Skip to main content

“காயல்”




கடந்த முறை சென்னை வந்திருந்த போது தமயந்தியின் “காயல்” திரைப்படத்தை அதன் கரட்டு வடிவில் (uncut) பார்த்தேன். சரியான ஒரு தளத்தில் வெளியாகி போதுமான கவனத்தை பெறும் பட்சத்தில் அப்படம் இரண்டு விசயங்களை சாதிக்கும் எனத் தோன்றியது: 


1) தமிழ் சினிமாவில் பெண்மொழியை வலுவாக நிறுவும் படமாக இருக்கும்.


பெண் மொழி என்றால் என்ன? பொதுவாக நமது படங்களில் வெளிப்படுவது ஆண்களின் நோக்கே (male gaze). பெண்களை மட்டுமல்ல ஆண்களை, வயதானவர்களை, பலவீனமானவர்களை, ஊனமுற்றுவர்களை, குடிகாரர்களை, காமாந்தகர்களை, சாகசக்காரர்களை, தியாகிகளை, தலைவர்களை நாம் ஆண்களின் பார்வை வழியாகத் தான் சினிமாவில் காண்கிறோம். அதனாலே வன்முறையை மிகுதியாகக் கொண்டாடுவதாக, ஆண்களை அவர்களுடைய உடலைக் கடந்து ஊடுருவி தரிசிக்க்காததாக நமது சினிமா இருக்கிறது. நமது சினிமா என்றால் தமிழ் சினிமா மட்டுமல்ல, உலகம் முழுக்க சினிமாக்கள் இப்படித்தான் இருக்கின்றன. உலகம் முழுக்க கொண்டாடப்பட்ட Blue is the Warmest Color எனும் லெஸ்பியன் படத்தில் கூட ஆண் நோக்கே வெளிப்பட்டது. கீஸ்லாவஸ்கி போன்ற விதிவிலக்கான சில இயக்குநர்களின் சினிமாக்களில் பெண்மொழி காட்சிகளாக, உணர்ச்சிகளாக ஓரளவுக்கு வெளிப்பட்டதுண்டு. குறிப்பாக A Short Film About Loveஇல் அந்த பதின்வயது நாயகனின் பாலியல் சிக்கல் அவனுடைய நோக்கை அவர் தொலைநோக்கியின் சிறிய சட்டகத்தின் மூலம் உணர்த்தியிருப்பார். அவன் அதே நேரம் சுலபத்தில் மனம் வெதும்பி உடைந்து விடுகிறவனாக இருக்கும் போது அவனுடைய மீட்சி ஒரு பெண் நோக்கில் சாத்தியப்படுவதை சித்தரித்திருப்பார். கீஸ்லாவஸ்கியின் பெரும்பாலான படங்களில் இந்த இரு நோக்குகளுக்கு இடையிலான போராட்டமே இருக்கும். 


இந்தியாவில் பெண் நோக்கை தன் திரைமொழியாகக் கொண்டு வந்த ஒரு அற்புதமான இயக்குநர் மீரா நாயர். குறிப்பாக அவருடைய Namesake. அனுஹாசன், சுஹாசினி, ரேவதி ஆகியோரை பெண் இயக்குநர்களாக இங்கு பொருட்படுத்தி பேச முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் மலையாளத்தில் அஞ்சலி மேனன் முக்கியமானவர், ஆனால் அவரிடமும் பெண்களின் ஆளுமை, சுதந்திரம், அந்தரங்க உலகம் ஆகியவை ஆண்நோக்கிலே சொல்லப்பட்டிருக்கும், அவர் வணிக வெற்றி பெற்றதற்கு அதுவும் ஒரு பிரதான காரணம். Bangalore Days படத்தில் துல்குர் சக்கர நாற்காலியில் இருக்கும் நித்யா மேனனை கையில் தூக்கி எடுத்துச் செல்லும் காட்சியில் தெறிக்கும் உடல்சார்ந்த “ஆண்மை செருக்கு” ஒரு உதாரணம். இந்த பின்னணியில் தான் தமயந்தியின் “காயல்” வருகிறது: அவர் முதன்முதலாக ஆண் பாத்திரங்களை பெண்களின் பார்வையில் இருந்து உணர்வுவயப்பட்டவர்களாக, திமிர்த்தனம் இல்லாத கண்ணியமானவர்களாக, நெகிழ்வானர்களாகக் காட்டுகிறார். கோபப்பட்டு வெறிப்பேச்சு பேசுகிறவர்களாக, சவால் விடுகிறவர்களாக அல்லாமல், சுலபத்தில் உடைந்து அழுகிறவர்களாக இந்த ஆண்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு அபாரமான மென்மை, அழகியல் உள்ளது. முதன்முறையாக ஒரு இயக்குநர் ஆண்களின் உள் உலகை சித்தரிப்பதில் நியாயம் செய்திருக்கிறார் என நினைக்கிறேன். இன்னொரு பக்கம், சாதிய வெறியும், அழுத்தமும் படைத்தவராக நாயகியின் தாயின் பாத்திரம் வருகிறது. இதுவும் ஒரு தனித்துவம் தான் - “காதல்” படத்துக்குப் பிறகு ஆதிக்கசாதிப் பெண்களை எதார்த்தமாக சித்தரிக்கும் ஒரு படம்.


2) ஸ்வாகதா கிருஷ்ணன் எனும் பாடகிக்குள் ஒரு திறமையான துறுதுறுப்பான நடிகை இருப்பதை தமயந்தி கண்டுபிடித்து காட்டி இருக்கிறார். பியா பஜ்பயி எனும் நடிகையை நினைவிருக்கும். ஸ்வாகதா அவரை நினைவுபடுத்துகிறார். அவரை விட திறமையான சரளமான நடிகையாக இருக்கிறார். இப்படம் கவனம் பெறும் பட்சத்தில் அவர் நல்ல பெயரையும் நிறைய ரசிகர்களையும் பெறுவார்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...