Skip to main content

கோலியின் அதிர்ச்சி முடிவும் அடுத்தது யாரெனும் கேள்வியும்

விராத் கோலி ஒரு மகத்தான டெஸ்ட் தலைவர். டெஸ்ட் அணித்தலைமையில் இருந்து விலகுவதாக அவர் எடுத்திருக்கிற இம்முடிவு அதிர்ச்சியளிக்கிறது! ஒரு விதத்தில் இதற்கு ஜெய் ஷா உள்ளிட்ட மோசமான நிர்வாகிகள் தாம் பொறுப்பேற்க வேண்டும்.

கோலி தன் முடிவை மாற்றிக் கொள்வார் என நான் நம்பவில்லை ஆகையால் அடுத்த தலைவர் யாரென தேர்வாளர்கள் சிந்திக்க வேண்டும். ரோஹித் அடிக்கடி காயம்பெற்று காணாமல் போய் விடுவதால் அவரை அனைத்து வடிவங்களுக்கும் தலைவராக்குவது சமயோஜிதமான முடிவு அல்ல. 

அதே நேரம் கெ.எல் ராகுலின் அணித்தலைமையும் என்க்குப் பிடிக்கவில்லை. ராகுல் இன்ஸமாம் உல் ஹக்கைப் போன்றவர். சிறந்த பேட்ஸ்மேன், ஆனால் இயல்பான தலைமைப் பண்போ, நடைமுறை புத்திசாலித்தனமோ அனைவரிடமும் நன்றாகப் பேசி உற்சாகப்படுத்தும் இயல்பு கொண்டவரோ அல்ல. அவர் திட்டமிடுதலில் மக்கு என்பதை ஐ.பி.எல்லில் கண்டிருக்கிறோம். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அவர் தலைமை ஏற்ற போது அவருக்கு அணியை தன் சொல்லுக்கு ஏற்ப வழிநடத்தும் ஆளுமையோ சந்தர்பத்துக்கு ஏற்ப யுக்தி வகுக்கும் தந்திரமோ இல்லை எனக் கண்டோம். அவருடைய தலைமை ஸ்டைல் இங்கிலாந்தின் ரூட்டைப் போன்றது. ரூட் எவ்வளவு மட்டமான தலைவர் என நமக்குத் தெரியும். ஒரு தலைவர் தோல்வியை தவிர்க்க நினைக்கலாம், ஆனால் சதா தோல்வியை எண்ணி பயந்தபடி களத்தடுப்பை அமைப்பது மோசமானது. ராகுலை நம்பி அணியை ஒப்படைப்பது நிம்மி அக்காவை நிதியமைச்சராக்கியதைப் போன்றது. 

ராகுலை மறந்து விட்டு ரிஷப் பண்டை ஒருநாள் வடிவில் துணைத் தலைவராக்க வேண்டும். ரிஷப் வியூகம் வகுப்பதில் திறமையானவர் அல்ல, ஆனால் அணியிடம் சரியாக தன் முடிவுகளைக் கொண்டு சென்று அனைவரிடமும் கலகலப்பாக பழகி உற்சாகப்படுத்த அறிந்தவர். ராகுல் ஒரு introvert என்றால் ரிஷப் ஒரு extrovert. தலைவர்களைப் பொறுத்தமட்டில் extrovertகளே தோதானவர்கள்.

டெஸ்ட் போட்டிகளில் அஷ்வினையோ பும்ராவையோ தலைவராக்கலாம். இருவரில் அஷ்வினே மேலானவர் என்றாலும் அணிக்குள் அவருக்கு எந்தளவுக்கு ஆதரவிருக்கும் எனத் தெரியவில்லை. பொதுவாகவே தமிழர்களை இந்திய அணி நேசிப்பதில்லை. அதுவும் வாயாடித் தமிழர்களை. மற்றொரு சிக்கல் அஷ்வினால் இன்னும் எத்தனை வருடங்கள் ஆட முடியும் என்பது.

ரோஹித் இப்போதைக்கு ஒருநாள் வடிவில் மட்டும் தலைமை தாங்கி சாதிக்கும் பட்சத்தில், டெஸ்ட் போட்டிகளில் அவர் குறைவாக ஆடி ஒருநாள் வடிவில் அதிகம் ஆட வைத்தால், அவரது உடற்தகுதி மேம்படும், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நீடிப்பார்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...