்சி எடுத்து தன் உடற்தகுதியையும் மட்டையாட்டத் திறனையும் மேம்படுத்தியதும், டி20 போட்டிகளின் நிபுணராக தன்னை தகவமைத்ததும் முக்கிய காரணம். ஒரே ஒரு திசையில் நம் ஆற்றலை நாம் செலுத்தினால், கடுமையாக உழைத்தால் எதுவும் சாத்தியம் என்பதற்கு கார்த்திக் ஒரு உதாரணம்.


5) நேற்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக்குடன் இணைந்து அஷ்வின் அடித்த சிக்ஸர், சுணங்காமல் ஆடிய விதம் பிடித்திருந்தது. அவர் தன்னை ஒரு ஆல்ரவுண்டராக அணியில் நிறுவ முயல்கிறார். சஹல், ஜடேஜா, அக்ஸரின் இடங்கள் உறுதியாகி விட்ட நிலையில் இப்போது மூன்றாவது சுழலராக அவர் குல்தீப் மற்றும் பிஷ்னாயுடன் போட்டியிடுகிறார்


6) சூர்ய குமார் யாதவை நேற்று துவக்க மட்டையாளராக அனுப்பினார்கள். ஆனால் கடந்த டி20 போட்டியில் துவக்க வீரராக வந்து ரிஷப் பண்ட் அசுர ஆட்டமாடினார். எனக்கு பண்டின் சரியான இடம் அதுவே எனப் படுகிறார். அவருக்கு பந்தின் வேகம் பிடிக்கிறது. மத்திய ஓவர்களில் ஆட வரும் போது சுழலர்கள் வீசும் மெதுவாக ஆப் குச்சிக்கு வெளியே விழுந்து திரும்புகிற, வேக வீச்சாளர்கள் வைடாக வீசுகிற பந்துகளை அவரால் சுலபத்தில் அடிக்க முடிவதில்லை. ஆனால் துவக்க மட்டையாளராக அவரால் ஆட்டத்தின் போக்கை முதல் 6 ஓவர்களில் தீர்மானிக்க முடியும். தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டால் அவர் டி20 போட்டிகளின் சேவாகாக உருவெடுப்பார்.


7) நான் அர்ஷ்தீப் சிங்கின் பெரிய விசிறி. அவர் எனக்கு ஏனோ வசீம் அக்ரமை நினைவு படுத்துகிறார். நேற்று அகில் ஹுசைனுக்கு போட்ட அந்த உள்வரும் யார்க்கர் வசீமின் அந்த புகழ் பெற்ற யார்க்கரே. அதே போல தொடர்ந்து அவரை மட்டையாளர் இரண்டு சிக்ஸர்கள் அடித்தாலும் கவலைப்படாமல் வேறு நீளத்தையோ யுக்தியையோ முயன்று பார்ப்பார். அவரது இந்த துணிச்சலும் எனக்குப் பிடித்திருக்கிறது.  

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...