நான் கடுமையாக வெறுப்பது ஒரு நாவலில் தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கையில், தினமும் பல நூறு சொற்களை அனாயசமாக எழுதிக் கொண்டிருக்கையில், அதற்கு சற்றும் சம்மந்தமில்லாத மற்றொரு வேலையை சில நாட்கள் தொடர்ந்து செய்ய நேர்வதே. அதாவது நாவல் எழுத ஒரு சில மணிநேரங்கள் கூட கிடைக்காதபடி வேலை நெருக்கடி அதிகமாவதே. பயணங்களையும் இதில் சேர்க்கலாம். திரும்ப நாவலில் விட்ட இடத்துக்குத் திரும்பும் போது மீண்டும் மனநிலை கூடி வர நேரமெடுக்கிறது. பனிமூட்டத்தில் வழி மறைந்து விட்டதைப் போலத் தோன்றுகிறது. ஒன்றிரண்டு நாட்கள் போராடி மீண்டும் சரளமாக எழுத ஆரம்பிக்கலாம் என்றாலும் சில நாட்களை இழந்து விட்ட கோபம் உள்ளிருந்து அரித்துத் தின்னுகிறது.
அதை விடக் கொடுமை என்னவென்றால் இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என்பது போல தினந்தோறும் பற்பல வேலைகளை செய்தபடி மனிதர்கள் இருப்பதைக் காண்கிறேன், அவர்களுக்கு இதைப் போல எந்த கவலையும் இல்லை, அன்றாட நெருக்கடிகளைக் கையாண்டால் போதுமென இருக்கிறார்கள். எனக்கு தண்ணீரில் இருந்து ஒரு மீனைப் பிடித்து கரையில் போட்டதைப் போலிருக்கிறது; அவர்கள் எனதுலகதுக்கு சற்றும் சம்மந்தமில்லாததைப் போல இயல்பாக சிரித்தபடி கடந்து போகிறார்கள். அப்போதைய மனநிலையில் எனக்கு இவர்களைப் பார்க்கையில் வேற்றுலகவாசிகளைப் பார்ப்பதைப் போலிருக்கிறது.
எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், இவர்களுடைய உலகம் நிஜமாகவே உண்மையானது தானா என ஆச்சரியம் கொள்கிறேன். என் நாவலை எழுதி முடித்த பின்னர் என் மனநிலையே எனக்கு விசித்திரமாக இருக்கும், நானும் அவர்களிடைய உலகில் ஜாலியாக இணைந்து கொள்வேன். அதுவரை எனக்கு இந்த அன்றாட உலகின் நியதிகள், அவசியங்கள், நெருக்கடிகள் அபத்தமாகத் தோன்றுகின்றன. எதுவும் எனக்குப் பொருட்டாகத் தெரியவில்லை. உடற்பயிற்சியில், டயட்டில் ஆர்வம் இழக்கிறேன். எவ்வளவு நினைவுபடுத்தினாலும் அந்ந்த நாளைக்கான வேலைகள் நினைவில் இருந்து நழுவிச் செல்லுகின்றன. எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் சற்றும் வருத்தம் ஏற்படுவதில்லை. எப்போதும் ஒரு மந்தமான சுகானுபவ நிலை. இதற்காகவே நான் சில மணிநேரங்களாவது நாவலை எழுத விரும்புகிறேன். அதை ஏதாவது ஒரு வேலை வந்து தடுக்கும் போது உலகை தொடர்ந்து சபித்தபடி அதைச் செய்கிறேன். என்னையே கடுமையாக வெறுக்கிறேன். எல்லாரையும் முறைத்தபடி இருக்கிறேன். என்னைப் பார்த்தால் அப்போது எல்லாருக்கும் கிறுக்கு என்றே தோன்றும். எனக்கும் அவர்களைப் பார்த்தால் அப்படியே இருக்கும்.
இப்படி ஒரு உலகம். அதன் கதவு மூடி விடக் கூடாதே என பிரார்த்தித்தபடி இருக்கிறேன்.