Skip to main content

‘தியாகச் செம்மல்’ சயானும் நக்கீரனும்



இந்த முறை சயானை பேட்டி எடுக்கும் போது நக்கீரன் பிரகாஷ் சற்று ஓவராகத் தான் போய் விட்டார் - சயான் தவ வாழ்வு வாழ்ந்தவர், சிறையில் படாத பாடெல்லாம் பட்டவர் என்று பேசிக்கொண்டே அவர் போகும் போது ஏதோ மகாத்மா காந்தியைப் போல மக்களுக்காக போராடி சிறைசென்றவர் என்று சொல்லி விடுவாரோ என பயந்தேன். நல்லவேளை அந்த எல்லைக்கு செல்லவில்லை.


சயானின் குடும்பம் கொல்லப்பட்டது ஒரு துயரமே. ஆனால் பாம்புடன் விளையாடினால் கொத்துப்படத் தான் செய்யும். கொடநாட்டில் கொலை நடந்த உடனே மற்ற கூலிப்படையினரைப் போல சயான் உடனடியாக சரணடையத் தயாராக இல்லை. ஒருவேளை அவர்களைப் போல் அல்லாமல் சயானுக்கு இந்த பிரச்சனையின் ஆழம், அதன் பொருளாதார மதிப்பு, அரசியல் பாதிப்புகள் நன்கு தெரிந்திருக்கலாம். ஆக, குடும்பத்தை விட்டு வருகிறேன் என கேரளாவுக்கு தப்பிச் செல்கிறார். இத்தனை ரகசியங்களுடன் அவர் போவது ஆபத்தானது என உணர்ந்து அப்போதைய முதல்வரும் அவரது சகபாடிகளும் லாரி வைத்து அவர் போன காரை வழியிலே தூக்கி இருக்கலாம். சரியாக அவர் எங்கே போகிறார் என டிராக் செய்ய போலீஸ் இல்லாமல் முடியாது. சயானின் கார் விபத்தாகி பதினைந்து நிமிடங்களில் அங்கு வரும் போலிசார் அவருடைய செல்போனைத் தான் தேடி எடுத்துப் போகிறார்கள். ஆக கூலிப்படையை அனுப்பி பின்னாலேயே போலிசும் இருந்திருக்கிறது. 


இவ்வளவு நடந்திருந்தாலும் சயான் ஒன்றும் அப்பாவி அல்ல. அவருடைய நீண்ட கால ‘போராட்டம்’ ஒன்றும் நீதிக்காக அல்ல, தன் இழப்புக்கு ஈடாக ஒரு மிகப்பெரும் தொகையை அவர் இ.பி.எஸ், வேலுமணி தரப்பிடம் இருந்து எதிர்பார்த்து கிட்டாமல் போயிருக்கலாம். நடுவே திமுக சார்பு வக்கீல்கள் அவருக்கு உதவ வர, அதிமுக இவரை ஒழித்துக்கட்டியே ஆவது என களமிறங்குகிறது. தடுத்தாடுவது, சிங்கிள் எடுப்பது என இருந்தவர் இப்போது ஆட்சி மாறியதும் பும்ரா போல இறங்கி வந்து தைரியமாக சிக்ஸர் அடிக்கிறார். எனக்கு அந்த பேட்டியை பார்த்த போது இப்போதும் அவர் எதிர்பார்ப்பது ஒரு பலமான நஷ்ட ஈட்டையே எனத் தோன்றியது.


இன்னொரு விசயம் - ஒரு பக்கம் எடப்பாடியை குற்றவாளி என சித்தரித்து விட்டு சயானை நல்லவாக நக்கீரன் காட்ட முயல்வது அப்பட்டமான அபத்தம். தேவையில்லாமல் ஒரு காவலாளியை அடித்து தலைகீழாக தொங்க விட்டு அவன் சாவுக்கு காரணமாகி இருக்கிறார்கள். செத்துப் போனவருக்கு குடும்பம் இல்லையா? அது உயிர் இல்லையா? சயானின் மனைவி, குழந்தை கொல்லப்பட்டால் அது மட்டும் தான் இழப்பா? இது குறித்து எந்த குற்றவுணர்வோ வருத்தமோ சயானிடம் உள்ளதாகத் தெரியவில்லை. அவர் கடவுள் தன்னைக் காப்பாற்றுவார் என நம்புவதாக நக்கீரன் பிரகாஷிடம் சொல்லுகிறார். அப்படி கடவுள் உங்களைக் காப்பாற்றினால் அவர் கடவுளே இல்லை என சொல்லத் தோன்றுகிறது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...