Skip to main content

ஒரு சுடரொளி!


ஒரு எழுத்தாளனாக என் ஆசான் எப்போதுமே ஜெ.மோ தான். ஒரு பதின்வயதினனாக அவரை அணுகி கவனிக்க இயன்றதே என்னை பின்னாளில் இப்படி ஒரு எழுத்தாளனாக்கியது.
இவையெல்லாம் ஜெ.மோ எனும் ஆசிரியர் எனக்குக் கற்றுத் தந்தவை:

1) ஒரு எழுத்தாளன் தன் வாழ்க்கையை முழுக்க எழுத்தை சுற்றியே அமைத்துக் கொள்ள வேண்டும்.
2) சும்மா புகார் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது.
3) வேண்டியதை விடா முயற்சியால் அடைய வேண்டும்.
4) எதையும் நம்பிக்கையுடன் உறுதிபட சொல்ல வேண்டும்.
5) நிறைய எழுத வேண்டும்.
6) தினமும் எழுத வேண்டும்.
7) தமிழைத் தாண்டியும் வாசித்து, இலக்கியத்தைத் தாண்டியும் பல ஆர்வங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
8) வாசகனை சமமாக நடத்த வேண்டும்.
9) இளம் படைப்பாளிகளை தோளோடு அணைத்துக் கொள்ள வேண்டும்.
10) உலகையே மறந்து இலக்கியம், புத்தகங்கள், அறிவுத்துறைகள் பற்றி பேசிக்கொண்டிருக்க வேண்டும். 
11) யார் செத்தாலும் கவலைப்படாமல் உலகம் சுற்றுகிற அச்சு நம் எழுத்தே என நம்ப வேண்டும்.
12) பணம் சம்பாதித்தாலும் அதில் பற்றுக் கொள்ளல் ஆகாது.
 13)லௌகீகத்தில் சற்று தத்தியாக இருந்தால் தப்பில்லை.

14) நாம் நம்புவதே உண்மை எனக் கருதி செயல்பட வேண்டும் - அப்போது தான் செயலூக்கம், ஆற்றல் கிடைக்கும்.

15) பெண்கள் விசயத்தில் காதலி / துணைவி - தோழியர் என ஒரு கராறான பாகுபாட்டை பேண வேண்டும். உணர்ச்சிகள் அணை உடைத்தாலும் மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவே பிறருக்கு நாம் தரும் கண்ணியம், மரியாதை. 

16) நம்புகிற லட்சியத்தை எப்போதும் இறுகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

ஜெ.மோவிடம் நான் கற்றுக் கொள்ளாதவை:
1) சுய ஒழுக்கம் - கராறாக திட்டமிட்டு வாழ்க்கையை நடத்த முடிந்ததில்லை. ஆனால் விழித்திருக்கும் நேரத்தை கணிசமாக எழுத்துக்கு குருதிக்கொடை கொடுத்து விடுகிறேன்.
2) உடல் நலனைப் பேணுவது - உடற்பயிற்சியில் ஈடுபட்டால் எழுதும் ஆர்வம் குறைந்து விடுகிற ஒரு வினோத சிக்கல் எனக்குண்டு.
3) ஆசான் குடிக்கவே கூடாது என வலியுறுத்துபவர்.
எனக்கு மதுவில் ஆர்வம் என்றைக்குமே இருந்ததில்லை. ஆனாலும் போரடிக்கும் போது, பெரும்பாலும் மாதம் ஒருமுறை குடிக்கிறேன். 

ஜெ.மோவிடம் நான் தொடர்ந்து மறுப்பவை:
1) சமூக, அரசியல் கருத்துக்கள் - அவரிடம் உள்ள காழ்ப்பினாலோ வேறு ஆதாயங்களுக்காகவோ நான் அவரை விமர்சித்து சில ஆயிரம் பக்கங்களை எழுதவில்லை (தொகுத்தால் ஒரு புத்தகம் அளவுக்கே வந்து விடும்.), மாறாக என் கொள்கை எப்போதுமே அவரிடம் இருந்து மாறுபட்டது. நான் கலை இலக்கிய பெருமன்ற நண்பர்களிடம் இருந்து கற்றுக் கொண்ட கொள்கை அது. ஆக அவரைப் படிக்கும் போதெல்லாம் கடுப்பில் மறுத்து எழுதும் வழக்கம் நீண்ட காலமாக இருந்து வந்தது. இலக்கிய கொள்கையைப் பொறுத்தமட்டில் அவர் இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் வரை இங்கிலாந்தில் பிரசித்தமாக விளங்கிய லிபரல் ஹியூமனிசப் பள்ளியை சேர்ந்தவர். நான் கடுமையாக வெறுக்கிற ஒரு இலக்கியப் பள்ளி அது. ஆக நான் அவரிடம் இலக்கிய விமர்சனங்களில் முரண்படுவதும் இயல்பே. மற்றபடி தனிப்பட்ட கோபதாபம், கசப்பு ஏதுமில்லை - ஒரு ஆசான் நம் நெஞ்சில் சுடர் விடும் அகல் விளக்கு. அவரை எப்படி வெறுக்க முடியும்?

அந்த சுடரொளிக்கு இந்த ஆசிரியர் தினத்தன்று நன்றியும் அன்பும் தெரிவிக்கிறேன்!

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...