Skip to main content

டீல் செய்வது



எல்லா காலத்திலும் எல்லா வகையான மனிதர்களும் இருப்பார்கள் என்பதை அறிவேன். ஆனால் சில குறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட வகை மனிதர்கள் அதிகமாகத் தோன்றுகிறார்கள். அந்தந்த நேரத்தின் அரசியல் சமூக பண்பாட்டு சூழலின் பிள்ளைகள் இவர்கள். ஒரு உதாரணத்துக்கு, இன்று மனிதர்களை “டீல்” செய்பவர்கள் அதிகமாகி உள்ளார்கள். இவர்கள் ஒருவித பலூன் மனிதர்கள். எனக்கு நன்கு பரிச்சயமான இலக்கிய உலகத்துக்கே வருகிறேன்.


தொண்ணூறுகள், ரெண்டாயிரத்தின் துவக்கம் வரை - அதாவது இணையதளங்கள், சமூவலைதளங்கள் பரவலாகும் வரை - எதிரும் புதிருமான இலக்கிய அரசியல் முகாம்கள் இங்கு அதிகமாக இருந்தன. இன்றும் தான் இருக்கின்றன. என்ன வித்தியாசம் என்றால் அன்று யாரை சந்தித்தாலும் விவாதம் நடக்கும், முரண்படுவார்கள், அது கைகலப்பில் கூட போய் முடியும். அல்லது மணிக்கணக்காய முரண்பட்டுவிட்டு நட்புடன் கைகுலுக்கி பிரிவார்கள். ஆனால் இந்த எதிர்ப்பும், ஆதரவும் கருத்தியல் ரீதியானதாக வெளிப்படையானதாக இருந்தது. இலக்கிய பண்பாட்டு வெளியானது ஒரு சதுரங்க பலகையில் அணிவகுக்கப்பட்ட காய்களைப் போன்றதாக இருந்தது. யார் எங்கும் நிற்கிறார்கள் என்பது எல்லாருக்கும் வெளிப்படையாக இருந்தது. இன்று அப்படி இல்லை. இன்று எல்லாரும் எல்லாருடனும் இருக்கிறார்கள். ஏனென்றால் இன்று எல்லாரும் எல்லாரையும் ‘டீல்’ செய்ய முயற்சிக்கிறார்கள். அதிகார மிக்கவர்களும் அதிகாரம் குறைவானவர்களும் பரஸ்பரம் தமக்கு பயன்படுவார்கள் என இரு தரப்புமே இன்று நம்புகிறார்கள்.


இன்று கடுமையாக ஒருவரை நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்றால் அதை வெளிப்படையாக முன்வைத்தபடி அவருடன் நல்லுறவை நிறுவ முடியாது. அதாவது நீங்கள் எழுதுகிற ஒரு பின்னூட்டம் போதும் ஒருவர் உங்களை வாழ்நாள் முழுமைக்கும் பிளாக் செய்ய. மாறாக, நீங்கள் கருத்தியல் ரீதியாக எதிர்க்கிற ஒருவரிடம் அதே எதிர்நிலைப்பாட்டின் பின்னணியில் நின்று கொண்டே நல்லுறவை பேண நீங்கள் இன்று ஒரே ஒரு காரியம் செய்தால் போதும் - பொதுவெளியில் அவரைப் பற்றி ஒன்றுமே பேசக் கூடாது. அவரிடம் இருந்து உதவி, சிபாரிசு உள்ளிட்ட பிரதிபலன்கள் வேண்டுமென்றால் அவருடன் நீங்கள் எல்லா இடங்களிலும் கூட இருந்தாலும் போதும். வெளிப்படையாக புகழவோ கொண்டாடவோ தேவையில்லை. அன்னாருடைய இலக்கிய விழாக்களில் போய் அமர்ந்து கொள்வதே போதுமானது. அவருடனான இணக்கத்தை ஒரு அதிகாரமாக காட்டிக்கொள்ள விழைந்தால் மட்டும் அவரைப் பற்றி பெரிய முரண்கள் இன்றி பேஸ்புக்கில் எழுதுவது, ஒரு கட்டத்தில் அவருக்கு முட்டுக்கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம். இத்தனை விசயங்களும் நடக்கையில் நீங்கள் அவருடன் கருத்தியல் ரீதியாக உடன்படவோ முரண்படவோ அவரை ஆதரிக்கவோ எதிர்க்கவோ மாட்டீர்கள். இது ஒரு விசித்திரமான கூட இருக்கிற, முகம் காட்டும் உறவு. ஊர்ப்பகுதிகளில் தெரிந்தவர், தெரியாதவர்களின் வீட்டு விசேசங்களுக்கு எல்லாம் தவறாமல் போய் ‘முகம் காட்டுவதைப்’ போன்றது.


இப்படியாக பிரபலங்களை, அதிகார மையங்களை ‘டீலிங்’செய்பவர்கள் இன்றைய இளையதலைமுறையினர் இடையே அதிகமாகி விட்டார்கள் என்பதைக் காண்கிறேன். கொஞ்சம் அசந்தால் இவர்கள் நம்மையே ‘டீல்’ செய்து விடுவார்கள். எந்த விதத்திலும் நமக்கு ஆதரவாகவோ எதிராகவோ நிலைப்பாடு எடுக்க மாட்டார்கள், நமக்கு எதிரான கருத்தியலை மாற்றிக் கொள்ளவும் மாட்டார்கள், ஆனால் நம்முடன் ‘இருப்பார்கள்’. நம்முடைய எழுத்தை கடுமையாக வெறுப்பவர்களாக ஒரு பக்கம் காட்டிக்கொள்வார்கள். ஆனாலும் நம்முடனே ‘இருப்பார்கள்’. 


இவர்கள் இடதுசாரியம் பேசிக்கொண்டே வலதுசாரிகளுடன் கைகுலுக்கி தேநீர் அருந்தி அவர்களை டீல் செய்வார்கள். தலித்தியம் பேசிக்கொண்டே அதற்கு நேரெதிரான முகாமில் உள்ளோரை கையாள்வார்கள். இவர்கள் போலிசாக இருந்தால் கொடூரமான கொலைகாரர்களிடமும் மாமா மச்சானாக பழகுவார்கள். கடும் சாதி எதிர்ப்பாளர்களாக இருந்தால் தீவிர சாதி ஆதரவாளர்களை ‘புரோ’ என்று அழைத்து தோளை அணைப்பார்கள். இவர்கள் பாசாங்காளர்கள் அல்ல. நம்பாத ஒன்றை நம்புவதாக பாவிப்பதே பாசாங்கு. ஆனால் இவர்களோ ஒன்றை நம்பி அதற்கு தொடர்பில்லாமல் மற்றொன்றை செய்கிறார்கள்.


 இது ஒரு புதிய பின்நவீன அணுகுமுறை. இவர்கள் தம் கொள்கையில், சித்தாந்தத்தில், நிலைப்பாட்டில் தீவிர பிடிப்பு கொண்டவர்கள். நமக்கு இவர்களுக்கும் ஒரே வித்தியாசம் இவர்கள் ‘மனிதர்கள் வேறு கருத்தியல் வேறு’ என்று நம்புகிறார்கள் என்பது.


இதன் பொருள் இவர்கள் மனிதநேயர்கள் என்றல்ல. மனிதர்களை இவர்கள் மனிதவளமாக பாவிப்பார்கள். மனிதர்களுக்குள் கருத்தியலோ நம்பிக்கைகளோ சாரமாக இல்லை. கருத்தியலோ நம்பிக்கையிலோ மனிதர்கள் அணிகிற வேடங்கள் என நினைக்கும் இவர்கள் கருத்தியலும் நம்பிக்கைகளும் கூட சாரமற்றவை என நினைக்கிறார்கள். அதனாலே கருத்தியலை ஒரு அரூபமான வஸ்துவாக, வாழ்வுடன் தொடர்பற்ற சங்கதியாக, அதிகாரத்தை அடையும் கருவியாக பார்க்கிறார்கள். கருத்தியலை ஒரு ‘மிதக்கும் குறிப்பானாக’ இவர்கள் பாவிக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் ஒரு அடையாளப்பட்டி, ஒரு அரசியல் பதாகை, ஒரு அனுமதிச்சீட்டு. யாரும் யாரையும் பயன்படுத்தலாம், அதைக் குறித்து குற்றவுணர்வு கொள்ளத் தேவையில்லை, ஏனென்றால் பழைய அர்த்தத்தில் இன்று மனிதன் என யாருமே இல்லை என இவர்கள் நினைக்கிறார்கள். இவர்கள் நம்மில் ஒரு பகுதி தான். பேச்சை, எழுத்தை வெறும் தகவலாக, சமூகமாக்கல் மார்க்கமாக மட்டுமே பாவிக்கிற இன்றைய நடைமுறை, சூழல் இவர்களை உற்பத்தி செய்துள்ளது. 


ஒருவித பலூன் மனிதர்கள் இவர்கள். நாம் எங்கு போனாலும் கூடவே மிதந்து வருவார்கள். காற்று வீச வேண்டும், அது சாதகமான திசையில் அடிக்க வேண்டும். அவ்வளவு தான். அத்திசையில் மிதக்கத் தொடங்குவார்கள். இன்று நாம் மிகுந்த தனிமையில் இருக்கிறோம். நமக்கு இன்று இத்தகைய பலூன் மனிதர்கள் அதிகமும் தேவைப்படுகிறார்கள். நாம் போகுமிடமெங்கும் தலைக்கு மேல் இவர்கல் வருவது காண நமக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...