Skip to main content

இரண்டு உலகங்கள்

நான் கடுமையாக வெறுப்பது ஒரு நாவலில் தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கையில், தினமும் பல நூறு சொற்களை அனாயசமாக எழுதிக் கொண்டிருக்கையில், அதற்கு சற்றும் சம்மந்தமில்லாத மற்றொரு வேலையை சில நாட்கள் தொடர்ந்து செய்ய நேர்வதே. அதாவது நாவல் எழுத ஒரு சில மணிநேரங்கள் கூட கிடைக்காதபடி வேலை நெருக்கடி அதிகமாவதே. பயணங்களையும் இதில் சேர்க்கலாம். திரும்ப நாவலில் விட்ட இடத்துக்குத் திரும்பும் போது மீண்டும் மனநிலை கூடி வர நேரமெடுக்கிறது. பனிமூட்டத்தில் வழி மறைந்து விட்டதைப் போலத் தோன்றுகிறது. ஒன்றிரண்டு நாட்கள் போராடி மீண்டும் சரளமாக எழுத ஆரம்பிக்கலாம் என்றாலும் சில நாட்களை இழந்து விட்ட கோபம் உள்ளிருந்து அரித்துத் தின்னுகிறது.

 அதை விடக் கொடுமை என்னவென்றால் இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என்பது போல தினந்தோறும் பற்பல வேலைகளை செய்தபடி மனிதர்கள் இருப்பதைக் காண்கிறேன், அவர்களுக்கு இதைப் போல எந்த கவலையும் இல்லை, அன்றாட நெருக்கடிகளைக் கையாண்டால் போதுமென இருக்கிறார்கள். எனக்கு தண்ணீரில் இருந்து ஒரு மீனைப் பிடித்து கரையில் போட்டதைப் போலிருக்கிறது; அவர்கள் எனதுலகதுக்கு சற்றும் சம்மந்தமில்லாததைப் போல இயல்பாக சிரித்தபடி கடந்து போகிறார்கள். அப்போதைய மனநிலையில் எனக்கு இவர்களைப் பார்க்கையில் வேற்றுலகவாசிகளைப் பார்ப்பதைப் போலிருக்கிறது

எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், இவர்களுடைய உலகம் நிஜமாகவே உண்மையானது தானா என ஆச்சரியம் கொள்கிறேன். என் நாவலை எழுதி முடித்த பின்னர் என் மனநிலையே எனக்கு விசித்திரமாக இருக்கும், நானும் அவர்களிடைய உலகில் ஜாலியாக இணைந்து கொள்வேன். அதுவரை எனக்கு இந்த அன்றாட உலகின் நியதிகள், அவசியங்கள், நெருக்கடிகள் அபத்தமாகத் தோன்றுகின்றன. எதுவும் எனக்குப் பொருட்டாகத் தெரியவில்லை. உடற்பயிற்சியில், டயட்டில் ஆர்வம் இழக்கிறேன். எவ்வளவு நினைவுபடுத்தினாலும் அந்ந்த நாளைக்கான வேலைகள் நினைவில் இருந்து நழுவிச் செல்லுகின்றன. எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் சற்றும் வருத்தம் ஏற்படுவதில்லை. எப்போதும் ஒரு மந்தமான சுகானுபவ நிலை. இதற்காகவே நான் சில மணிநேரங்களாவது நாவலை எழுத விரும்புகிறேன். அதை ஏதாவது ஒரு வேலை வந்து தடுக்கும் போது உலகை தொடர்ந்து சபித்தபடி அதைச் செய்கிறேன். என்னையே கடுமையாக வெறுக்கிறேன். எல்லாரையும் முறைத்தபடி இருக்கிறேன். என்னைப் பார்த்தால் அப்போது எல்லாருக்கும் கிறுக்கு என்றே தோன்றும். எனக்கும் அவர்களைப் பார்த்தால் அப்படியே இருக்கும்.


இப்படி ஒரு உலகம். அதன் கதவு மூடி விடக் கூடாதே என பிரார்த்தித்தபடி இருக்கிறேன்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...